16 July 2019

#சொக்கா



அலுவலகத்தில் பிசியாக இருந்த விஷ்ணுவின் செல்போன் செல்லமாக ஜெஸ்சி குரலில் சிணுங்கியது.
கான்ட்டாக்ட் லிஸ்ட்டில் இல்லாத எண்ணாக இருந்தது.
பச்சையை மேலே தள்ளிவிட்டு, ‘‘ஹலோ’’ என்றான்.
மறுமுனையில் சித்ரா எல்லாம் தோற்றுப்போவார். அவ்வளவு ஹஸ்கி குரலில் ஒரு இளம்பெண் பேசினார்.
‘‘சார் மிஸ்டர் விஷ்ணுங்களா?’’ ஹஸ்கி கேட்டது.
‘‘ஆமாம்... எங்கப்பா சூட்டின பேர் அப்படித்தான் என்று சர்டிபிகேட் சொல்லுது’’ கூறினான்.
‘‘நீங்க ரொம்ப நாட்டியாக இருப்பீங்க போல சார்...’’ செல்லமாக சிணுங்கினாள் ஹஸ்கி.
‘‘சொல்லுங்க... உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு...’’ வழிந்தான் விஷ்ணு.
‘‘சார்... நான் கிளப் நாகேந்திரால இருந்து பேசுறோம்’’ ஹஸ்கி கூற ஆரம்பித்தாள்.
‘‘அதுக்கென்னா பேஷா பேசுங்க... உங்க கிளப்புக்கு ஏதாவது டொனேஷன் குடுக்கணுமா?’’ கேட்டான் விஷ்ணு.
‘‘சார்... ஒரு ரெண்டு நிமிஷம் நான் பேசுறதை முழுசா கேளுங்களேன்’’ மீண்டும் செல்லம் கொஞ்சியது ஹஸ்கி.
‘‘சார் நீங்க போன வாரம் இ.யூ. போயிருந்தீங்கள்ல... அங்க எங்க கிளப் லக்கி வின்னர்ஸ் பார்மை நீங்க பில்லப் பண்ணீங்கள்ல... அதுக்கு உங்களுக்கு மெகா பிரைஸ் விழுந்திருக்கு சார்... நீங்க பெரிய அதிர்ஷ்டசாலிதான்’’ ஹஸ்கி கூறியது.
‘‘அட்ராசக்க... அட்ராசக்க... என்ன பிரைஸ் மேடம் விழுந்திருக்கு?’’ கேட்டான் விஷ்ணு.
‘‘சூப்பர் பிரைஸ் சார். குறைஞ்சது ஐம்பாதாயிரம் இருக்கும். உங்க வொய்ப் பார்த்தாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க... ’’
‘‘அப்படி என்னம்மா பிரைஸ்?’’
‘‘உங்களை சர்ப்பிரைஸ் பண்ண நாங்க திட்டமிட்டிருக்கிறோம். அதுவும் உங்களுக்கு பிரைஸ் மட்டும் கிடையாது சார். உங்களுக்கு விருந்து குடுத்து நாங்க பிரைஸ் குடுக்க போறோம்... ஹேப்பியா சார்?’’
‘‘என்னது விருந்துமா... நீங்க கிண்டல், கிண்டல் பண்ணலியே...’’ கேட்டான் விஷ்ணு.
‘‘கட்டாயாமா இல்ல... பிரைஸ் விழுந்தவங்களுக்கு எங்க சார்பில கிளப் கவுரப்படுத்திதான் அனுப்புவோம். அந்த வகையில நீங்களும் அதிர்ஷ்டசாலிதான். நீங்க உங்க வொய்ப்போட அல்லது நண்பரோட வந்து விருந்து சாப்பிட்டு, பிரைச வாங்கிட்டுப் போகலாம்’’
‘‘சரி நீங்க எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி பிரைஸ் தர்றீங்க?’’ (நான் எல்லாத்திலேயும் விவரமானவன்ல்ல) என்று நினைத்துக் கொண்டான் விஷ்ணு.
‘‘எங்க கிளப் விளம்பரத்துக்காக மக்களுக்கு இந்த மாதிரி பிரைஸ் குடுக்கிறோம். டிவியில விளம்பரம் போட்டா கூட நிறைய செலவு ஆகுமே... அதை நேரடியா மக்களுக்கு குடுப்போம்ன்ற நல்லெண்ணத்திலத்தான் இப்படி பண்றோம் சார்’’
‘‘ரொம்ப நல்ல மனசுமா உங்க கிளப்புக்கு. சரி எங்க வந்து விருந்து சாப்பிடணும்....? அப்படியே பிரைஸ் குடுப்பீங்கல்ல?’’ கேட்டான் விஷ்ணு.
‘‘கட்டாயம் குடுப்போம் சார்.... நீங்க உங்க வொய்ப்போட வர்றீங்களா சார்?’’
‘‘இல்லம்மா... நான் என் பிரண்டோட வர்றேன்... எங்கே போனாலும்  நாங்க  ரெண்டு பேரும் சேர்ந்துதான் போவோம்’’ காலரை தூக்கிவிட்டுக் கொண்டு சொன்னான் விஷ்ணு.
எதிரே இருந்த டேபிளில் பைல் பார்த்துக் கொண்டிருந்த குமாரை பார்த்து, ‘உன்னைப்பத்தித்தான் சொல்லிட்டு இருக்கேன்’ என்பதுபோல் போனையும், அவனையும் பார்த்து சைகை காட்டினான் விஷ்ணு. குமாரும் அங்கிருந்தபடி கட்டை விரலை தூக்கி காண்பித்தான்.
‘‘சரி சார்... நீங்க வர்ற ஞாயிற்றுக்கிழமை மறக்காம விஜிபிக்கு  பக்கத்தில இருக்கிற புளூமூன் ரெசார்ட்டுக்கு வந்துடுங்க... உங்க பிரண்டையும் கூட்டிட்டு வாங்க  சார்’’
‘சரிம்மா... கட்டாயம் வந்துடுறோம்... பிரஸை் ரெடி பண்ணி வைங்க’’ என்றான் விஷ்ணு.
‘‘உங்களுக்காக ரெடியா இருக்கு சார்...  மறக்காம வாங்க.  நான் வச்சிடுறேன் சார்’’ என்று சிணுங்கிய ஹஸ்கி.
‘‘சரிம்மா’’ என்றான் விஷ்ணு.
போனை வைத்தவுடன் குமாரிடம் சென்று விஷயத்தை தெரிவித்தான்.
‘‘மச்சி இது என்னமோ பிராடு வேலை மாதிரி தெரியுது... எவனாச்சும் சும்மா நமக்கு விருந்து போட்டு ஐம்பதாயிரத்துக்கு பரிசு குடுப்பானா? வேண்டாம்டா... அப்படியே விட்டுடு’’ என்றான் குமார்.
‘‘டேய் சண்டே அன்னைக்கு ஒருத்தன் விருந்து போட்டு பரிசு குடுக்கிறேன்கிறான்... அத வாங்கிட்டு வர்றதவிட்டுட்டு நீ  என்னடா இப்படி பயப்படுறே... சண்டே போறோம்... தூக்குறோம்’’ உற்சாகமாக கூறினான் விஷ்ணு.
‘‘சரி உன் இஷ்டம்’’ என்றான் குமார்.
ஞாயிற்றுக்கிழமை  காலை.
நண்பர்கள் இருவரும் வழக்கமாக கூடும் இடத்தில் கூடினர்.
‘‘குமாரு... நாம பைக்கில போய் பிரைஸ் வாங்குறது நல்லா இருக்குமா... டிப்டாப்பா கார்ல போய்  இறங்குவோம் மச்சி. அதுவும் இல்லாத ஐம்பதாயிரம் ரூபா பிரைச பைக்கில எப்படி வச்சிட்டு வர்றது’’
‘‘டேய் பிசாத்து பிரைஸ் குடுக்கப்போறானுங்க… அதுக்கு கார்ல வேற போகணுமா?’’
‘‘விட்றா... விட்றா எவ்வளவோ செலவழிக்கிறோம்... கெத்தா போய் இறங்குவோம் மச்சி...’’ என்று கூறிவிட்டு கால்டாக்சி புக் செய்தான் விஷ்ணு.
‘‘மச்சி... அப்புறம் ஒரு சின்ன ஹெல்ப். என்கிட்ட ஒரு காந்தி கூட  இல்ல... அதனால நீதான் செலவழிக்கணும். இன்னைக்கு பூரா உன் மண்டகப்படிதான்’’ என்றான் விஷ்ணு.
‘‘என்னடா இன்னைக்கு பூசாரி,  என்றைக்கு இல்லாத திருமுகமாக தலைய ஆட்டி ஆட்டி பேசுதேன்னு நினைச்சேன்...   நான் தான் இன்னைக்கு ஆடா. சரி குடுத்து தொலைக்கிறேன்’’ நொந்துக் கொண்டான்  குமார்.
‘‘அப்படி எல்லாம் சலிச்சுக்கப்படாது நண்பா...’’ என்று விஷ்ணு கூறுவதற்குள் கார் வந்து நின்றது.
இருவரும் ஏறி ரெசார்ட்டுக்கு சென்றடைந்தனர்.
வாசலிலேயே  இரண்டு இளம்பெண்கள் கையில் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார்கள். இவர்களை பார்த்ததும், அருகில் வந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு, நெற்றியில் திலகமிட்டார்கள்.
டாகலென்று குமாரின் சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாயை எடுத்து தட்டில்போட்டான்  விஷ்ணு.
‘‘தேங்க்யூ சார்’’ என்று குளோசப் புன்னகையை காட்டினர் அந்த இளம்பெண்கள்.
அவர்களை பார்த்துவிட்டு திரும்ப, குமார் முறைத்துக் கொண்டிருந்தான்.
‘‘விடு... மச்சி... ஆரத்தி எடுத்தா காசு போடனும். அதுதான் சம்பிராதாயம்’’ என்றான் விஷ்ணு.
‘‘அத உன் பையில இருந்து போட்டிருக்கனும்டா… எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு... ’’ என்று நறநறவென்று பல்லைக்கடித்து காட்டினான் குமார்.
அவனை அப்படியே அணைத்தபடி உள்ளே கூட்டிச் சென்றான் விஷ்ணு.
குளிரூட்டப்பட்ட ஹாலில் வட்டமேஜைகள் போடப்பட்டு ஜோடி, ஜோடியாக உட்கார்ந்திருக்க, அவர்களிடம் ஒரே மாதிரி யூனிபார்ம் போட்ட பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
உள்ளே நுழைந்த விஷ்ணுவையும், குமாரையும் பார்த்தவுடன் எங்கிருந்த ஒரு பேரர் ஓடிவந்து ஆரஞ்சு குளிர்பானத்தை கொடுத்தான். வெயிலுக்கு இதமாக இருந்த குளிர்பானத்தை குடித்து முடித்தவுடன், ஒரு அழகு தேவதை அசைந்து வந்து,  ‘‘உங்க போன்ல பிரைஸ் விழுந்ததுக்கான ஐடி வந்திருக்குமே, அந்த நம்பர சொல்லுங்க சார்’’என்றது.
விஷ்ணு நம்பரை பார்த்து சொல்ல, அந்த தேவதை யாரிடமோ பேச, அங்கு இன்னொரு தேவதை வந்தது. முதல் தேவதையை காட்டிலும் இது ரெண்டு இஞ்ச் பவுடர் கூடுதலாக அப்பியிருந்தது.
‘‘ஹூயூமர் விஷ்ணு சார்... நான் தான் உங்கக்கிட்ட போன்ல பேசினேன்’’ என்று கொஞ்சியது அந்த தேவதை.
‘‘ஓ... நீங்கதானா...  போன்லவிட நேர்ல  நீங்க ரொம்ப  அழகா இருக்கீங்க...’’ என்றான் விஷ்ணு.
‘‘சார்... போன்ல  எப்படி சார் என் முகம் தெரியும்... இருந்தாலும் நீங்க ரொம்ப நாட்டி சார்’’ என்றது தேவதை.
பேசிக் கொண்டே  குமாரை  பார்த்த தேவதை, ‘‘சார் இவர் உங்க நண்பரா?’’ என்றாள்.
‘‘சேச்சே... இது என் பிஏ. பெயர் குமார். என் நண்பர் கொஞ்சம் பிசியாக இருக்கார் அதனால வர முடியல…’’ என்றான் ஸ்டைலாக.
அந்தப்பக்கம் குமார் முறைத்துக் கொண்டிருந்ததை கண்டுக்கொள்ளாமல், தேவதையிடம், ‘‘சரிம்மா.. நீங்க ஏதோ  பிரைஸ் தர்றேன்னு சொன்னீங்களே... அதை குடுத்தா போய்ட்டே இருப்போம்’’ என்றான் விஷ்ணு.
‘‘கொஞ்சம் இருங்க சார்...’’ என்று கூறிவிட்டு, யாரையோ அழைத்தாள்.
அந்தப்பக்கத்தில் இருந்து ஒரு டை கட்டிய ஆசாமி வந்தான். இவர்களை பார்த்து, ‘‘குட்மார்னிங்  ஜெண்டில்மேன்’’ என்றான்.
‘‘குட்மார்னிங்’’ என்றான் விஷ்ணு. குமார், வந்தவனையும் முறைத்தபடி இருந்தான்.
‘‘இப்ப பார்த்தீங்க, எங்க நாகேந்திரன் கிளப்ல லைப் மெம்பர்ஷீப் இருக்கு... நீங்க வருஷத்துக்கு ரெண்டு வாட்டி காஷ்மீர்ல போய் ரெஸ்ட் எடுக்கலாம். உங்க கவலைகளை எல்லாம் மறந்து ஹாயா இருக்கலாம். சாப்பாட்டுல இருந்து டிரிங்ஸ் வரை ப்ரீ தான் சார்’’ என்றான் டை ஆசாமி.
‘‘காஷ்மீர்ல... வருஷத்துக்கு ரெண்டு வாட்டிடிடி....’’  என்று டை ஆசாமியிடம் கேட்டான் குமார்.
‘‘ஷூயூர் ஜென்டில்மேன்... ஆப்பிள் தோட்டத்துக்கு மத்தியில இருக்கிற எங்க ரெசார்ட்ல போய்ட்டீங்கன்னா... நீங்க உலகத்தையே மறந்துடுவீங்க...’’ என்றான் டை. அவனுடன் சேர்ந்து புன்னகைத்தான் தேவதை.
‘‘சார்... உங்க அழகுக்கும், அந்தஸ்த்துக்கும், நீங்க இந்த மாதிரி லைப் டைம் பிளாட்டினம் மெம்பர் ஷீப் எடுத்துக்கிட்டீங்கன்னா... அது உங்களுக்கு மட்டும் இல்ல சார் எங்களுக்கும் பெருமையா இருக்கும்’’ என்றது தேவதை.
பக்கத்தில் இருந்த குமாரிடம், ‘‘டேய் வெறும் பிளாட்டினம் கார்டு தானே போட்டுறலாம்டா... அப்புறம் பிரைஸ் கிடைச்சிடும் வாங்கிட்டு போய்ட்டே இருக்கலாம்’’ என்று முணுமுணுத்தான்  விஷ்ணு.
‘‘சரிம்மா... மெம்பர்ஷிப்க்கு எவ்வளவு கட்டணும்?’’ கேட்டான்  விஷ்ணு.
‘‘ஜஸ்ட்.... த்ரீ லேக்ஸ் பிப்டி தவுசண்ட்ஸ் மட்டும்தான் சார்’’ என்று சிணுங்கியது தேவதை.
‘‘என்னது மூன்றரை லட்சமா?’’ குமார் கிட்டத்தட்ட எழுந்துவிட்டான்.
அவனை ஆசுவாசப்படுத்தி அமர வைத்த விஷ்ணு, ‘‘மேடம்... இது எங்களுக்கு ஒத்து வராது. இன்னும் கொஞ்சம் கம்மியா இருக்கிறத சொல்லுங்க’’ என்றான்.
‘‘அடுத்தது கோல்டு கார்டு இருக்கு... அது வெறும் டூ லேக்ஸ் தான் சார்’’ என்றான் டை.
‘‘நெக்ஸ்ட்’’ என்றான் ஸ்டைலாக விஷ்ணு.
‘‘சில்வர் கார்டு ஒன் அண்ட் ஆப் லேக்ஸ் சார்’’ என்றது தேவதை.
அருகில் கொதித்துக் கொண்டிருந்த குமாரை பார்க்காமல், ‘‘பாஸ்’’  என்றான் விஷ்ணு.
‘‘அடுத்த குறைவான மெமம்பர்ஷீ்ப்புன்னா எச்பி கார்டு இருக்கு சார்.  அது வருஷத்துக்கு 50 ஆயிரம் ரூபா தான் சார்... ஆனா, உங்க தகுதிக்கும், அழகுக்கும் இந்த மாதிரியான மெம்பர்ஷீப் சரியா இருக்காது சார்... நீங்க கோல்டு கார்டு எடுத்தீங்கன்னாத்தான் நல்லா இருக்கும்’’ என்றது தேவதை.
‘‘இல்லம்மா நேத்துதான் ஒரு 3 குரோர்ல கான்ட்ராக்ட் எடுத்தோம். அதனால பயங்கர டைட்ல இருக்கோம். மினிமமா ஏதாவது இருந்தா சொல்லுங்க... நீங்க கெஞ்சுறத பார்த்து என்னால சும்மா போக முடியல...’’ என்றான் விஷ்ணு.
பக்கத்து சீட்டில் இருந்த குமாரின் கைகளில் இறுக்கப்பட்டுக் கொண்டிருந்த கிளாசை வாங்கி சற்று வைத்தான் விஷ்ணு.
‘‘ஓ.... சூப்பர் சார், த்ரீ குரோர்ல கான்ட்ராக்ட் எல்லாம் எடுத்திருக்கீங்க… இது என்ன பெரிய விஷயமா சார்’’ சிணுங்கியது தேவதை.
‘‘வேற வழியில்லமா… நீங்க சொல்லித்தான் ஆகணும்’’ என்றான் விஷ்ணு.
‘‘சரி சார்… இப்போதைக்கு ரொம்ப குறைவானதுன்னா... ஒரே ஒரு கார்டுதான் இருக்கு. பிரைமரி கார்டு. அது 12,500 ரூபா சார்...’’ என்றது தேவதை.
‘‘அது சரி மேடம் இப்போ என்கிட்ட காசில்லையே... நீங்க அப்புறமா வாங்கிக்க முடியுமா?’’ கேட்டான் விஷ்ணு.
‘‘கேஷ் இல்லைன்னாலும் பரவாயில்ல சார்... கார்டு கூட அக்சப்ட் பண்ணிக்குவோம்’’ என்றது தேவதை.
படாரென்னு குமாரின் பையில் இருந்த கிரெடிட் கார்டை எடுத்து குடுத்தான் விஷ்ணு.
‘‘டேய்... டேய்...  இந்த மாசம் வீ்ட்டுக்கு...’’ என்று அவன் பேச ஆரம்பிப்பதற்குள்,  அவனது வாயை பொத்திவிட்டு, ‘‘மேடம் நீங்க போய் சீக்கிரம் சுவைப் பண்ணிட்டு வாங்க’’ என்றான் விஷ்ணு.
‘‘ஷோாாா...  சுவீட்ட்ட்...’’ என்று கூறிவிட்டு எழுந்து சென்றாள் தேவதை.  பின்னாடியே டையும் கழன்று சென்றது.
‘‘மடையா கார்டுல இருக்கிற 16 ஆயிரம் ரூபாய வச்சுட்டுத்தான் இந்த மாசம் குடும்பத்த ஓட்டணும்.. அதைப்போய் தூக்கி குடுத்திட்டீயே… இப்போ பூவாவுக்கு நான் என்னடா பண்ணுவேன்?’’ கத்தாத குறையாக கேட்டான் குமார்.
‘‘விடு மச்சி… இதெல்லாம் நம்ம வரலாற்று பக்கங்கள்ல பேசப்படுறதா இருக்கும்’’ என்றான் விஷ்ணு.
தேவதை திரும்பி வந்து ஒரு ரிசிப்ட் குடுத்தது. அத்துடன் கலர், கலராக சில விளம்பர காகிதங்கள்.
‘‘சரி மேடம்… அந்த ஐம்பதாயிரம் ரூபா பிரைஸ்…’’ என்று இழுத்தான் விஷ்ணு.
‘‘ஓ… சாரி சார்…’’ என்று மீண்டும் உள்ளே சென்று அழகாக கிப்ட் பேக் செய்யப்பட்டிருந்த ஒரு பொட்டலத்தை கொண்டு வந்து குடுத்தாள் தேவதை.
‘‘இது என்ன கிப்டுமா…?’’ என்று கேட்டான் குமார்.
‘‘நீங்க எந்த ஓட்டல், ரெசார்ட், சினிமா போனாலும் யூஸ் பண்ணிக்கிறதுக்கு கிப்ட் வவுச்சர் இருக்கு சார்… ஹேப்பி தானே? கட்டாயம் சாப்பிட்டு போங்க சார்…லெப்ட்ல டைனிங்’’ என்றாள் தேவதை.
இல்லை, ஆமாம் என்று சொல்லாமல், கோணல், மாணலாக சிரித்து வைத்தான் விஷ்ணு.
தேவதை அகன்ற பிறகு பின்னால் பார்த்தான்.
கிப்ட் பேக்கை இரண்டு கைகளிலும் பிடித்தபடி, கண்கள் சிவக்க நின்றுக் கொண்டிருந்தான் குமார்.
‘‘ஷோாாாா…. சுவீட்ட்ட்ட் ’’ என்று அவனது கன்னத்தை கிள்ளி, ‘‘மச்சி நீ எப்பவுமே இப்படித்தான். எல்லாத்திலேயும் கோபப்பட்டுடுவே…’’ என்று கிப்ட் பேக்கை வாங்கிக் கொண்டு டைனிங் டேபிளுக்கு இழுத்து சென்றான் விஷ்ணு.
பிரிஞ்சி சாதத்தை பார்த்தவுடன், மீண்டும் விஷ்ணுவை பார்த்து முறைத்தான் குமார்.
‘‘டேய்… பேசாம… வீட்டில இருந்திருந்தாதா கூட பிரியாணி கிடைச்சிருக்கும்… உன்னை நம்பி வந்ததுக்கு இதுவும், இன்னணும் வேணும்டா’’ என்றான் குமார்.
‘‘இன்னும் வேணுமா…’’ என்று கேட்டுக் கொண்டே, ஒரு கரண்டியில் சிறிது பிரிஞ்சியை எடுத்து குமார் தட்டில் வைத்தான் விஷ்ணு.
‘‘டேய்…’’ என்று குமார் கத்த ஆரம்பித்தபோது, அவன் வாயில், காலி பிளவர் ரோஸ்ட் ஒன்றை வைத்தான் விஷ்ணு.
ஒருவழியாக இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வர, டாக்சி டிரைவர் பவ்யமாக கதவை திறந்துவிட்டான்.
மவுனமாக இருவரும் ஏறி அமர்ந்தனர்.
‘‘மச்சி… இவ்வளவு தூரம் வந்தாச்சு… அப்படி மகாபலிபுரம் போய்ட்டு, நம்ம ரெசார்ட்டுக்கு போய் ஒரு பீர் சாப்பிட்டு சாயங்காலம் வீட்டுக்கு போவேமே… அதுதான் கிப்ட் கூப்பன் இருக்கே’’ என்றான் விஷ்ணு.
‘‘எதையாவது பண்ணித்தொலை…’’ என்றான் கோபத்தில் இருந்த குமார்.
இருவரும் மகாபலிபுரம் டைமண்ட் ரெசார்ட்டுக்கு சென்றனர்.
ரிசப்ஷனில் அழகான பச்சைநிற பட்டுடுத்தி நின்ற ஒல்லிக்குச்சி பெண்ணிடம், ‘‘கிப்ட் வவுச்சர் ஏத்துக்கிடுவீங்க இல்ல?’’ என்றான் முன்ஜாக்கிரதையாக.
‘‘சியூர் சார்…’’ என்றாள் பணிவுடன்.
ரூமில் போய் உட்கார்ந்து, பீரை ஆர்டர் பண்ணினார்கள். ஒரு வழியாக இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தான் குமார்.
இருவரும் ரூமில் டிவியை சத்தமாக வைத்துக் கொண்டு, மைக்கேல் ஜாக்சனுக்கு ஆட்டம் போட்டார்கள். அப்படியே சாப்பிட்டு வந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டார்கள்.
எழுந்தபோது மணி 5 ஆகியிருந்தது.
‘‘மச்சி சீக்கிரம் கிளம்பு இப்போ புறப்பட்டாத்தான் வீட்டுக்கு போறதுக்கு சரியாக 8 மணி ஆயிடும்’’ என்றான் விஷ்ணு.
ரிசப்ஷனில் வந்தபோது இன்னொரு ஒல்லிக்குச்சி சிவப்பு பட்டில் இருந்தாள்.
‘‘ரூம் நம்பர் 111. பில் எவ்வளவுமா’ ’ என்றான் விஷ்ணு.
கம்ப்யூட்டரை தட்டிப்பார்த்த  சிவப்பு பட்டு 5 தவுசண்ட் ஒன்லி சார்’’ என்றாள்.
கிப்ட் பேக்கை பிரித்து, ரெசார்ட் என்று போட்டிருந்த கூப்பனை எடுத்து ஸ்டைலாக நீட்டினான் விஷ்ணு.
அதை வாங்கிப் பார்த்த சிவப்பு பட்டு, ‘‘ஓகே சார் 4 தவுசண்ட் மட்டும் பே பண்ணுங்க’’ என்றாள்.
‘‘நல்லா பாரும்மா… அது கிப்ட் கூப்பன்… இதை குடுத்தா ஒண்ணுமே குடுக்க வேண்டிதில்லன்னு… கிளப் நாகேந்திராவில சொன்னாங்களே’’ என்றான் விஷ்ணு.
‘‘இது கிப்ட் கூப்பன் இல்ல சார்… டிஸ்கவுன்ட் கூப்பன். உங்களோட டிஸ்கவுன்ட் போகத்தான் 4 தவுசண்ட்ஸ் கட்டச் சொல்றேன்’’ என்றாள்.
‘‘அப்போ இந்தாங்க… இன்னும் 4 கூப்பன். சரியா வந்துடுச்சா’’ என்றான் விஷ்ணு. அப்படியே குமாரை ஒரு பார்வை பார்த்தபடி, நாங்க எல்லாம் அந்த காலத்திலேயே என்பதுபோல் ஒரு முகபாவனையை காட்டினான்.
‘‘சார் ஒரு கெஸ்ட்டுக்கு ஒரு கூப்பன்தான்’’ என்றாள்.
‘‘நாங்க ரெண்டு பேர் இருக்கோமே… அட்லீஸ்ட் ரெண்டு கூப்பனாவது எடுத்துக்கிறலாமேம்மா’’ என்றான் விஷ்ணு.
சிவப்பு பட்டு அநியாயத்துக்கு முறைத்துக் கொண்டிருந்தது.
சற்றே திரும்பிய விஷ்ணு…. இந்த முறையும் சடாரென்று பாய்ந்து குமாரின் கிரெடிட் கார்டை எடுத்து சிவப்பு பட்டிடம் நீட்டினான் விஷ்ணு.
அவன் எடுப்பதற்கும், ஒரு விநாடி தாமதமாக குமார் தன் சட்டைப்பையை பிடிக்கவும், நான் ஜெயிச்சிட்டேன்ல என்பதுபோல் பார்த்தான் விஷ்ணு.
அப்போதுதான் விஷ்ணுவின் போன் அடித்தது.
எடுத்து பேசினான். தவறுதலாக ஸ்பீக்கர் மோடில் விழுந்துவிட, போகிறது என்று அப்படியே பேசினான்.
‘‘சார்… நாங்க கிளப் மேனியாவில இருந்து பேசுறோம்… உங்களுக்கு பம்பர் பிரைஸ் விழுந்திருக்கு சார்’’ என்றது மறுமுனையில் ஒரு தேவதையின் குரல்.
கேட்ட மாத்திரத்தில், குமாரை பார்த்தான் விஷ்ணு.
ரிசப்ஷன் டேபிளில் இருந்த பிளவர்வாஷை எடுத்து விஷ்ணுவை அடிக்க பாய, விஷ்ணு தலைதெறிக்க வாசலை நோக்கி ஓடினான்.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
x

25 June 2019

#செல்லங்கள்


செல்லங்கள்!


பி2 போலீஸ் ஸ்டேஷன் பரபரவென்று இருந்தது.
வழக்கம்போல் ஸ்டேஷன் வாசலில் இருந்த கம்பத்தில் இருந்து மாலைநேரத்து தேசிய கொடியிறக்க நிகழ்ச்சிக்காக போலீசார் தயாராகிக் கொண்டிருந்தனர்.
போலீசார் அனைவரும் கொடிக்கம்பத்தின் முன்பு நிற்க, அவர்களுக்கு தலைமை வகிக்கும் வகையில் எஸ்ஐ ஞானப்பிரகாசம் நின்றார்.
‘‘நேஷனல் பிளாக் சல்யூட்’’ என்று குரல் கொடுத்துவிட்டு, காவலர் ஒருவர் சிறிய பேண்ட் வாத்தியத்தில், கொடியிறக்க  இசையை  ஊதினார்.
அனைத்து காவலர்களும் கொடியை பார்த்தபடி சல்யூட் அடித்து நிற்க போலீஸ்்காரர் ஒருவர் கொடிக்கம்பத்தில் இருந்து, தேசியக் கொடியை இறக்கினார்.
ஸ்டேஷன் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குப்பத்து சிறுவர்கள், பேண்ட் வாத்திய இசையைக் கேட்டதும், சல்யூட் அடித்து நின்றனர்.
கொடியிறக்கப்பட்டதும், போலீசார் அனைவரும் அவரவர் நிலைக்கு வந்தனர்.
‘‘யோவ் நாளைக்கு சுதந்திரம் காலையில 7 மணிக்கு எல்லாம் கொடி ஏத்திடணும்னு இன்ஸ்பெக்டர் சொல்லியிருக்கார். எல்லா சாமானையும் வாங்கி வச்சிட்டீங்க இல்லே?’’ என்று கான்ஸ்டபிள்களை பார்த்து கேட்டார் எஸ்ஐ ஞானப்பிரகாசம்.
‘‘ஆமாங்கய்யா… சட்டையில குத்திக்கிற கொடிக்கட்டு 2, புதுக்கயிறு எல்லாம் வாங்கியாச்சுங்கய்யா… புதுக்கொடி ஏத்தினா…கஞ்சி போட்டிருக்கிறதால சரி்யா விரிஞ்சு நிற்காது… அதனால பழகுறதுக்காக இன்னைக்கே புதுக்கொடியை கம்பத்தில ஏத்தி வச்சிருந்தோம். இதோ… அதை நல்லா மடிச்சு வச்சிடுறேன்யா’’ என்றார் ஏட்டு மூத்தவரான ராமலிங்கம்.
‘‘சரி… எல்லோரும் நாளைக்கு காலையில சீக்கிரம் அசம்பிள் ஆயிடுங்க… எந்த காரணத்தையும் சொல்லிட்டு லேட்டா வரக்கூடாது… அப்புறம் இன்ஸ்பெக்டர் என்னைப்பிடிச்சு திட்டிட்டு இருப்பாரு… சரியா…?’’ என்று கூறியவாறு ஸ்டேஷன் உள்ளே நடந்தார் ஞானப்பிரகாசம்.
‘‘யோவ் சுந்தரம் கொடிய பத்திரமா மடிச்சு… கப்போர்டில வச்சிடு…. பூக்காரம்மா இன்னைக்கே உதிரிப்பூ குடுத்திட்டு போயிடிச்சு… அதை தண்ணி தெளிச்சு… அதையும் கப்போர்டில  வச்சிடு…’’ என்று உத்தரவிட்டு, ராமலிங்கம் தொப்பியை கழற்றியவாறு உள்ளே சென்றார்.
வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தபடி கொடியை பத்திரமாக மடக்கி, ஸ்டேஷனுக்கு வலப்புறம் ஜன்னலுக்கு அருகில் வெளியில் இருந்த கப்போர்டில் வைத்தார் சுந்தரம். அருகில் இருந்த பானையில் இருந்து தண்ணீரை எடுத்து பூ கவரில்  தண்ணீரை தெளித்து, அதையும் உள்ளே வைத்தார். ஒருமுறை எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டு, பின்பு கப்போர்ட்டை  சாத்தினார்.
அதிகாலை 5 மணி.
எங்கோ நாய் ஒன்று ஊளையிடும் சத்தம் மெலிதாக கேட்டது. கீழ்வானம் கிழவி துப்பிப்போட்ட வெத்திலைப்பாக்கு போன்று விடியலின் அறிகுறியாக சிவப்பாக காணப்பட்டது.
ஸ்டேஷனில் வாசலில் பாரா போலீஸ்காரர் தூங்கி வழிந்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது எழுவதும், மீண்டும் மெதுவாக கண் அசத்தினால் தூங்குவதுமாக இருந்தார்.
‘‘டேய் பிளானை ஒரு முறை சரிபார்த்துக்கலாம் வாங்கடா’’ என்றான் மணி.
எல்லோரும் கிரிக்கெட் வீரர்களை போன்று தோள்மேல் கைகளை போட்டுக் கொண்டு குனிந்து 5 சிறுவர்களும் ஆலோசித்தனர்.
‘‘டேய் விஷ்ணு, மதி, அன்பு நான் சொன்னது புரிஞ்சது இல்ல?’’ கேட்டான் மணி.
‘‘ஸ்டேஷனுக்கு பின்னாடி தானே கம்பத்தை போட்டு வச்சிருக்கீங்க?’’ மணி இன்னொரு முறை கேட்டான்.
‘‘ஆமாண்டா நேத்து ராத்திரியே நானும் அன்பும் கொண்டு வந்து ஸ்டேஷனுக்கு பின்னாடி போட்டுட்டோம்’’ என்றான் பரத்.
‘‘சரி… பிளான்ல இறங்கலாமா?’’ கேட்டான் மணி.
மூன்று பேரும் சேர்ந்து கட்டை விரலை  உயர்த்திக் காண்பித்தார்கள்.
பின்னர்,  நால்வரும் ஸ்டேஷனை நோக்கி வந்தார்கள்.
ஸ்டேஷன் காம்பவுண்டு வாசலில் பாரா போலீஸ்காரர் அரைத்தூக்கத்தில் இருந்தார்.
அருகில் ஆள்அரவம் கேட்கவே எழுந்து பார்த்தார். குப்பத்து சிறுவர்கள் செல்வதைப் பார்த்து மீண்டும், அமைதியானார்.
அவர் எழுந்ததை பார்த்ததும், காலை நேரத்தில் ஸ்டேஷனுக்கு பின்புறம் இருக்கும் காட்டுப்பகுதிக்கு காலைக்கடன் கழிக்க செல்வதைப்போல் தேமே என்று நடந்து சென்றனர் சிறுவர்கள்.
போகும்போதே ஸ்டேஷனில் நோட்டம் விட்டனர். யாரும் விழித்திருப்பது போல் தெரியவில்லை. ஸ்டேஷனில் மட்டும் ஒரு டியூப்லைட் இப்போது உயிரை விடுமா, அப்புறம் விடுமா என்பதுப்போல், இருபுறமும் கருத்தும் எரிந்து கொண்டிருந்தது.
ஸ்டேஷன் பின்புறத்தில் வந்ததும் நால்வரும் அக்கம்பக்கம் பார்த்தனர்.
அந்த நேரத்தில் யாரும், அந்தப்பக்கம் நடமாடுவதாக தெரியவில்லை.
ஸ்டேஷனுக்கு  பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில்தான் முன்பு குப்பத்து மக்கள் எல்லாம் காலைக்கடனுக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால், போலீசாரின் கெடுபிடியால் பெரியவர்கள் அந்தப்பக்கம் வருவதை தவிர்த்துவிட்டார்கள். ஆனால், இன்னமும் சிறுவர்கள் மட்டும் இந்தப்பக்கம் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அதனால்தான் சிறுவர்கள் சென்றதை பார்த்தும் போலீஸ்காரர் ஒன்றும் சொல்லவில்லை.
மணியும், பரத்தும் சேர்ந்து ஸ்டேஷனில் காம்பவுண்டு சுவரை ஒட்டிக்கிடந்த நீண்ட கம்பம் ஒன்றை எடுத்து, காம்பவுண்டு சுவரில் சாய்த்தனர். அதற்கு மற்ற இருவரும் உதவினார்கள்.
‘‘ஓகே’’ என்று மணி கைக்காட்ட, கம்பத்தை நடுவில் ஒருவனும்,  கீழ் பகுதியில் இரண்டு பேரும் பிடித்துக் கொண்டனர்.
மணி மடமடவென்று கம்பத்தில் ஏறி காம்பவுண்டு சுவரின் மீது வந்தான். அங்கிருந்து மீண்டும் கைக்காட்ட, கீழே நின்றிருந்த இருவரும் கம்பத்தை மேலே தூக்கி, ஸ்டேஷனுக்கு உள்புறம் தள்ளினார்கள். ஒரு நிலைக்கு வந்ததும், கம்பம் கீழே வேகமாக சரிவதை, மணி மேலே நின்றவாறு பிடித்து இறக்கினான்.
கம்பம் சரியாக ஸ்டேஷனின் உள்புறம் சாய்ந்து நின்றது. அதன்வழியாக  உள்ளே இறங்கினான் மணி.
காம்பவுண்டு சுவற்றின் இந்தப்பக்கம் யாரும் வருகிறார்களா என்று நோட்டமிட்டபடி பார்த்துக் கொண்டிருந்தனர் மதி, பரத், அன்பு.
சரியாக  பத்தாவது நிமிடத்தில், ‘மியாவ்’ என்று ஒரு சத்தம் கேட்டது.
அதைத்தொடர்ந்து ஸ்டேஷனின் அந்தப்பக்கத்தில் இருந்து பிளாஸ்டிக் கவர் ஒன்று பறந்து வந்து விழுந்தது. அதை சரியாக கேட்ச் பிடித்தான் அன்பு.
அடுத்த  சில விநாடிகளில் காம்பவுண்டு சுவற்றின் மீது தோன்றினான் மணி. மீண்டும் நண்பர்களிடம் கட்டை விரலை காண்பித்துவிட்டு, உள்ளிருந்த கம்பத்தை இழுத்து வெளியே விட்டான். அது தரையில் படாதவாறு பிடித்து இறக்கினர் மற்ற மூவரும். பின்பு அதே கம்பத்தின் வழியாக சறுக்கியபடி இறக்கி வந்தான் மணி.
அன்பு அந்த பிளாஸ்டிக் கவரை தன் டவுரிசரின் பெல்ட் போட்டுக் கொள்ளும் பட்டையில் கட்டிக் கொண்டான்.
அப்போதுதான் மணியின் கையைப் பார்த்தான் பரத்.
மணியின் கையில் கம்பத்தின் கூரான பகுதிகள் குத்திக்கிழித்ததில் ரத்தம் வடிந்துக் கொண்டிருந்தது. ‘‘டேய்… என்னடா ரத்தம் வருது?’’ என்றான் பரத்.
‘‘விடுடா… வீரனுக்கு இதெல்லாம் சகஜம்’’ என்று வசனம் பேசினான் மணி.
‘‘கம்பத்தை மறுபடியும் எடுத்திட்டு போயிடுவோம்… இல்லாட்டி மோப்ப நாய்க்கிட்ட மாட்டிடுவோம்’’ என்றான் மணி.
‘‘சரி’’ என்று கூறியவாறு, பின்புறம் முன்புறம் இரண்டு பேர், பின்புறம் இரண்டு பேர் என்று அந்த கம்பத்தை தூக்கிக் கொண்டு, ஸ்டேஷனை சுற்றிக் கொண்டு குப்பத்துக்கு செல்ல ஆரம்பித்தார்கள். ஸ்டேஷன் முன்புறத்தை தாண்டும்போது, கம்பத்தின் முன்னால் இருந்த மணியும், பரத்தும் எட்டி பாரா போலீஸ்காரரை பார்த்தனர். அவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
மணி ஆறாகியிருந்தது.
பறவைகள் எல்லாம் இரைதேடி அங்கும், இங்கும் பறந்துக் கொண்டிருந்தன.
எஸ்ஐ ஞானப்பிரகாசம் புல்லட்டில் வந்து இறங்கினார்.
ஏற்கனவே முகம் கழுவி நின்றிருந்த பாரா போலீஸ்காரர் விரைப்பாக ஒரு சல்யூட் அடித்தார்.
சல்யூட் அடித்தபடி விறுவிறுவென்று ஞானப்பிரகாசம் உள்ளே சென்றார்.
சீட்டில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்த நேரத்தில்தான் பதற்றமாக வந்தார் ஏட்டு ராமலிங்கம்.
‘‘என்னய்யா? ஏன் இவ்வளவு பதற்றமா வர்றே?’’ கேட்டார் ஞானப்பிரகாசம்.
‘‘ஐயா… ஒரு தப்பு நடந்துப்போச்சு… ஸ்டேஷனுக்கு வெளியே கப்போர்டில வச்சிருந்த தேசியக்கொடி, பூ, கயிறு, எதையும் காணோம்ங்கய்யா…’’ என்றார் மூச்சிரைக்க.
‘‘என்னய்யா… சொல்லுறே… கொடியப்போய் யாருய்யா தூக்கிட்டுப் போகப்போறா….’’ ஞானப்பிரகாசமும் அதிர்ச்சியுடன் கேட்டார்.
‘‘அதுதானுங்கய்யா எனக்கும் குழப்பமா இருக்கு…. பாரா கிட்ட கேட்டுட்டேன்… யாருமே உள்ளே வரலன்னு சொல்றான். அப்புறம் எப்படி இது நடந்ததுன்னுதான் தெரியலிங்கய்யா…’’ என்றார் ஏட்டு.
இருவரும் வெளியே வந்து பார்த்தனர். கப்போர்ட்டில் இருந்த கொடி பொருட்கள் எதையும் காணவில்லை.
வாசலில் நின்றிருந்த பாராவை கூப்பிட்டார் ஞானப்பிரகாசம். ‘‘யோவ்… நல்லா யோசிச்சு…  சொல்லுய்யா… யாராவது உள்ளே வந்தாங்களா… இல்லே உள்ளே நடந்தது எதுவும் தெரியாமா நீ  தூங்கிட்டியா?’’
‘‘ஐயா… ராத்திரிப்பூரா தூங்காமா கண் விழிச்சுட்டுதாங்கய்யா இருந்தேன்… எனக்கு தெரிஞ்சு யாருமே உள்ளே வரலங்கய்யா…’’ என்றார் பாரா போலீஸ்காரர்.
‘‘என்னய்யா இது ஆச்சரியமா இருக்கு… எமனுக்கு தெரியாமா உயிர் போயிருக்கு…’’ என்றார் ஞானப்பிரகாசம்.
‘‘இன்ஸ்பெக்டர் வேற 7 மணிக்கு வந்துடுவாரேய்யா… இப்ப போய் இப்படி  ஆயிடிச்சே…’’ ஞானப்பிரகாசம் முணுமுணுத்தார்.
அவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த பாரா போலீஸ்காரர் திடீரென மூளையில் மின்னலடித்தவராக, ‘‘சார்… அதிகாலையில ஒரு அஞ்சு மணியிருக்கும்னு நினைக்கிறேன் சார்… ரொம்ப நாளைக்கு அப்புறமா அந்த குப்பத்து பசங்க பின்பக்கத்துக்கு போனாங்க… ஒருவேளை அவங்க எடுத்திட்டு போயிருப்பாங்களோ?’’ என்றார்.
‘‘வாய்யா பின்னாடி போய் பார்க்கலாம்’’ என்று ஞானப்பிரகாசம் பின்பகுதிக்கு விரைந்தார்.
அங்கு காம்பவுண்டு சுவற்றின் மீது கம்பத்தினால் விழுந்த கீறல்கள் புத்தம் புதிதாக தெரிந்தது.
‘‘ஆமாய்யா… யாரோ சுவர் ஏறிக் குதிச்சுத்தான் ஆட்டைய போட்டுட்டு போயிருக்காங்க…’’ என்றார் ஞானப்பிரகாசம்.
‘‘ஐயா… அப்போ அந்த குப்பத்து பசங்களாத்தான் இருக்கும்கய்யா… வாங்க நாம உடனே  அங்கேப்போனா… நம்ம ஸ்டேஷன் வாசல்ல விளையாடிட்டு இருப்பாங்களே… அதுல ஒருத்தனோட வீடு எனக்கு தெரியும். அவன்கிட்டபோய் கேட்டா தெரிஞ்சுடும்… அவங்களை பிடிச்சுடலாம்…’’ என்றார் ராமலிங்கம்.
அடுத்தவிநாடி புல்லட்டில் ஏறி ஞானப்பிரகாசமும், ராமலிங்கமும் விரைந்தனர். பின்னாலேயே மேலும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பைக்கில் விரைந்தனர்.
குப்பத்துக்கு உள்ளே செல்ல முடியாது என்பதால் பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே நடந்தார்கள். என்றுமில்லாமல் போலீஸ்காரர்கள் குப்பத்தில் வந்திருந்ததை பார்த்த  ஜனங்கள் மிரண்டுப்போய் சல்யூட் அடித்தபடி ஒதுங்கி சென்று கொண்டிருந்தார்கள்.
சரியாக அன்புவின் வீட்டுக்கு அவர்கள் வரவும், உள்ளே இருந்து அன்பு வெளியே வரவும் சரியாக இருந்தது.
போலீசாரை பார்த்ததும் அன்பு ஓட்டம் எடுத்தான்.
அதைப்பார்த்ததும் போலீசாரும் அவரை துரத்த ஆரம்பித்தனர்.
‘‘டேய்… நில்லுடா…  ஓடாதே… ’’ என்று ஞானப்பிரகாசமும், ராமலிங்கமும் அவனை துரத்தினார்கள்.
சந்து பொந்துகளில் நுழைந்து ஓடிய அவனை விடாமல் துரத்தினர் போலீசார்.
கடைசியில் அவன் வந்து சேர்ந்த இடம், குப்பத்தின் நடுப்பகுதியில் இருந்த அரசமரம். அங்கு திடீரென கீழே கிடந்த மண்ணை எடுத்து போலீசாரின் முகத்தில் விசிறியடித்தான் அன்பு.
அதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், கண்ணில் விழுந்த மண்ணால் முழியை கசிக்கிக்கொண்டு நின்றுவிட்டனர்.
அவர்கள் ஒருவழியாக கண்ணை துடைத்துக் கொண்டு பார்வைத்திறனை பெற்றபோது, திடீரென ‘ஜன கன மன…’’ என்று தேசியகீதம் கேட்டது. அவர்கள் தங்கள் எதிரே கண்டக்காட்சி, சாதாரண கம்பம் ஒன்றில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்த அனைவரும் தேசியக்கீதத்தை பாடிக் கொண்டிருந்தனர்.
ரத்தம் வடியும் கையுடன் மணியும், அவனது நண்பர்கள் பரத், மதி மற்றும் ஓடிவந்த அன்பு ஆகியோர் தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்தபடி நின்றிருந்தார்கள்.
ஸ்டேஷனில் வாங்கி வைத்திருந்த அனைத்து தேசியக்கொடி அட்டைகளும் அங்கிருந்தவர்கள் சட்டைகளில் காணப்பட்டது.
போலீசார் விரைப்பாக தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்தார்கள்.
தேசியகீதம் முடிந்ததும், சிறுவர்கள் நால்வரும் போலீசாரிடம் வந்தனர்.
‘‘சார்… உங்க ஸ்டேஷன்ல எத்தனையோ தடவை கொடி ஏத்துறதை பார்த்திருக்கிறோம். ஆனா… ஒருவாட்டிக்கூட எங்க குப்பத்தில தேசியக்கொடி ஏத்தினதில்ல சார்… அதனாலத்தான் ஸ்டேஷன்ல இருந்து கொடியும் மத்த எல்லாத்தையும் எடுத்திட்டு வந்து இங்க கொடி ஏத்தினோம் சார்’’ என்றான் மணி.
அவனை வாரி அணைத்துக் கொண்டார் ஞானப்பிரகாசம். அதேபோல் ராமலிங்கமும் மற்றவர்களை கட்டியணைத்தார்.
-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.



10 June 2019

ஆப்ரேஷன் சக்சஸ்… பட்…



வீட்டில் கேடிவி பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.
ஜாக்கிஷானை பார்க்க விடாமல், ரிமோட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு, கமல் நடித்த ‘டிக்… டிக்… டிக்..’’ படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்  அம்மா.
‘‘அம்மா… ஜாக்கிஷான் போடுமா… போரடிக்குது’’ என்றான் ஆகாஷ்.
‘‘டேய்… சும்மா… நொய்… நொய்ன்னாத… பேசாம படத்த பாரு…. இல்லாட்டி உன் பிரண்ட்சுங்க கூட விளையாடு. எப்ப பார்த்தாலும் நீ போடுறதான் நாங்க பார்க்கணுமா… இன்னைக்கு நான் பார்க்கிறத, நீயும் பாரு… ஒரு படத்தை பார்க்க விடுறீயா? எப்ப பாரு… ஜாக்கிஷான், ஜொக்கிஷான்னுட்டு’’ சலித்துக் கொண்டு, கமலின் அம்மா பல்பு போடுவாளா, இல்லையா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆகாஷின் அம்மா.
வேறு வழியின்றி, அம்மாவின் விருப்பப்படி கேடிவியையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.
அப்போதுதான் காலிங் பெல் அடித்தது. ஓடிச்சென்று கதவை திறந்தான்.
நண்பன் ஜெய் தான் நின்றிருந்தான். ‘‘வாடா விளையாடலாம்’’ என்றான்.
‘‘அம்மா நான் வெளியே போறேன்’’ என்று கதவை டமால் என்று சாத்திவிட்டு போனான் ஆகாஷ்.
அதற்குள் பிளாட்டின் அடிவாரத்தில், ரோசியும், அதர்வாவாவும் கூட வந்திருந்தனர்.
‘‘டேய்… யாராவது பர்கர் வாங்கி தாங்களேன்டா’’ ஆகாஷ் தான் ஆரம்பித்தான்.
‘‘புரோ… மாசக்கடைசி. என் கிட்ட காசு இல்ல’’ முதலில் சொன்னாள் ரோசி.
‘‘ஆமா… இங்கேயும் ஒரே டிரை… இந்த அப்பாக்கள் ஏன்தான் இப்படி இருக்காங்களோ தெரியல… பசங்க சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் வந்துட்டா ஒரு பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி, ஒரு டென் தவுசண்ட்ஸ் டெபாசிட் பண்ணணும் தெரியுதா… நாங்களே அதில் இருந்து எடுத்துக்குவோம்ல… எப்பவுமே இவங்க எப்பத்தருவாங்கன்னு காத்துக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு’’ சலித்துக் கொண்டான் அதர்வா.
‘‘அதேதான் புரோ… வெறும் 500 ருபீஸ் குடுக்கிறாங்க… இது ரெண்டு தடவை பீசா சாப்பிட கூட பத்தமாட்டேங்குது… நம்ம கஷ்டத்தை எப்பத்தான் இவங்க புரிஞ்சுப்பாங்களோ… கேட்டா… எங்க காலத்துலன்னு ஒரு புராணத்தை ஆரம்பிச்சுடுறாங்க’’ என்றாள் ரோசி.
‘‘ஆமா… ஆமா… எங்க டேடி குடுத்தாலும் எங்கம்மா தடுத்திடுவாங்க…’’ புலம்பினான் ஆகாஷ்.
அதை ஆமோதித்தான் ஜெய்.
‘‘கய்ஸ்… இன்னைக்கு பர்கர் சாப்டே… ஆகணும்’’ என்ன பண்ணலாம் சொல்லுங்க என்றான் ஆகாஷ்.
‘‘எங்க அண்ணன்கிட்ட ஒரு டென் ருபீஸ் கேட்டேன்… அதுக்கே அவன் திட்டிட்டு போய்ட்டான். சோ… வீட்ல இருந்து எதுவும் பெயராது’’ ஜெய் கூறினான்.
‘‘ஆமாம் கய்ஸ், இது மாசக்கடைசி. அதனால வீட்டுல கேட்கிறது, ரொம்பக் கஷ்டம். நாமளே சம்பாதிச்சாத்தான் உண்டு’’ என்றாள் ரோசி.
என்ன செய்யலாம் என்று அனைவரும் அதிதீவிரமாக யோசிக்க ஆரம்பித்தனர்.
திடீரென பல்பு எரிந்தவனாக, ‘‘கய்ஸ்… சூப்பர் ஐடியா… போன மாசம். நம்ம பிளாட் கிரவுன்ட் புளோர்ல இருந்த லைட் பியூஸ் ஆச்சே ஞாபகம் இருக்கா?’’ கேட்டான் ஆகாஷ்.
‘‘ஆமா புரோ… மேல் வீட்ல இருக்கிற செகரட்டரி அங்கிள்க்கிட்ட கூட போய் சொன்னோமே’’ ரோசி கூறினாள்.
‘‘அப்போ அவர் என்ன சொன்னார், ஞாபகம் இருக்கா?’’ என்றான் ஆகாஷ்.
‘‘புள்ளைங்களா நீங்க எல்லாம் வளர்ற பசங்க… இப்போ இருந்தே நிர்வாகத்தை கத்துக்கிடணும். அதனால பிளாட்ல இருக்கிற எட்டு வீட்டிலேயேயும் நீங்களே போய் பைசா வசூல் பண்ணி. பல்ப வாங்கி மாட்டுறீங்களான்னு சொன்னார். அதனால நாமளே ஒரு பிளாட்டுக்கு டுவெல் ருபீஸ் வசூல் பண்ணி சிஎப்எல் வாங்கி மாட்டினோம்’’ என்றான் அதர்வா.
‘‘கரெக்ட் அதை மறுபடியும் செய்யப்போறோம்’’ என்றான் ஆகாஷ்.
‘‘புரியலையே புரோ…’’ என்றான் ஜெய்.
‘‘மரமண்டை. பர்ஸ்ட் புளோர் ஜெயராமன் அங்கிள் வீட்டிலேயும், குப்புசாமி அங்கிள் வீட்டிலேயும் வேலைக்கு போறவங்க அவங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க… சோ அவங்க புளோர்ல இருக்கிற பல்பை வேணும்னு பீஸ் ஆக்குறோம். அதுக்காக எல்லார் வீட்டிலேயும் பைவ் ருபீஸ் எக்ஸ்ட்ரா வசூல் பண்றோம்’’ என்றான் ஆகாஷ்.
‘‘புரோ எய்ட் பிளாட்டுல வசூலிச்சா கூட பார்ட்டீ ருபீஸ்தான் கிடைக்கும்… ஒரு பர்கர் பிப்டி ருபீஸ் தெரியும்ல’’ என்றாள் ரோசி.
‘‘அதுக்குத்தான் ஒரு சூப்பர் பிளான் என்கிட்ட’’ என்றுக்கூறி, அருகில் இருந்த ரோசி மற்றும் ஜெய்யின் தோள் மீது கை போட்டான். அதேபோல் மற்றவர்களும் செய்ய, கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வியூகத்தை வகுப்பது போன்று ரகசியத்தை கூறினான் ஆகாஷ்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டில் இருந்து ஒரு சிஎப்எல்.லுடன் ஆஜரானான் ஆகாஷ்.
ராணுவ வீரர்கள் எதிரிகள் இடத்தில் சைகை பாஷையில் பேசிக் கொள்வதுபோல், தன்னுடைய கண்ணை இரு விரல்களை தொட்டு ரோசியை கீழே போகுமாறு கூறினான் ஆகாஷ். அதேபோல், ஜெய்க்கு மேலே போய் கண்காணிக்குமாறு கட்டளையிட்டான். கீழே இருந்தும், மேல இருந்தும் சிக்னல் கிடைக்கவே, படிக்கட்டு கைப்பிடியின் மீது ஏறி, நடைபாதை பொதுலைட்டில் பொருத்தப்பட்டிருந்த சிஎப்எல்லை எடுத்து, கீழே நின்றிருந்த அதர்விடம் கொடுத்தான்.
அவன் ஏற்கனவே ஆகாஷ் வீட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்திருந்த சிஎப்எல்லையும், ஒரு ஐம்பது பைசா நாணயத்தையும் கொடுத்தான்.
சிஎப்எல் மீது ஐம்பது பைசா நாணயத்தை வைத்து அதை அப்படியே ஹோல்டரில் பொருத்தினான் ஆகாஷ். பின் அதர்வாவிடம் வெற்றிச்சின்னத்தை காண்பித்துவிட்டு படியில் குதித்தான்.
எல்லோருக்கும் வெற்றிச் சின்னம் பரிமாறப்பட்டது.
அடுத்த சில விநாடிகளில் மேலே இருந்து ஆட்கள் வருவதாக செல்போனில் கூறினான் ஜெய்.
உஷாரடைந்த ஆகாஷூம், அதர்வாவும் தாங்கள் மற்றவர்களுக்கு தெரியாதபடி கிரவுண்ட் புளோருக்கு ஓடினார்கள்.
மாலை நேரத்தில் யார் முதலில் இறங்குகிறார்களோ, அவர்கள் பொது லைட்டை போட்டுக் கொண்டே செல்வது வழக்கம். அதன்படி, மூன்றாவது மாடியில் இருந்து இறங்கிய இளம்வாலிபன் கமல் பர்ஸ்ட் புளோர் பொது லைட்டை போட்டான். போட்ட மாத்திரத்தில் ஒரு வெளிச்சப் பொட்டு மட்டும் வந்துவிட்டு பல்பு அணைந்துவிட்டது. இதனால் மீண்டும், மீண்டும் சுவிட்ச்சை போட்டுப்பார்த்தான் கமல்.
அந்த நேரத்தில் சரியாக கமலை பார்த்தபடி நின்றிருந்தார்கள் ஆகாஷூம், அதர்வாவும்.
‘‘ஓ… புரோ… நீங்கத்தான் இப்படி அடிக்கடி சுவிட்சை போட்டு, போட்டு லைட்டை பீஸ்ஸாக்கிறதா… இந்த மாசத்தில இது நாலாவது தடவை. ஒவ்வொரு தடவையும் நாங்கத்தான் பிளாட், பிளாட்டா வசூல் பண்ணி லைட்டை வாங்கி போட்டுட்டு இருக்கிறோம். இப்படி கொஞ்சம் கூட அவேர்னஸ் இல்லாம பல்பை பீஸ்ஸாக்கிட்டீங்களே’’ என்றான் கோபத்துடன் ஆகாஷ்.
‘‘டேய்… நான் பீஸ் ஆக்லடா… லைட்ட போட்டேன் ஆப் ஆயிடிச்சு… அதனால மறுபடியும் போட்டு பார்த்துட்டு இருந்தேன். அவ்வளவுதான்’’ என்றான் அப்பாவியாக கமல்.
‘‘இல்லே… புரோ நீங்கதான் லைட்டை பீஸ்ஸாக்கிட்டீங்க… இருங்க நாங்க செகரட்டரி அங்கிள்கிட்ட போய் சொல்றோம்’’ என்று மேலே ஏற ஆரம்பித்தான் அதர்வா.
‘‘டேய்… என்னடா இப்படி அராஜகம் பண்ணுறீங்க… இருங்கடா…’’ என்று யோசித்தவாறு, தன் பர்சில் இருந்து 10 ரூபாயை எடுத்து, ‘‘டேய் சாக்லேட் வாங்கி சாப்பிடுங்க… தயவு செஞ்சு செகரட்டரி அங்கிள்கிட்ட சொல்லாதீங்கடா… ஏற்கனவே அவருக்கும் எனக்கும் ஆகாது’’ என்றான் கமல்.
‘‘அய்யய்யே… என்ன புரோ இப்படி சம்திங் எல்லாம் கொடுத்து சின்னப்பசங்கள கெடுக்க பார்க்கிறீங்க… இதெல்லாம் வேலைக்கு ஆகாது. நாங்க செகரட்டரி அங்கிள்கிட்ட சொல்லியே ஆவோம். நாங்க எல்லாம் நல்ல பசங்க தெரியுமா?’’ என்றான் ஆகாஷ்.
என்ன செய்வது என்று யோசித்த கமல், ‘‘சரிடா… சிஎப்எல் எவ்வளவுடா?’’ என்றான் கமல்.
‘‘புரோ போன தடவை நாங்க ஒன் பார்ட்டி ருபீஸூக்கு வாங்கினோம்… இப்போ வெலவாசி எல்லாம் ஏறிடிச்சுல்ல… அதனால ஒரு ஒன்பிப்டி ஆயிருக்கும்னு நினைக்கிறேன்’’ என்றான் ஆகாஷ்.
‘‘சரி… இந்தாங்க’’ என்று ஒரு 100, 50 நோட்டுக்களை பர்சில் இருந்து எடுத்துக் கொடுத்து, ‘‘செகரட்டரி அங்கிள்கிட்ட சொல்லிடாதீங்க… நீங்களே பல்ப வாங்கி போட்டுடங்க… இந்த உங்களுக்கு ஆளுக்கு 10 ருபிஸ்’’ என்று அதுக்கு தனியாக 20 ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினான்.
‘‘சரி…சரி… நீங்க தெரியாம தப்பு செஞ்சீங்கன்றதாலத்தான் உங்களை விடுறோம்… ஆனா இனிமே இப்படி எல்லாம் சின்னப்புள்ளைத்தனமா சுவிட்சை போட்டுட்டே இருக்காதீங்க… பல்பு பீஸ்ஸாயிடும். புரியுதா?’’ என்றான் ஆகாஷ்.
‘‘எல்லாம் என் தலையெழுத்துடா…’’ என்று தலையில் அடித்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றான் கமல்.
அவன் தலை மறைந்ததும், அங்கு
ஒன்றுக்கூடிய நால்வர் அணி, கையை மடக்கி, ‘‘ஹூர்ரே’’ என்று கத்தியது.
எல்லோரும் சேர்ந்து தேர்ட் புளோரில் வசிக்கும் செக்ரட்டரி வீட்டிற்கு சென்றனர். டோர் பெல் அடித்தபோது, காதில் போன் பேசியபடி எட்டி பார்த்தவரிடம், ‘‘அங்கிள் பர்ஸ்ட் புளோர் லைட் எரியல. போன தடவை மாதிரி எல்லார் வீட்டிலேயும் வசூல் பண்ணிடலாமா?’’ என்றான்.
அவர், ‘‘ஓகே. பசங்களா, நல்லா செய்யுங்க’’ என்று கூறிவிட்டு, ‘‘நீங்க வந்துடுங்க… சாப்பிட்டுக்கிட்டே பிராப்ளம் பத்தி பேசி முடிச்சுடலாம்’’ என்றார்.
எல்லோரும் ஒவ்வொரு வீடாக போய் வசூல் செய்தார்கள். பின்னர், ஒரு அரைமணி நேரம் பார்க்கில் விளையாடிவிட்டு மீண்டும் பிளாட்டுக்கு திரும்பினர். அப்போது தான் செகரட்டரி வெளியே சென்று கொண்டிருந்தார். கூடவே, டிரசரர் லேடி என்றழைக்கப்படும் சிவகாமியும், பிரசிடென்ட் ராமசாமியும் சென்று கொண்டிருந்தனர்.
எல்லோரும் சென்றுவிட்டதை உறுதி செய்துக் கொண்டவுடன், மீண்டும் சகாக்களுக்கு சைகை காட்டினான் ஆகாஷ். அவரவர் இடத்துக்கு செல்ல, பீஸ் ஆன சிஎப்எல் பல்பை எடுத்து, அதில் இருந்த 50 பைசா நாணயத்தை எடுத்து பையில் போட்டுக் கொண்டு பல்லை கீழே நின்றிருந்த அதர்வாவிடம் கொடுத்தான். அவன் ஏற்கனவே பையில் வைத்திருந்த பல்பை எடுத்து கொடுக்க, அதை ஹோல்டரில் பொருத்திவிட்டு கீழே இறங்கினான் ஆகாஷ்.
மீண்டும் ஒரு முறை எல்லோரும் ‘‘ஹூர்ரே’’ கூறிக் கொண்டார்கள்.
எல்லோரும் சேர்ந்து பக்கத்து தெருவில் இருக்கும், ‘பர்கர் ஹட்’டிற்கு சென்று, 4 பேர் அமரும் கேபினில் உட்கார்ந்து, 4 பர்கரை ஆர்டர் செய்தார்கள்.
ஜெய்தான் ஆரம்பித்தான். ‘‘புரோ, இந்த சூப்பர் ஐடியா, எப்படி உருவாச்சு?’’ என்றான்.
‘‘டிவியில கமல் படம் பார்த்திட்டு இருந்தேன்ல அதுல இருந்துதான்’’ என்றான் ஆகாஷ்.
‘‘செம புரோ…’’ என்றாள் ரோசி.
‘‘நம்ம செகரட்டரி இருக்காரே… அந்த ஓல்டு மேன். நீங்க எல்லாம் வளரணும் கய்ஸ்னு நமக்கே பாடம் சொல்றார்’’ அதர்வா கிண்டல் செய்தான்.
‘‘அந்த சொட்டையன திட்டாத புரோ… அவரும் இந்த ஐடியா ஓர்க் அவுட் ஆக ஒரு காரணம்தானே. இல்லாட்டி மினுக்கிக்கிட்டு கிடந்ததால கழட்டி வைக்கப்பட்ட பல்ப எடுத்துவந்து மாட்டி, அதை பியூசாக்கி கமல்கிட்ட காசு வாங்கினதையும், பல்பு பீஸ்னு சொல்லியே பிளாட்டுல வசூலிச்சதையும் செய்ய முடியுமா?’’ ஆகாஷ் சப்போர்ட் செய்தான்.
‘‘அந்த குந்தானி லேடி இருக்கே… அதான்பா அந்த டிரசரர் லேடி. என்னம்மா முறைக்குது. எப்பவும், அங்க விளையாடக்கூடாது, இங்க விளையாடக்கூடாதுன்னு… ஒரே கண்டிஷன். அவங்க வீட்டுலயும் ஒரு ஆப்ரேஷனை போடணும்பா…’’ என்றான் ஜெய்.
‘‘அடுத்ததடவை அந்த குந்தானி வீட்டு பல்புதான் டார்க்கெட்’’ என்று ஆகாஷ் கூறிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்த கேபினில் இருந்து ஒரு கை, அவனது காதை பிடித்து திருகியது.
‘‘ஆஆ….’ என்று கத்திக்கொண்டே பின்னால் திரும்பி பார்க்க, அடுத்த கேபினில் இருந்து வந்த கை, டிரசரர் லேடி உடையது.
அருகில் இருந்த செகரட்டரி, பிரசிடென்ட் ஆகியோரும், ஜெய், அதர்வா, ரோசியின் காதுகளை பிடித்துக் கொண்டார்கள்.
‘‘பாத்தீங்களா சார்… இந்த வயசுல இவங்க பண்ற வேலைய… பிளாட் பிரச்னையை பேச இங்க வந்தது சரியா போச்சு.. இல்லேன்னா இவங்களை பிடிச்சிருக்க முடியுமா…’இவனுங்க அப்பன்கிட்ட பேசலாம் வாங்க சார்’’ என்று கூப்பிட்டார் பிரசிடென்ட்.
இன்னமும் காசு விடுபடாத நிலையில் இருந்தான் ஆகாஷ்.
-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.

03 June 2019

கல்யாணப்பரிசு


கல்யாணப் பரிசு

‘‘தனம்… தனம்…’’ கூப்பிட்டுக் கொண்டே நுழைந்தார் சந்தானம்.
‘‘என்னங்க… இங்கதானே இருக்கேன்… ஏன் பத்து ஊருக்கு கேட்கிற மாதிரி கத்திட்டு வர்றீங்க?’’ பதில் கொடுத்தாள் தனம் எனும் தனலட்சுமி.
‘‘நம்ம பொண்ணு கல்யாணத்தினால, என் சித்தப்பா பொண்ணு மக கல்யாணத்துக்கு போக முடியலல்ல… இன்னைக்கு போய் ஒரு எட்டு போய்ட்டு கிப்டு குடுத்திட்டு வந்திடலாம். சீக்கிரம் ரெடியாயிடு’’
‘‘உங்க சொந்தக்காரங்கத்தானே… நீங்க மட்டும் போய்ட்டு வர வேண்டியதுதானே... என்னை ஏன் கூப்பிடுறீங்க?’’
‘‘ஏண்டி… எங்க சொந்தக்காரங்கன்ன நான் மட்டும் போகணுமா….? அப்போ உங்க சொந்தக்காரங்க கல்யாணம்னா நீ மட்டும் போக வேண்டியதுதானே? என்னை ஏன் போன மாசம் உங்க அத்தை பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிட்டே?, அதுவும் உடம்பு சவுரியம் இல்லாதவன கூட கூப்டு போனே? உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா, தக்காளி சட்னியா?’’
‘‘சரி, சரி வந்து தொலைக்கிறேன். ஆரம்பிச்சுடாதீங்க, உங்க புராணத்தை…’’ என்றபடியே சேலை உடுத்த உள்ளே சென்றாள் தனம்.
அதற்குள் சந்தானமும் பட்டு வேட்டி, சட்டையுடன் தயாராகி இருந்தார்.
‘‘தனம்… அவங்க நம்ம பையன் கல்யாணத்துக்கு 500 ரூபா செஞ்சிருந்தாங்க… அதனால அதவிட கூட செஞ்சாத்தான் நமக்கு மதிப்பா இருக்கும்… போறப்போ ஏதாவது ஹாட்பேக் ஒண்ணு வாங்கிட்டு போயிடலாம்’’
‘‘அதெல்லாம் ஒண்ணும் வாங்க வேண்டாம்… பொண்ணு கல்யாணத்தில வந்த பாத்திரங்கள்ல ஒரு குடம் பெயர் போடாம இருக்கு… அதை குடுத்திடலாம்’’
என்னடா ஹாட்பேக்குன்னு சொன்னா… இவ குடம் வரைக்கும் போறாளேன்னு யோசனையாக இருந்தார் சந்தானம்.
அதற்குள் பரணில் கவர் போட்டு கட்டி வைத்திருந்த குடத்துடன் வந்து சேர்ந்தாள் தனம்.
குடத்தை எடுத்து பார்த்தார் சந்தானம்.
அழகாக இருந்தது. இதை எப்படி குடுக்க இவளுக்கு மனசு வந்தது என்று நினைத்துக் கொண்டே, ஏதேச்சையாக கீழே திருப்பினார். அதைப்பார்த்த உடனேயே புரிந்துக் கொண்டார் சந்தானம்.
‘‘ஏண்டி… இது நியாயமா இருக்கா… இப்படி சொட்டை விழுந்த குடத்தை குடுத்தா… நம்ம மானம் போயிடாது?’’ கேட்டார் சந்தானம்.
‘‘அதெல்லாம் ஒண்ணும் போகாது… நான் பேசிக்கிறேன் வாங்க…’’ என்றபடி கையை பிடித்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் தனம்.
பட்டாமிராமில் இருக்கிற உறவினரின் வீட்டுக்கு சென்று சேர்ந்தபோது, மணி 12 ஆகிவிட்டது.
குசலம் விசாரித்து முடித்தபின்னர், சந்தானம் தான் ஆரம்பித்தார். ‘‘தனம் அந்த கிப்ட்டை சிவகாமிக்கு குடுத்திடு’’ என்றார்.
‘‘சரிங்க… ’’ என்று கவருடன் எழுந்த  தனம், குடத்தை சிவகாமியிடம் குடுத்தாள்.
சிவகாமி குடத்தை எடுத்து பார்க்க ஆரம்பிப்பதற்குள் தனம் ஆரம்பித்தாள்.
‘‘இன்னைக்கு ரயில்ல செம கூட்டம்கா…அடித்து பிடிச்சு வந்து சேர்ந்தோம்.  இதுல மேல வச்சிருந்த குடம் வேற கீழே விழுந்திடுச்சு… என்ன ஆயிருக்குன்னு தெரியல…  பிரிச்சு பாருங்கக்கா…’’ என்று அப்பாவியாக முகத்தை  வைத்துக் கொண்டாள் தனம்.
சிவகாமி குடத்தை பிரித்து பார்த்து, கீழே  இருந்த சொட்டையைப் பார்த்தாள். ‘‘ஆமா தனம் நீ சொன்ன மாதிரி கீழே விழுந்ததில… ஒரு சின்ன சொட்டை விழுந்திருக்கு… பரவாயில்ல விடு.  இருங்க சாப்பாட்ட தயார் பண்ணிடுறேன்… சாப்பிட்டு போகலாம்’’ என்றாள்.
‘‘இல்லக்க… நாங்க இவரோட ஆபிஸ் பிரண்ட் வீட்டுக்கும் வர்றதா சொல்லியிருந்தோம். அதனால அவங்க செஞ்சு வச்சிருப்பாங்க… இது நம்ம வீடுதானே… எப்பவேணா வந்து சாப்பிடலாம்…   வர்றோம்கா’’ என்றபடி கிளம்பினாள்.
சந்தானமும் அவர்களிடம் விடை பெற்றுக்  கொண்டு கிளம்பினார்.
வீட்டை விட்டு ரயில்வே ஸ்டேஷன் வந்த பிறகு, தனம்  ஆரம்பித்தாள்.
‘‘என்னங்க…  இப்போ வீட்டுக்குப்போய் என்ன பண்ணப்போறோம். அப்படியே திருத்தணிக்கு போய்ட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்’’ என்றாள்.
‘‘சரி… கிளம்பு’’ என்றார் சந்தானம்.
திருத்தணி  தரிசனத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு  வரும்போது இரவு 8 மணி ஆகிவிட்டது.
வீட்டு வாசலில் யாரோ  நிற்பதுபோல் இருந்தது.
‘‘தனம்… அது யாரு… வாசல்ல’’ என்றபடி கண்ணாடியை  தூக்கிவிட்டுக் கொண்டார் சந்தானம்.
‘‘அது உங்க அண்ணாநகர் பெரியப்பா மகன்’’ என்றபடி வந்திருந்த உறவினர்களிடம் விசாரித்துக் கொண்டே  பூட்டை திறந்து வீட்டின் உள்ளே கூட்டி சென்றாள்.
‘‘என்ன ராமசாமி, பார்த்து ரொம்ப நாளாச்சு...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் சந்தானம்.
வந்திருந்த ராமசாமி, தனது மனைவியிடம், ‘‘ஏண்டி கையிலேயே வச்சிருந்தா எப்படி? அந்த கிப்ட்ட எடுத்து அண்ணிக்கிட்ட குடு…’’ என்றார்.
அவர்கள் சரவணா ஸ்டோர்சின் பெயரில் கவரில் வைத்து எதையோ கொண்டு வந்திருந்தார்கள். ராமசாமியின் மனைவி, அதில் இருந்து எடுத்தது, அதே சொட்டை விழுந்த குடம்.
ராமசாமியின் மனைவிதான் ஆரம்பித்தார். ‘‘இன்னைக்கு ரயில்ல செம கூட்டம் அண்ணி… மயிலாப்பூர் வர்றதுக்குள்ள போதும்… போதும்னு ஆயிடிச்சு.. இதுல குடம் வேற ரயில்ல மேல இருந்து கீழே விழுந்திடுச்சு… எங்க என்ன ஆயிருக்கோ தெரியல… பார்த்துக்கோங்க அண்ணி’’ என்றாள் கவலையுடன்.
‘‘சிவகாமி சாயங்காலம் வீட்டுக்கு வந்திருந்தா… எங்க கிரகப்பிரவேஷத்துக்கு அவ வரல இல்ல… அவகிட்ட பேசிட்டு கிளம்புறதுக்குல்ல லேட் ஆயிடிச்சு….’’ என்று ராமசாமியும் கூட ஒத்து ஊத ஆரம்பித்தார்.
தனத்தின் மனது அக்னிக் குஞ்சாய் மாறிக் கொண்டிருந்தது.
-        ஜே.எஸ்.கே.பாலகுமார்.

19 May 2019

ஆ.கா.சூ சாப்பிடுவோமா?

ஆ.கா.சூ சாப்பிட்டு இருக்கிறீர்களா?
அது தாங்க ஆட்டுக்கால் சூப். இந்த கேள்விக்கு தென்னகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், ஓ…ஓ… என்று பதில் கிடைக்கும். தென் மாவட்டங்களில் மாலை நேரத்தில் இது சாலையோர கடைகளில் சுடச்சுட கிடைக்கும்.
ஆ.கா.சூ என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சமயலறை சன்னாசியார் (?) சில விதிகளை வகுத்து வைத்துள்ளார்கள்.
அது யாரு அந்த ச.ச. என்று கேட்கப்படாது… விதிகளை சொன்னா கேட்டுக்கணும். கேள்விக் கேட்கக்கூடாது.
ஆ.கா.சூ. எடுத்து வரும்போதே, வாசனை காத தூரத்தில் இருந்து மூக்கை துளைக்க வேண்டும். அதன் நிறம் மருதாணி இலையை கழுவிய தண்ணீரைப்போன்று, பிரவுனா, பச்சையா, மஞ்சளா என்று தெரியாத அளவுக்கு ஒரு கலவையாக, ரசனையாக இருக்க வேண்டும்.
காபி, டீ போன்ற சாதாரண மக்கள் குடிக்கும் பானம் அல்ல இது. உழைக்கும் உயர்த்தட்டு மக்கள் குடிக்கும், உன்னத உற்சாக பானம். அது ஆ.கா.சூ உற்சாக பானம் ஆகும் என்று கேள்விக்கேட்கும், நடுபெஞ்சு நம்பிகளுக்கான பதில், இதை குடித்து முடித்த 10 நிமிடத்தில் உடல் முறுக்கி, உங்களை பயில்வான் போல உணர வைக்கும். அதனால்தான் அதை உற்சாக பானம் என்று ச.ச விதி 324 பிரிவு 1ல் கூறப்பட்டுள்ளது.
சரி வாசனை மூக்கை துளைத்தாகிவிட்டது, நிறம் மனதை கவர்ந்தாகிவிட்டது. அடுத்தது?
தண்ணீர் டம்பளரில் தேங்காய் எண்ணெய் கொட்டினால் எப்படி தனித்தனியாக, திட்டுத்திட்டாக எண்ணெய் தேங்கி நிற்குமோ அதுபோன்று ஆ.கா.சூ.வின் மேல், கொழுப்பு தண்ணீராக உருகி ஆங்காங்கே திட்டுத்திட்டாக மிதக்க வேண்டும். இதுதான் உடலுக்கு உற்சாகம் தரக்கூடியது. அது தரமானதாக இருந்தால்தான் நல்லது. வெறுமனே எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்தால், அது ருசியை தராது என்பதுடன், அதை குடிப்பதும் வேஸ்ட். அது ச.ச. சொன்னது அல்ல; அனுபவசாலிகள் சொல்வது.
இப்படி சுடச்சுட கொண்டு வந்து வைக்கப்படும் ஆ.கா.சூ.வை, அப்படியே விசிலடிப்பது போல் உதட்டை குவித்து, ஊதினால் டம்ளரின் மேல்பகுதியில் உள்ள ‘சூ’ கொஞ்சம் சூடு ஆறும். ஒரு நாலைந்து தடவை ஊதிவிட்டு, அதை குடித்தால், அப்படியே, ஜல, ஜல, ஜலவென தொண்டையில் இருந்து உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்வது வரை உணர முடியும். சில நேரங்களில், ஆக மிகுதி ஆர்வத்தினால், சிலர் ஊதாமலேயே, நான் அப்படியே குடிப்பேன் என்ற ரீதியி்ல் வாயில் விட்டுக் கொண்டு, பின்னர் புகையை வெளியே விட்டு ஆசுவாசமாவது உண்டு.
ஆ.கா.சூ.வின் மேற்படலத்தில் இருக்கும் கொழுப்பு, சூடாகவும், அதே நேரத்தில் குடிக்கும் அளவுக்கும் இருந்தால்தான் டேஸ்ட். சூடு ஆறிவிட்டால், குடிக்க முடியாது. அதேசமயம், தார் பாலைவன அளவுக்கு கொதித்தால், தொண்டை எரியும்.
அதனால் முற்றிலும் ஆற்றிவிடாமல், மேற்புறம் உள்ள சூட்டை மட்டும் சூட்டை ஆற்றவே ஊதிக் குடிக்க வேண்டும் என்பது.
இந்த ஜலதரங்கம் கொஞ்சம், கொஞ்சமாக வாயில் இறங்கும்போது, இன்னொரு ஆச்சரியம் சாப்பிடுபவருக்கு காத்திருக்கும்.
அது, சின்ன, சின்ன எலும்புத்துண்டுகள், சின்னவெங்காயம் ஆகியவை தெரியும்.
அதிர்ஷ்டம் இருந்தால், சில நேரங்களில் நல்லியும் ஜாக்பாட்டாக இருக்கும்.
ஜாக்பாட் அடித்தவர்கள், வேண்டுமென்றே எதிரில் இருப்பவர்களை வெறுப்பேற்ற, டேபிளில் ரெண்டு முறை கொத்திவிட்டு, அதை உறிஞ்சும்போது வரும் வெறுப்பு இருக்கிறதே…. முதல் மார்க் வாங்கிய மாணவனை பாராட்டும்போது, வேண்டும் என்றே எங்களைப்போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களை  ரெண்டு திட்டு விழும்போது ஏற்படும் மனநிலைதான் இருக்கும். ‘நீ எல்லாம் எங்க உருப்படப்போற…’ வார்த்தைகளைப்போன்று, ‘‘உனக்கெல்லாம் இது வாய்க்காது மாமூ’’ என்ற பாணியில் காது சவ்வு கிழியும் அளவுக்கு உறிஞ்சி சாப்பிடுவார்கள். ம்ம்ம்.. அதிர்ஷ்டம் எல்லோருக்கும் அடித்துவிடுவதில்லையே….
ஆனால், 80களில் விற்பனைக்கு வந்த 10 பைசா பால்கோவாவின் நடுவில் இருக்கும் நாலணா எல்லோருக்கும் கிடைக்காவிட்டாலும் எல்லோருக்கும் பால்கோவா உறுதி என்பதுபோல, ஆ.கா.சூ.வை வாங்கிய அனைவருக்கும் நாலைந்து எலும்பு நிச்சயம். அதாவது 100க்கு 35 நிச்சயம்.
சூப்பை குடித்து முடித்துவிடும்போது, எப்படித்தான் அந்த சூடு அவ்வளவு சீக்கிரம் இறங்கிவிட்டது என்பதுபோன்ற மனநிலை எல்லோருக்கும் ஏற்படும். சூப் இல்லாத கோப்பை குப்பைக்கு சமம் என்பதுபோல், எலும்புகளை கடித்துக் கொண்டிருக்கும்போதே சூடு மிகவும் குறைந்துவிடும்.
இதனால் சில ச.ச. விதியில் 144 பிரிவை பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
அதாவது ஆ.கா.சூ வந்தவுடன், ஸ்பூனை வாங்கி கீழே தூர் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது பீகார் மாணவர்கள்போல், தேர்வுக்கு முன்பே வினாத்தாளை வாங்கி பார்த்துவிடுவதுபோல், எலும்புகளை முதலில் எடுத்து உள்ளே தள்ளிவிட்டு, அதன்பின்னர் சூப்பை குடிப்பார்கள். ஆனால், இது தவறு என்கிறார் ச.ச.
‘‘அதனதனை அதனதன்போக்கே அதக்குபவர்களே
அச்சரசுத்த அர்த்தமான அசைவாளன்’’ என்கிறார் ச.ச.
இதன் பொருள், அதையும் நான் தானே சொல்லியாக வேண்டும். ஒவ்வொன்றையும் எப்படி சாப்பிட வேண்டும் என்று விதி உள்ளதோ, அதன்படி சாப்பிடுபவர்கள்தான் சிறந்த அசைவ பிரி்யர்கள் என்பது இதன் பொருள்.
இந்த விஷயத்தில் நான் சிறந்த அசைவாளன்.
அப்புறம், இந்த ஆ.கா.சூ.வை, ஆக… டேஸ்ட்டுடன் சாப்பிடுவதற்கு என்றே ஒரு சில கடைகள் இருக்கின்றன. இதில் மதுரை பனைமரத்து பிரியாணிக்கடை ஒன்று. மாலை 4 மணிக்கு மேல் இங்கு சென்றால், ஆ.கா.சூ. பிரியர்கள் வரிசைக்கட்டி நிற்பதை காணலாம். ஒரு தடவை நாக்கில் ருசி ஒட்டிக்கொண்டால், பின்னர் அதை விடமாட்டார்கள். எப்போது அந்தப்பக்கம் போனாலும் ஆ.கா.சூ.வை ஒரு கை பார்க்காமல், சாரி… குடிக்காமல் விடமாட்டார்கள்.
அப்படியே மதுரைப்பக்கம் போனீங்கன்னா, ஒரு எட்டு என்னையும் கூப்பிடுங்க… கூச்சப்படாம வந்து சேர்ந்துடுறேன். கூப்பிடாமா போனீங்கன்னா… ச.ச. விதி எண் ‘72 ஏ’யை மீறியதா ஆகிடும். அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன் பார்த்துக்கோங்க….
இப்படிக்கு ஆ.கா.சூ. வெறியன் ஜே.எஸ்.கே.பாலகுமார்.

07 May 2019

கருப்பட்டி காபி


கருப்பட்டி காபி
‘‘பில்டர் காபி என்பார், இன்டஸ்டன்ஸ் காபி என்பார்
அம்மாவின் கருப்பட்டி காபி சாப்பிடாதோர்’’
இந்த புதுமொழி இப்போதை கிட்ஸ்களுக்கு தெரியாது. ஆனால், மதுரைபோன்ற தென்னகத்தில் பிறந்து வளர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ், மால்ட் எல்லாம் இந்த கருப்பட்டி காபி தான்.
காலையில் விவித பாரதியில், ‘‘பிறந்த நாள்… இன்று பிறந்த நாள்… நாம் பிள்ளைகள் போல, தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்… ஹேப்பி பெர்த்டே டூ யூ…..’’ என்று கேட்கும்போது, அம்மாவின் குரல் கேட்கும்.
‘‘கண்ணா காபி குடிச்சுட்டு குளிச்சிட்டு ரெடியாகு… பள்ளிக்கூடம் போகணும்ல’’ என்று அம்மாவின் குரல் கேட்கும்.
அதாவது மணி 7 மணி ஆகிவிட்டது என்று அர்த்தம்.
பல் விளக்குவது என்பது, ‘வீக்கான’ பல்லை கொண்டவர்களுக்கான ‘எக்ஸர்சைஸ்’ என்பது என் காலத்து பிள்ளைகளின் காபிக்கு முந்தைய ஆத்திச்சூடி.
படுக்கையை விட்டு எழுந்த கையுடன், அடுக்களைக்கு சென்றால் குண்டு பானையில் முக்கால்வாசிக்கு தயாராக இருக்கும் கருப்பட்டி காபி. இளஞ்சூட்டில் இருக்கும் அதை பெரிய டம்ளரில் ஊற்றி மடக்மடக்கென்று குடித்து, மீண்டும் ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் எடுத்து குடித்த பின்னர்தான், பெரு மூளைக்கு சிறுமூளை ‘ஓகே’ என்று சிக்னல் கொடுக்கும். கிங்பிஷர் 5000 கூட இதற்கு ஈடாகாது.
பாலை பொருத்து க.கா. கெட்டித்தன்மை மாறுபடும். வீட்டுக்கு அன்று உறவினர்கள் யாராவது வருவதாக இருந்தால், க.கா. சற்று ‘நீளமாகி’விடும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஸ்பெஷல். அன்று க.கா. திக்காக சும்மா கமகமவென்று தூக்கலாக இருக்கும். காரணம், அன்று எக்ஸ்ட்ரா ஒரு பாட்டில் பால் வாங்கப்படும் என்பதுதான்.
க.கா. டாக்டர் பிரிப்கிரிஷன் போல், காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை குண்டு பானை நிறைய செய்து வைக்கப்பட்டுவிடும்.
உறவினர்கள் வந்தாலும் சரி, விருந்தாளிகள் வந்தாலும் சரி. அதில் இருந்து ஒரு சில டம்ளர்கள் காலியாகும். மற்றவை எல்லாம் எங்களுக்குத்தான். மதியம் சாப்பாட்டிற்கு பின்னரும் கூட பல முறை, இந்த காபி எனர்ஜி பூஸ்ட்டராக பலமுறை உள்ளே இறங்கும்.
காலையில் செய்வதை விட மாலையில் செய்யப்படும் காபி, சற்று குறைவாகத்தான் இருக்கும். காரணம், பதம் சற்று கூடுதலாக இருக்க வேண்டும் என்பதுதான். பள்ளியை விட்டு வந்ததும், இந்த காலத்து பிள்ளைகளுக்கு மாசா, ஸ்பிரைட், கூல் காபி என்றால் எங்களுக்கு குண்டுப்பானையில் காத்திருக்கும் க.கா. தான். ஆனால், அதில் 20 மில்லி குறைந்தாலும், உடன்பிறந்தவர்களுடன் போடும் சண்டை, இரவு சாப்பாட்டுக்காக தொட்டுக் கொள்ள கொண்டு வந்த 100 கிராம் பக்கோடாவில் ஒரு பீஸ் எக்ஸ்ட்ராவாக அவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் வகையில் நீடிக்கும். பல சமயங்களில் அடுத்தநாள், ஒருவருக்கு முந்தி மற்றொருவர் அதே அளவை கூட எடுத்துக் கொண்டு குடிக்கும் வரையிலும் நீடிக்கும்.
க.கா.வுக்கு முக்கிய இன்கிரிடென்ஸான கருப்பட்டி பல ஊர்களில் தயாரிக்கப்பட்டாலும், நெல்லை பக்கத்தில் இருந்து வரும் சிறுவட்டு கருப்பட்டி நன்றாக இருக்கும். இதை விற்பதற்கென்றே மதுரை தேர்முட்டியில் பல செட்டியார் கடைகள் உண்டு.
ஒரு மாசத்துக்கு ஒரு முறை அம்மா, மொத்தமாக கருப்பட்டி பொட்டியை வாங்கிவிடுவார்கள்.
‘‘என்னாப்பா… வட்டு ரொம்ப ஈரமா இருக்கிற மாதிரி தெரியுது’’ என்பது, எப்போதுமே கருப்பட்டியை வாங்கும்போது அம்மா கேட்கும் வழக்கமான டயலாக்.
உடனே கடைக்காரர், ஓலைப்பொட்டியில் இருந்து ரெண்டு கருப்பட்டி வட்டை, இந்த கையில் ஒன்றும், அந்த கையில் ஒன்றுமாக எடுத்து, டமால் என இரண்டின் முனையிலும் அடிப்பார். அது உடையாமல் இறுகி இருந்தால், அதன் முனைகள் மட்டும், இப்போதை நெஸ்கபே காபியின் நிறத்தின் நொருங்கும். உடைந்துவிட்டாலும் பதம் சரியில்லை என்று அர்த்தம். வட்டு சப்பையாகிவிட்டாலும் சரியில்லை என்று அர்த்தம்.
அம்மாவின் ஒரு டயலாக்கில், ஒட்டுமொத்த வட்டின் தரமும், வெளிப்பட்டு விடும். நாசா உத்தரவு கூட இந்த அளவுக்கு துல்லியமாக இருக்காது.
வட்டு சரியாக இருந்தால், ஒலைப்பொட்டி சடம்பு அல்லது தேங்காய் நார் கயிரால் கட்டித்தரப்படும். அதன் மேல் பிளஸ் குறியில் செல்லும் கயிரை நேக்காக விரல்களின் வசத்தில் பிடித்து தோளில் தூக்கிக் கொண்டு வந்தால், 5 பைசா அம்மாவிடம் இருந்து பரிசாக கிடைக்கும். இல்லாவிட்டால், அப்பா ராஜபாளையம் போய்விட்டு வழியில் சிரிவில்லிபுத்தூரில் இருந்து வாங்கிவரும் பால்கோவாவில் போடப்படும் ஆறு துண்டில், அம்மாவின் பங்கு எனக்கு கிடைக்கும்.
அடுத்தது காபித்தூள்.
காபி கொட்டைகளை வாங்கிவந்து வறுத்து, அரைப்பது எல்லாம் எங்கள் காலத்தில் ஓல்டு பேஷனாகிவிட்டது. லேம்பியில் இருந்து பிரியாவுக்கு மாறிவிட்ட பின்னர், இதெல்லாம் சுத்த போராகிவிட்டது.
நேராக நரசுஸ் காபிக்கடைக்கு இரவு 8 மணிக்குள் சென்றால், 10 ரூபாய்க்கு 100 கிராம் காபி பவுடர், டிரேசிங் பேப்பரால் செய்த கவரில் வைத்து அடைத்து, பின்போட்டால் காபியில் கலந்துவிட வாய்ப்புள்ளது என்பதால், அந்தக்காலத்திலேயே முன்னெச்சரிக்கையாக, காகித டேப்பை தண்ணீரில் தடவி ஒட்டிக் கொடுப்பார்கள். 8 மணிக்கு பின்னர் ஒரு நிமிடம் தாமதமாக போனாலும் காபி பவுடர் கிடைக்காது. அவ்வளவு ஸ்டிரிக்ட் நரசுஸ் காபி கடைகளில். இப்போது அதெல்லாம் இல்லை.
கொண்டு வந்த வட்டுகளில் ஒன்றை எடுத்து, கல்லைக் கொண்டு அடித்தால் நான்கு துண்டுகளாக பிரியும். அதை அப்படியே தண்ணீரில் போட்டு பானையில் கொதிக்க வைப்பார்கள். அது நன்கு கரைந்து கொதிக்கும்போது ஒரு மனம் வரும். அப்போது நரசுஸ்சை எடுத்து 2 ஸ்பூன் போட்டு போட்டு மீண்டும் மூடிவைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்தால் காபி மனம், ஊரே மணக்கும்.
அந்த கலவை அப்படியே அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து 5 நிமிடம் ஆறவிட்டால், காபித்தூள் மற்றும் செடிமண் எல்லாம் கீழே தங்கும். இந்த இடைப்பட்ட வேளையில், பாலை இன்னொரு பானையில் காய்ச்சி 1க்கு 5 என்ற ரீதியில் பானையில் எடுத்துக் கொண்டு, டிகாஷன் காபி பானையை ஆட்டாமல், அதன் மேல் உள்ள காபி வடிநீரை மட்டும் பாலில் சேர்க்க வேண்டும். ஆகா… ஆகா… இரண்டு கலக்கும்போது, புதுப்பெண்ணும், மணமகனுக்கு இடையே திருமண மேடையில் இருக்கும் குதுாகலம் குடிப்பவர்களிடமும், கலக்கும் டிகாஷன் மற்றும் பாலிலும் தெரியும்.
டிகாஷனில் கீழே கிடக்கும் வண்டல் தேவையில்லை, அதை ரோஜா செடிக்கு ஊற்றினால் நன்கு பூ கொடுக்கும். இது பாட்டி கொடுத்த டிப்ஸ். ஊற்றிவிட்டு, அப்படியே கொஞ்சம் தண்ணீரை கொட்டி கழுவிக் கொண்டு வந்து கொடுத்தால், பெரிய டம்ளரில் ஆவி பறக்கும் காபி தயாராக இருக்கும்.
இதற்கு முன்பு, ப்ரூவாவது, நெஸ்ஸாவது!
-          குடித்து பழகிய ஜே.எஸ்.கே.பாலகுமார்.


26 April 2019

ஓடிப்போயிரலாமா?


ஓடிப்போயிரலாமா?


‘‘சிவகாமி எப்படி இருக்கே?’’ என்று கூறியபடி உள்ளே  நுழைந்தாள், அவளது தோழி  சந்திரா.
‘‘வாடி சந்திரா… நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?’’ வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த சிவகாமி கேட்டாள்.
‘‘எனக்கென்னடி… நான் என்ன உன்ன மாதிரி சென்ட்ரல் கவர்மென்ட் ஆபிஸ்ல ஆபிசரா… ஏதோ இருக்கேன்…’’ என்று இழுத்தாள் சந்திரா.
‘‘ஆமா… நீ மட்டும்தான் கொறைச்சல்… நீயும் சொல்லிட்டியா… நான் பேருக்குத்தான் ஆபிசர். வீட்டுல உன்னை மாதிரி நானும் ஹவுஸ் வொய்ஃப் தானே’’
‘‘ஆமாடி… ஏன் ஒரு வேலைக்காரிய வச்சுக்கிட வேண்டியதுதானே… இந்த வேலைகளை எல்லாம் நீ ஏன் செய்றே?’’
‘‘ஆமா… இங்க என்னத்த வாழுது… வாங்குற சம்பளத்தில பாதி மாமனார் கெழத்தோட மருந்து செலவுக்கு போயிடுது… அப்புறம் புதுசா வாங்குன லேண்ட்டுக்கு டியூ… பொண்ணு ஸ்கூல் பீஸ்… இப்படி சம்பளத்தில எல்லா கரைஞ்சிடுது… அப்புறம் எங்க வேலைக்காரிய வச்சுக்கிறது? மாசத்துக்கு ரெண்டு வாட்டி பியூட்டி பார்லர் போறதுக்கு கூட இங்க எண்ணி, எண்ணி வைக்க வேண்டியிருக்கு.  உனக்கு என்ன…  உன் வீட்டுக்காரர் பெரிய தொழிலதிபர். அவர் சம்பாதிக்கிறார் நீ என்ஜாய் பண்றே’’
உள் ரூமில் இருந்து இருமல் சத்தம் வந்தது.
‘‘உள்ள யாரு…  உன் மாமனாரா?’’ சந்திரா கேட்டாள்.
‘‘ஆமா… அந்த கெழம்தான். இருமி, இருமி உயிர வாங்குது…’’
இருவரும் தங்களது அருமை,  பெருமைகளை பற்றி பேசிக் கொண்டிருக்க… உள் ரூமில் இருந்தபடி காதில் விழுந்த அவர்களின் பேச்சை, கேட்டும், கேட்காமல் புத்தகம் ஒன்றை படித்தபடி கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருந்தார் ராகவன்.
பசி வயிற்றை கிள்ளிக் கொண்டிருந்தது. ஒன்றரை மணியாகியும் இன்னமும் சாப்பாட்டை செய்யும் பணிகளில் எதுவும் மும்முரம் காட்டாமல் மருமகள், தோழியுடன் பேசிக் கொண்டிருந்ததால், பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை குடித்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை கடிகாரத்தை பார்த்தார். வழக்கமாக ஒரு மணிக்கே அவர் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, மாத்திரையை போட்டுக் கொண்டுவிடுவார்.
இன்று சனிக்கிழமை. மருமகளுக்கு விடுமுறை. ஆனால், மகன் சுந்தருக்கு வேலை நாள். அவனுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. மற்ற நாட்களில் காலையிலேயே சாப்பாடு ஆகிவிடுவதால், தானே போட்டுக் கொண்டு சாப்பிட்டுவிடுவார். ஆனால், சனி, ஞாயிறு மருமகளுக்கு விடுமுறை என்பதால், வீட்டில் இருப்பதால், இரு நாட்களிலும் மருமகள் செய்யும்  நேரம் வரை சாப்பாட்டுக்கு காத்திருக்க வேண்டியதுதான்.
இன்று அதிசயமாக 12 மணிக்கே சாப்பாட்டு வேலையை தொடங்குவதற்கான அறிகுறிகளாக பாத்திரங்கள் புழங்கும் சப்தம் கேட்டதால், சரியான நேரத்துக்கு தன்னால் மாத்திரை சாப்பிட்டு விடலாம் என்று நினைத்திருந்தார் ராகவன். ஆனால், மருமகளின் தோழி நுழைந்த சப்தத்தை கேட்டதுமே, அவருக்கு என்றுமில்லாமல், வயிறு முன்கூட்டியே பசி, பசி என்று அலற ஆரம்பித்தது.
ஹாலில் இன்னமும் சுவாரசியமாக தோழிகளின் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.
மணியை பார்த்தார், இரண்டாகி 5 நிமிடம் ஆகியிருந்தது.
இப்போது போய் மருமகளிடம் சாப்பாட்டை கேட்கவும் முடியாது. அப்படியே கேட்டாலும், தன் மானத்தை வாங்கிவிட்டதாக வீட்டை ரெண்டாக்கிவிடுவாள்.
பொறுக்க முடியாமல் இன்னொரு முறை தண்ணீர் குடிக்கலாம் என்று பாட்டிலை எடுக்க முயன்றபோது, கைதவறி கீழே விழுந்தது. அது சில்வர் பாட்டில் என்பதால் விழுந்த வேகத்தில் பெரும் சப்தத்தை எழுப்பியது.
‘‘இந்த கெழத்துக்கு இதே வேலை… நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கி வைக்கிற பொருள எல்லாம், இப்படி பொறுப்பில்லாம கீழே போட்டு உடைக்குது. இரு நான் என்னன்னு போய் பார்த்துட்டு வந்துடுறேன்’’ என்ற கூறிவிட்டு எழ முயன்றாள் சிவகாமி.
‘‘சரிடி… நீ போய் பாரு… நானும் வந்து ரொம்ப நேரமாச்சு… நானும் கிளம்புறேன்… பொண்ணு எங்கே?’’ என்று கேட்டாள் சந்திரா.
‘‘அவ வெளியே விளையாடிக்கிட்டு இருக்கா’’
‘‘சரி மத்தியானம் பார்லர்ல சந்திப்போம்’’ என்று அவளுக்கு விடைக் கொடுத்துவிட்டு, உள்ளே வந்தாள் சிவகாமி.
கீழே விழுந்த பாட்டிலை எடுத்து,  தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார் ராகவன்.
‘‘இதே வேலையா போச்சு… எதையாவது போட்டு உடைச்சுக்கிட்டே இருக்க வேண்டியது… ஏன் தான் என் உயிரை வாங்குறீங்களோ…  எங்கேயாவது ஹோமுக்காவது போய் தொலைய வேண்டியதுதானே…’’ எட்டிப்பார்த்தவிட்டு,  தீக்கங்குகளைவிட மோசமான வார்த்தைகளை கொட்டினாள் சிவகாமி.
காதில்  விழுந்த வார்த்தைகளை கேட்டபோது, ராகவனால் கண்களில் இருந்து தண்ணீரை கொட்ட முடிந்ததே தவிர… இயலாமை, வயது காரணமாக பேச வார்த்தை வரவில்லை. அந்த நேரத்தில்தான் பேத்தி லாவண்யா உள்ளே நுழைந்தாள். தாத்தாவை அம்மா திட்டும் வார்த்தைகள் கேட்டு,  அவளுக்கு பழகிப் போயிருந்தன.
அன்பாக அரவணைத்து, தனக்கு பிடித்த கதைகளை சொல்லும் தாத்தாவை அம்மா திட்டுவது அவளுக்கும் கோபத்தை ஏற்படுத்தும். ஆனால், அம்மாவின் குணம் அவளுக்கும் தெரிந்ததுதானே. அதனால் சத்தமில்லாமல், தாத்தாவின் கட்டிலில் உட்கார்ந்து, ‘‘தாத்தா அழாதே’’ என்று கூறினாள்.
‘‘இல்லடா லல்லி  செல்லம்… தாத்தா அழல… மேல இருந்து தூசி விழுந்துடுச்சு… அதுதான் கண்ணுல இருந்து தண்ணீ வருது…’’ என்று சமாளித்தார் ராகவன்.
‘‘நீ சமர்த்து தாத்தா… நீயும் என்னை மாதிரியே ஆயிட்டே… நானும் அம்மா திட்டும்போது இப்படித்தான் அழமாட்டேன். ஆனா கண்ணுல இருந்து தண்ணீ மட்டும் வருது தாத்தா’’ என்று தன் பிஞ்சு மொழியில் கூறினாள் லாவண்யா.
அவளை  உச்சிமுகர்ந்து முத்தமிட்டு, ‘‘சரி செல்லம்… நீ போய் படி…’’ என்று கூறிவிட்டு, புத்தகத்தில் ஆழ்ந்தார்.
சுவாரசியமாக படித்துக்  கொண்டிருந்தபோது, டேபிளில்  நங்கென்று தட்டு வைக்கப்படும் சத்தம் கேட்டது. மருமகள்தான். தட்டை வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் போய்விட்டாள்.
தட்டைப்பார்த்தார். தனக்கு பிடிக்காத உருளைக்கிழங்கு பொடிமாஸ்,  உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத கருணைக்கிழங்கு காரக்குழம்பும், ரசமும் இரு கிண்ணத்தில் இருந்தன.
நேரத்தை பார்த்தார். 3 ஆகியிருந்தது. இனியும் தாங்க முடியாது என்பதால், ரசத்தை மட்டும் ஊற்றிக் கொண்டு முழுங்கினார். தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமல் சாப்பாடு தொண்டையில் இறங்க மறுத்தது. தண்ணீரை குடித்து சமாளித்தார். மிச்சம் வைத்தால் அதற்கும் திட்டு விழும். அதனால் மீதமிருந்த எல்லாவற்றையும் சேர்த்து ஜன்னல் வழியாக தூக்கிப்போட்டார். பேஷினில் தட்டை கழுவி ஹாலில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, மீண்டும் தன் அறையில் முடங்கினார்.
5 நிமிடம்தான் ஆகியிருக்கும்.
கிரவுண்ட் புளோரில் இருக்கும் புஷ்பம் கத்திக் கொண்டே உள்ளே வந்தாள்.
‘‘ஏய் சிவகாமி… நீ ஆபிசர்ங்கறதுக்காக எங்க வீட்டு பின்னாடியா மிச்சத்தை வீசுவியா… எங்கேடி இருக்கே…’’ என்று ஹாலில் நின்று கத்தினாள்.
உள்ளே இருந்து வெளியே வந்த சிவகாமி, ‘‘என்னக்கா என்ன ஆச்சு?’’ என்று கேட்டாள்.
‘‘ஏண்டி… உங்க வீட்டுல சாப்பிட்ட மிச்சத்தை எங்க வீட்டுக்கு  பின்னாடி ஏன் வீசுற? என்ன கொழுப்பாகி போச்சா…’’ என்று பத்து வீட்டுக்கு கேட்கும்படி கத்தினாள்.
‘‘நாங்க ஒண்ணும் வீசலேய்யக்கா…’’ என்றாள் சிவகாமி.
‘‘ஏண்டி கீழே வந்து விழுந்த மிச்சத்தை என் பசங்க பார்த்துட்டு, மேல பார்த்தப்போ உங்க வீட்டுல இருந்துதான் கை தெரிஞ்சிருக்கு. அவங்க பார்த்துட்டு இருக்கிறப்போவே… இன்னொருதடவையும் மிச்சம் வந்து விழுந்திருக்கு’’
நிலவரத்தை புரிந்து கொண்ட ராகவன் ஓடி வந்தார்.
‘‘அம்மா…   அம்மா…  என் மருமக எதையும் வீசலமா… இந்த பாவி தான் சன்ஷேடுல விழும்னு நினைச்சு வீசிட்டேன்மா… என்னை மன்னிச்சிடுங்க…’’  என்று இருகரம் குப்பி மன்னிப்பு கேட்டார்.
ஏற்கனவே ராகவனுக்கு கிடைக்கும் மரியாதை, அந்த பிளாட்டில் இருந்த அனைவருக்குமே தெரியும். ஒரு காலத்தில் பிளாட் செகரட்டரியாக கம்பீரமாக வலம் வந்தவர். அவர் செகரட்டரியாக இருந்தபோதுதான், புஷ்பத்தின் கணவர் வீடு வாங்கி வந்தார். அந்த மரியாதை கொஞ்சம் இன்னமும் மிச்சம் இருந்தது.
அந்த மரியாதையில் பின்வாங்கினாள் புஷ்பம். ‘‘சார் இந்த மாதிரி எல்லாம் கீழே வீசாதீ்ங்க…’’ என்று எச்சரித்துவிட்டு அகன்றாள்.  அதற்குள் பக்கத்து பிளாட்காரர்கள் எல்லாம் எட்டிப்பார்த்துவிட்டதில்,  சிவகாமிக்கு அவமானமாக போய்விட்டது.
‘‘யோவ்… நீ எல்லாம் மனுஷனா? கஷ்டப்பட்டு சமைச்சுக் குடுத்தா… அதை கீழே கொட்டியிருக்கே… உனக்கு எல்லாம் மானம், ரோஷம்னு எதுவும் கிடையாதா? நீ எல்லாம்  எதுக்கு இன்னும் உயிரோட இருக்கே… ஆபிஸ்ல நான் நடந்தா எதுக்க வர்றதுக்கே பயப்படுவாங்க… அப்படிப்பட்ட என் மானத்தை எல்லார் முன்னாடியும் வாங்கிட்டியே... உன் பைய கட்டிக்கிட்டு வந்து நான் படுற பாடு போதாதுன்னு, இப்போ அக்கம், பக்கத்தில எல்லாம் மானத்தை வாங்கிட்டியே… நீ எல்லாம் இருந்து யாருக்கு என்னப் பண்ணப்போற… செத்து தொலைக்க வேண்டியதுதானே?’’ ஊரே கேட்கும் அளவிற்கு கத்தினாள் சிவகாமி.
இதுவரை, ஒருமையை மட்டும்தான் அவள் பயன்படுத்தவில்லை. இப்போது அதையும் பயன்படுத்திவிட்டாள். என்ன பதில் கூறுவது என்று தெரியாமல், ‘‘என்னை மன்னிச்சுடும்மா…’’ என்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தார்.
ஆனால், தொடர்ந்து கேட்கக்கூடாத வார்த்தைகளை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள் சிவகாமி.
அரைமணி நேரம் ஆகியிருக்கும். ஹாலில் இருந்து மீண்டும் மெதுவாக அறைக்குள் எட்டிப்பார்த்தாள் லாவண்யா.
கண்ணில் முட்டிக் கொண்டு வந்துக் கொண்டிருந்த கண்ணீரை அவளுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டார் ராகவன்.
‘‘வாடா செல்லம்…’’
‘‘தாத்தா உனக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாது’’
‘‘ஏண்டா…  செல்லம்  இப்படி சொல்றீங்க?’’
‘‘அம்மா இவ்வளவு திட்டுதில்ல… நீ போடி உன் வேலைய பார்த்துட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே தாத்தா?’’
‘‘அம்மா பெரியவங்க இல்ல… அவங்கள எல்லாம் அப்படி சொல்லக்கூடாதும்மா’’
‘‘அப்போ… நீயும் தானே பெரியவங்க… உன்னை மட்டும் அம்மா திட்டுது’’
‘‘புஷ்பம் ஆன்ட்டி வந்து திட்டினாங்கல்ல… அதனால அம்மாவுக்கு கோபம் வந்து நாலு வார்த்தை பேசிட்டாங்க… அதை எல்லாம் பெருசு பண்ணக்கூடாதும்மா… தாத்தாவும் தப்பு பண்ணியிருக்கேன்ல’’
‘‘தாத்தா அன்னைக்கு அம்மாவும் கூடத்தான். ஜன்னல் வழியாத்தான் மிச்ச இட்லிய தூக்கிப்போட்டாங்க… அப்போ அவங்களையும் திட்டணும்ல?’’
‘‘அம்மா தெரியாம பண்ணிருப்பாங்கடா… தாத்தா தெரிஞ்சே பண்ணேண்ல… அதனாலதான் இந்த திட்டு’’
‘‘போ …  தாத்தா…  நீ எப்பவும் இப்படித்தான் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணிப்பேசுற… நான் உன்கிட்ட சிக்ஸ்த் டேபிள் வரைக்கும் நல்லா ஒப்பிச்சேன்ல… ஆனா… அம்மாகிட்ட ஒப்பிக்கிறப்போ… பயத்தில தப்பு வந்திடுச்சு… அதுக்காக என்னையும் போட்டு அடி, அடின்னு அடிச்சிட்டா… அவ பேட் மம்மி…அப்பாவும் அவள எதுவும் கேட்கிறதில்ல’’
‘‘இல்லடா கண்ணு… நீ ஸ்கூல்ல போய் டீச்சர் கிட்ட அடிவாங்கக்கூடாதுன்ற நல்லெண்ணத்தில,  நீ நல்லா படிக்கணும்கிறதுக்காக அம்மா உன்னை அடிச்சிருக்காங்க… அதை தப்பாக எடுத்துக்க கூடாது செல்லம்’’
‘‘போ தாத்தா… நீ எப்பவும் இப்படித்தான் சொல்லுற’’ என்று அன்று அடித்த அடிக்காக தாத்தாவிடம் இன்று அழுதாள் லாவண்யா.
‘‘என் குட்டிம்மால்லே… நீங்க ரொம்ப தைரியமானவங்க இல்ல அழக்கூடாது’’ என்று கண்ணீரை துடைத்துவிட்டார் ராகவன்.
‘‘தாத்தா… என் கிட்ட ஹண்ட்ரட் ருபீஸ் இருக்கு… உன்கிட்ட ஹண்ட்ரட் ருபீஸ் இருக்குல்ல… நாம ரெண்டு பேரும், இந்த வீட்டை விட்டு ஓடிப்போயிருவோம் தாத்தா… நம்மகிட்ட இருக்கிற ருபீஸ்ல பெரிய வீடு ஒண்ணா வாங்கி நீயும்,  நானும் இருக்கலாம். பேட் மம்மிய சேர்க்க வேணாம். டேடி மட்டும் வந்தா ஒரு ரூம் குடுத்திடலாம்… சரியா?’’ என்று பெரிய, பெரிய, வார்த்தைகளை கூறினாள்.
‘‘உதைபடுவீங்க… இப்படி எல்லாம் பேசக்கூடாது செல்லம்’’
‘‘நீ ரொம்ப கோவர்ட் தாத்தா… போ…’’ என்று கோபத்துடன் எழுந்து சென்றுவிட்டாள் லாவண்யா.
அவளுடைய கோபம் உள்ளுக்குள் பயத்தைதான் ஏற்படுத்தியது ராகவனுக்கு.
சற்று நேரத்தில் லாவண்யாவை அழைத்துக் கொண்டு பார்லருக்கு கிளம்பினாள் சிவகாமி. வீட்டை வெளியே பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் வழியாகக உள்ளே வீசிவிட்டு சென்றாள். வழக்கமாக அவள் செய்வதுதான்.
சாவியை எடுத்து கொக்கியில் மாட்டிவிட்டு, சோபாவில் கிடந்த அன்றைய செய்தித்தாளை எடுத்து மீண்டும் படிக்க ஆரம்பித்தபோதுதான் அந்த விளம்பரம் அவரது கண்ணில் பட்டது.
சற்று நேரம் அதையே படித்துக் கொண்டிருந்தார்.  பின் ஒரு முடிவுக்கு வந்தவராக ஒரு வெள்ளை பேப்பரில் எழுத ஆரம்பித்தார்.
‘‘அன்புள்ள மகன்  சுந்தருக்கு,
ஆசிர்வாதத்துடன் அப்பா எழுதிக் கொள்வது. நீ சிவகாமியை காதலித்து திருமணம் செய்து வந்தபோது,  உன் மணவாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று நினைத்தேன்.  ஆனால், அதிர்ஷ்டவசத்தால் புஷ்பத்துக்கு  உயர் பதவியில் வேலை கிடைத்துவிட, அவளது உயர்வகுப்பு தோழிகளின் நட்பும், அதிகார பலமும் சேர்த்து அவளுக்கு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்த உன் மீதான காதல் சற்று குறைந்து, தனக்கு கீழே சம்பாதிப்பவன் என்பதுபோன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டுமின்றி, வசதியான வீட்டில் இருந்து வந்த சிவகாமிக்கு, நடுத்தர குடும்பத்தின் கஷ்டங்கள் பழக்கப்படாதது. இதனால் அவளது  இயலாமை உன் மீதும் என் மீதும், ஏன் குழந்தை மீதும் பாய்கிறது. நான் வீட்டில் இருப்பதால்தான் உனக்கு கூடுதல் செலவு. அதனால் நான் வேலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். வேலை என்றால், சாதாரண வேலை இல்லை. சர்வதேச மருந்து நிறுவனம் ஒன்று, என்னைப்போன்ற வயதானவர்களுக்கு வரும் நோய்களை கண்டறிவதற்காக வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ளப் போகிறது. அதற்கு தன்னார்வலர்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து இருந்தது. குறிப்பாக ஆதரவற்றவர்கள் தேவை என்று கூறியிருந்தது.
உன் அம்மா போன பிறகு, நான் நிராதரவாகத்தானே இருக்கிறேன். அதனால் அந்த நிறுவனத்துக்கு போன் செய்து பேசினேன். அவர்கள் உடனே கிளம்பி வரச் சொல்லிவிட்டார்கள். அவர்களே வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு சாப்பாடு போட்டு பார்த்துக் கொள்வார்கள். நோய் வந்தால், அவர்களே மருந்தும் தருவார்களாம். இதற்காக ஐந்து லட்சம்  ரூபாய் தருவார்களாம். அதை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.
உனக்கு எந்த கஷ்டமும் இருக்கக்கூடாது என்பதற்காக, இந்த வீட்டை வாங்கும்போதே உன் பெயரில்தான் வாங்கினேன். அதனால் எந்த தொந்தரவும் இல்லாமல் வீட்டை நீ அனுபவிக்கலாம். இதற்கான கடனில் ஒரு லட்சம் மட்டும் பாக்கி இருக்கிறது. அதை கட்டிவிட்டு,  மீதமுள்ள பணத்தில் லாவண்யா பெயரில் டெபாசிட் போட்டு வைத்துக் கொள். திருமணத்தின்போது உனக்கு உதவும். இனி என்னால் உனக்கு எந்த செலவும் இருக்காது. உன் மனைவிக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. எனக்காக நீயும் மனைவியிடம் பேசி, மனஸ்தாபத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. தயவு செய்து  என்னை தேடி அலையும் வேலையை செய்யாமல், உன் மனைவி,  குழந்தையுடன் அன்பான வாழ்க்கை வாழு.
லாவண்யா நன்கு படிக்கும் குழந்தை. அவளுக்கு பயம் வந்தால் திக்குகிறது. அவளிடம் அன்பாக பேசி படிக்க வை. அவள் நல்லபடியாக வருவாள். இனி என்னால், உனக்கும், சிவகாமிக்கும் எந்த சண்டையும் வராது. எனது மனமுவர்ந்த ஆசிர்வாதங்கள்!
அன்புடன்,
ராகவன்’’
கடிதத்தை முடித்துவிட்டு ஒரு முறை படித்தார். அதை அப்படியே மடித்து டேபிளில் வைத்துவிட்டு, ஒரு சின்ன பையில் தன்னுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார் ராகவன்.