17 February 2019

உடலையும் மனதையும் வருடும் தமாரா கூர்க்

இரண்டு சுண்டு விரல்கள் அளவுக்கு ஒரு பறவை. கிரீச், கிரீச் என்று அவைபோடும் சத்தம், அந்த அதிகாலைவேளையில் மனதை வருடும் ஒரு இன்பம்.ஜோடியுடன் காலைவேளையிலேயே இரைத்தேட கிளம்பும் இரட்டை வால் பறவை. பஞ்சவர்ண கிளிக்கு தங்கை என்றுசொல்லப்படும் பல்வேறு நிறம்கொண்ட அளவில் சிறிய கிளி… இப்படி அதிகாலைவேளையில் பறவைகளின் இசைக் கச்சேரியையும், மலைகளில் இருந்து புகுந்து வரும் காற்றின் புனலோசையும்சேர்ந்து, ஒரு டிசம்பர் மாத ஆனந்த கச்சேரியை அரங்கேற்றுவது இயற்கை அதிசயம். அத்துடன் காட்சியை ரசிக்க வருபவர்களை வருடிச்செல்லும் வெண்பஞ்சு பனி, காதலியின் கைவிரல்பட்ட சிலிர்ப்பை ஏற்படுத்தும்கொஞ்சல். இவை எல்லாம், கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள தமாரா ரெசார்ட்டில் கிடைக்கும், இயற்கை அன்னையின் பரிசுகள்.
கர்நாடகாவின் மைசூர் அல்லது கேரளாவின் குன்னூரில் இருந்து சுமார் இரண்டரை மணிநேரத்தில் வருகிறது இந்த ரெசார்ட். காசு கொடுத்து வருபவர்கள் தானே என்ற அலட்சியம் எல்லாம் இங்கு கிடையாது. காந்தியின் பொன்மொழியைபோன்று வாடிக்கையாளர்களே இங்கு தெய்வமாக பார்க்கப்படுகின்றனர். இதனால் ரெசார்ட்டில் உள்ளே நுழைந்த உடனேயே ஆரத்தி எடுத்து வரவேற்கப் படுகின்றனர் பயணிகள். அடுத்ததாக மூக்கையும், மனதையும் கவரும் நறுமனம் கொண்ட மலர் மாலை அணிவிக்கப்படுகிறது. மலை முழுவதும் காபி தோட்டம், அப்புறம் நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஏன், உடலை கெடுக்கும் வேதிப்பொருட்கள் கொண்ட செயற்கை பானங்கள்? அதனால் சுடச் சுடச் கருங் காபி கோப்பை நிறைய வழங்கப்படுகிறது. அந்த குளிர் மலைப் பிரதேசத்தில் ஆவி பறக்கும் அந்த கருங்காப்பி, உடலை மேலும் புத்துணர்வு அடையச்செய்வது இயற்கையே.
அடுத்து காபி தோட்டத்தின் பாதையில்நெடிதுயர்ந்த மரங்களுக்குபோட்டியாக அமைக்கப்பட்ட மரத்தூண்களின் மேல் அமைக்கப்பட்ட காட்டேஜூக்கு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பேட்டரி வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விடப்படுகின்றனர். ஒரு வானந்திரப் பகுதியில், அனைத்து நவீன வசதிகள் அடங்கிய காட்டேஜ் வியக்கத்தான் வைக்கும். இரண்டுபேர் தங்குவது முதல் 6பேர் தங்குவது வரையிலான காட்டேஜ்கள் வசதிக்கு ஏற்ப கிடைக்கின்றன. காட்டேஜ்ஜில் ஆளை சுருங்க வைக்கும் குளிர் நிலவுகிறது. ஆனாலும், கூட அங்கு ஏசி,பேன் போன்ற வசதிகளும், சுடச்சுடச் காபி செய்துக்கொள்வதற்கு ஏற்ப, அங்கேயே அரைத்து தயாரிக்கப்பட்ட காபித்தூள் உட்பட,டீ, குளிர்பானங்கள்,சோமபானங்கள் என்று அனைத்தும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. பால்கனியை திறந்தால் விசாலமாக படுத்துக்கொள்ள ஓய்வு எடுக்க மூங்கில் ரெஸ்டிங் காட்,சேர் ஆகியவை போடப்பட்டுள்ளன. சுற்றிலும் வானுயர்ந்த மலை, கீழே எட்டிப்பார்த்தால், அதல, பாதாளம். அப்போதுதான் தெரிகிறது. மரங்களுக்கு போட்டியாக அமைக்கப்பட்ட காட்டேஜின் பிரமாண்டம்.
அதிகாலையிலேயே பறவைகளை காண அழைத்து செல்கின்றனர்.கைதேர்ந்த நிபுணர், வாடிக்கையாளர்கள் அனைவரது கைகளிலும் நவீன பைனாக்குலரை தந்துவிடுகிறார். அந்த அதிகாலைவேளையிலும் மனிதர் கனகச்சிதமாக பறவையை கண்டுபிடித்து அவை இருக்கும் இடத்தை துல்லியமாக குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு காட்டுகிறார். புரியாதவர்களுக்கு கையிலேயே புத்தகத்தை கொண்டு வந்து, அதில் இருக்கும் படத்தை காட்டித் தெளிவாக விளக்குகிறார். இந்த அதிகாலை பறவைகள் பார்க்கும் நடை, சுமார் ஒன்றரை மணிநேரம் நடக்கிறது. அதன்பின்னர் சுடச் சுடச் நீராவிக் குளியல் எடுத்துக்கொண்டு,வெப்பநிலை பராமரிக்கப்படும் நீச்சல் குளத்தில் கும்மாளமிட்டு வெளியே வந்தால்… அதேதான், வயிற்றில் கபகபவென பசி.
உணவகத்துக்கும் கூடபேட்டரி காரிலேயே அழைத்துச் செல்லப்படுகின்றனர். வலது பக்கத்தில் பாய்ந்து விழும் நீர்வீழ்ச்சிக்கு இடையே மனதுக்கு பிடித்தமான உணவு வகைகளைகேட்டு வாங்கி சாப்பிடலாம். தலைமை செப் சஞ்சய் வாடிக்கையாளர் எந்த மாநிலத்தில் இருந்து வந்திருந்தாலும், எந்த மாநிலத்தில் இருந்து வந்திருந்தாலும், அவர்கள்கேட்கும் உணவு வகைகளை அதிகபட்சம் 20 நிமிடத்தில் சமைத்து தருவது அதிசயம் தான். காலை 7.30 மணிக்கே, சுடச்சுடச் கூர்க் சிக்கன் கறி, மட்டன் கறி, கப்பா புட்டு, அரிசியில்செய்த சப்பாத்தி, சூப் வகைகள்,பொங்கல், பூரி என்று நாக்கில் எச்சில் ஊறும் அனைத்து வகை உணவுகளும் கிடைக்கிறது. பொறுமையும், உணவின் மீது ரசிப்புத் தன்மையும்கொண்டவர்களுக்கு இது ஒரு சொர்க்கபுரி.
மதியமும் இதே தான். அசைவ உணவில் ஊர்வன, பறப்பன, மிதப்பன முதல்,சைவத்தில் கொத்தமல்லி துவையல் முதல் முழு காலிப்பிளவரை மசாலா போட்டு, எண்ணெய்யில் வறுத்தெடுத்துகொடுக்கும் உணவு வரை எல்லாமே கிடைக்கிறது.
இரவில் அருவியை பார்த்தபடி,சோமபானம் அருந்திக் கொண்டே (ஒரு சுமால் ரூ.200 முதல் ரூ.4,000) மட்டனையும், சிக்கனையும்வெட்டுபவர்கள் இடையே, தக்காளி சூப்பையும்,பைனாப்பிள் ஜூசையும் மிளகு அப்பளம், ஜவ்வரிசி வடாகத்துடன் சாப்பிட்டு ‘போதை’ ஏற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இங்கு மது பானங்களுக்கு மட்டும் தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாலையில், முன்பதிவு செய்துக் கொண்டு ஸ்பாவுக்கு சென்றால், அவர்களின் உடல் நலத்துக்கு ஏற்ப பல்வேறு விதமான மசாஜ்கள் நிபுணர்கள் மூலம் ஆண்,பெண்களுக்கு தனித்தனியாக செய்யப்படுகின்றன. உண்மையிலேயே பயிற்சிபெற்ற நிபுணர்கள் என்பதால், உடல்வலி குறைந்து போவதை கண்கூடாக உணர முடிகிறது.
இதேபோல், வாடிக்கையாளர்களில் பெண்களுக்கு மாலையில் சமையல் வகுப்பறை நடக்கிறது. விருப்ப பப்பட் ஆண்களும் இதில் கலந்துக் கொள்ளலாம். பாரம்பரிய அசைவ, சைவ உணவுகளை ருசியுடன்செய்ய கற்றுத்தரப்படுகிறது. சமையல் வகுப்புக்கு பின்பு யோகாசனம் வகுப்பு நடக்கிறது.
திடகாத்திரமான ஆண்,பெண்களுக்கு இங்கு மலையேற்ற பயிற்சியும் நடக்கிறது.
மனதுக்கு புத்துணர்ச்சியை அள்ளித்தரும் இன்னொரு விஷயம். தாவரங்களுக்கு இடையிலான நடை. பிளானடேஷன் வாக் என்றபெயரில் அழைத்துச் செல்லப்படும் இந்த நடையில், டார்ச் ஜின்சர், எலிபென்ட் பனானா, ஒற்றை முக ருத்திராட்சம், காபி வகைகள் என்று காணக்கிடைக்காத தாவர,செடி,கொடி வகைகளை காண முடிகிறது. ஒரு சிறந்த காபித்தூளை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் கற்றுத் தரப்படுகிறது.
இந்த காபி தோட்டத்தில் ஒரு பிடிசெயற்கை உரம் கூட பயன்படுத்தப்படுவதில்லை என்பதுடன், குப்பைகள் அனைத்தும் மக்கச்செய்து இயற்கை உரமாக்கப்படுகின்றன. அசைவபொருட்களை தவிர பெரும்பாலான உணவுப்பொருட்கள் இங்கேயே விளைவிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. பாலுக்காகவே ஒரு கோசாலையும் பராமரிக்கப்படுகிறது.
இரண்டு நாட்கள் இங்கு தங்கினாலும், அடுத்து ஓராண்டுக்கு மனதுக்கும், உடலுக்கும்தேவையான சக்தியை மீண்டும் ரீசார்ஜ் ஆகிவிடுகிறது என்றால், அது மிகையில்லை. நகர இரைச்சல், படபடப்பு வாழ்கை, எந்திர கதியான உணவு ஆகியவற்றில் இருந்து விடைபெற்று, மனதிற்கு பிடித்த காட்சிகள், மனம் விட்டுபேசவும், நடைபோடவும், உண்ணவும் நிம்மதியான ஒரு இடம் தமாரா கூர்க்.
- கட்டுரையை பிரசுரித்த தினகரன் நாளிதழுக்கு நன்றி . ஜே.எஸ்.கே.பாலகுமார்.