25 June 2019

#செல்லங்கள்


செல்லங்கள்!


பி2 போலீஸ் ஸ்டேஷன் பரபரவென்று இருந்தது.
வழக்கம்போல் ஸ்டேஷன் வாசலில் இருந்த கம்பத்தில் இருந்து மாலைநேரத்து தேசிய கொடியிறக்க நிகழ்ச்சிக்காக போலீசார் தயாராகிக் கொண்டிருந்தனர்.
போலீசார் அனைவரும் கொடிக்கம்பத்தின் முன்பு நிற்க, அவர்களுக்கு தலைமை வகிக்கும் வகையில் எஸ்ஐ ஞானப்பிரகாசம் நின்றார்.
‘‘நேஷனல் பிளாக் சல்யூட்’’ என்று குரல் கொடுத்துவிட்டு, காவலர் ஒருவர் சிறிய பேண்ட் வாத்தியத்தில், கொடியிறக்க  இசையை  ஊதினார்.
அனைத்து காவலர்களும் கொடியை பார்த்தபடி சல்யூட் அடித்து நிற்க போலீஸ்்காரர் ஒருவர் கொடிக்கம்பத்தில் இருந்து, தேசியக் கொடியை இறக்கினார்.
ஸ்டேஷன் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குப்பத்து சிறுவர்கள், பேண்ட் வாத்திய இசையைக் கேட்டதும், சல்யூட் அடித்து நின்றனர்.
கொடியிறக்கப்பட்டதும், போலீசார் அனைவரும் அவரவர் நிலைக்கு வந்தனர்.
‘‘யோவ் நாளைக்கு சுதந்திரம் காலையில 7 மணிக்கு எல்லாம் கொடி ஏத்திடணும்னு இன்ஸ்பெக்டர் சொல்லியிருக்கார். எல்லா சாமானையும் வாங்கி வச்சிட்டீங்க இல்லே?’’ என்று கான்ஸ்டபிள்களை பார்த்து கேட்டார் எஸ்ஐ ஞானப்பிரகாசம்.
‘‘ஆமாங்கய்யா… சட்டையில குத்திக்கிற கொடிக்கட்டு 2, புதுக்கயிறு எல்லாம் வாங்கியாச்சுங்கய்யா… புதுக்கொடி ஏத்தினா…கஞ்சி போட்டிருக்கிறதால சரி்யா விரிஞ்சு நிற்காது… அதனால பழகுறதுக்காக இன்னைக்கே புதுக்கொடியை கம்பத்தில ஏத்தி வச்சிருந்தோம். இதோ… அதை நல்லா மடிச்சு வச்சிடுறேன்யா’’ என்றார் ஏட்டு மூத்தவரான ராமலிங்கம்.
‘‘சரி… எல்லோரும் நாளைக்கு காலையில சீக்கிரம் அசம்பிள் ஆயிடுங்க… எந்த காரணத்தையும் சொல்லிட்டு லேட்டா வரக்கூடாது… அப்புறம் இன்ஸ்பெக்டர் என்னைப்பிடிச்சு திட்டிட்டு இருப்பாரு… சரியா…?’’ என்று கூறியவாறு ஸ்டேஷன் உள்ளே நடந்தார் ஞானப்பிரகாசம்.
‘‘யோவ் சுந்தரம் கொடிய பத்திரமா மடிச்சு… கப்போர்டில வச்சிடு…. பூக்காரம்மா இன்னைக்கே உதிரிப்பூ குடுத்திட்டு போயிடிச்சு… அதை தண்ணி தெளிச்சு… அதையும் கப்போர்டில  வச்சிடு…’’ என்று உத்தரவிட்டு, ராமலிங்கம் தொப்பியை கழற்றியவாறு உள்ளே சென்றார்.
வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தபடி கொடியை பத்திரமாக மடக்கி, ஸ்டேஷனுக்கு வலப்புறம் ஜன்னலுக்கு அருகில் வெளியில் இருந்த கப்போர்டில் வைத்தார் சுந்தரம். அருகில் இருந்த பானையில் இருந்து தண்ணீரை எடுத்து பூ கவரில்  தண்ணீரை தெளித்து, அதையும் உள்ளே வைத்தார். ஒருமுறை எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டு, பின்பு கப்போர்ட்டை  சாத்தினார்.
அதிகாலை 5 மணி.
எங்கோ நாய் ஒன்று ஊளையிடும் சத்தம் மெலிதாக கேட்டது. கீழ்வானம் கிழவி துப்பிப்போட்ட வெத்திலைப்பாக்கு போன்று விடியலின் அறிகுறியாக சிவப்பாக காணப்பட்டது.
ஸ்டேஷனில் வாசலில் பாரா போலீஸ்காரர் தூங்கி வழிந்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது எழுவதும், மீண்டும் மெதுவாக கண் அசத்தினால் தூங்குவதுமாக இருந்தார்.
‘‘டேய் பிளானை ஒரு முறை சரிபார்த்துக்கலாம் வாங்கடா’’ என்றான் மணி.
எல்லோரும் கிரிக்கெட் வீரர்களை போன்று தோள்மேல் கைகளை போட்டுக் கொண்டு குனிந்து 5 சிறுவர்களும் ஆலோசித்தனர்.
‘‘டேய் விஷ்ணு, மதி, அன்பு நான் சொன்னது புரிஞ்சது இல்ல?’’ கேட்டான் மணி.
‘‘ஸ்டேஷனுக்கு பின்னாடி தானே கம்பத்தை போட்டு வச்சிருக்கீங்க?’’ மணி இன்னொரு முறை கேட்டான்.
‘‘ஆமாண்டா நேத்து ராத்திரியே நானும் அன்பும் கொண்டு வந்து ஸ்டேஷனுக்கு பின்னாடி போட்டுட்டோம்’’ என்றான் பரத்.
‘‘சரி… பிளான்ல இறங்கலாமா?’’ கேட்டான் மணி.
மூன்று பேரும் சேர்ந்து கட்டை விரலை  உயர்த்திக் காண்பித்தார்கள்.
பின்னர்,  நால்வரும் ஸ்டேஷனை நோக்கி வந்தார்கள்.
ஸ்டேஷன் காம்பவுண்டு வாசலில் பாரா போலீஸ்காரர் அரைத்தூக்கத்தில் இருந்தார்.
அருகில் ஆள்அரவம் கேட்கவே எழுந்து பார்த்தார். குப்பத்து சிறுவர்கள் செல்வதைப் பார்த்து மீண்டும், அமைதியானார்.
அவர் எழுந்ததை பார்த்ததும், காலை நேரத்தில் ஸ்டேஷனுக்கு பின்புறம் இருக்கும் காட்டுப்பகுதிக்கு காலைக்கடன் கழிக்க செல்வதைப்போல் தேமே என்று நடந்து சென்றனர் சிறுவர்கள்.
போகும்போதே ஸ்டேஷனில் நோட்டம் விட்டனர். யாரும் விழித்திருப்பது போல் தெரியவில்லை. ஸ்டேஷனில் மட்டும் ஒரு டியூப்லைட் இப்போது உயிரை விடுமா, அப்புறம் விடுமா என்பதுப்போல், இருபுறமும் கருத்தும் எரிந்து கொண்டிருந்தது.
ஸ்டேஷன் பின்புறத்தில் வந்ததும் நால்வரும் அக்கம்பக்கம் பார்த்தனர்.
அந்த நேரத்தில் யாரும், அந்தப்பக்கம் நடமாடுவதாக தெரியவில்லை.
ஸ்டேஷனுக்கு  பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில்தான் முன்பு குப்பத்து மக்கள் எல்லாம் காலைக்கடனுக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால், போலீசாரின் கெடுபிடியால் பெரியவர்கள் அந்தப்பக்கம் வருவதை தவிர்த்துவிட்டார்கள். ஆனால், இன்னமும் சிறுவர்கள் மட்டும் இந்தப்பக்கம் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அதனால்தான் சிறுவர்கள் சென்றதை பார்த்தும் போலீஸ்காரர் ஒன்றும் சொல்லவில்லை.
மணியும், பரத்தும் சேர்ந்து ஸ்டேஷனில் காம்பவுண்டு சுவரை ஒட்டிக்கிடந்த நீண்ட கம்பம் ஒன்றை எடுத்து, காம்பவுண்டு சுவரில் சாய்த்தனர். அதற்கு மற்ற இருவரும் உதவினார்கள்.
‘‘ஓகே’’ என்று மணி கைக்காட்ட, கம்பத்தை நடுவில் ஒருவனும்,  கீழ் பகுதியில் இரண்டு பேரும் பிடித்துக் கொண்டனர்.
மணி மடமடவென்று கம்பத்தில் ஏறி காம்பவுண்டு சுவரின் மீது வந்தான். அங்கிருந்து மீண்டும் கைக்காட்ட, கீழே நின்றிருந்த இருவரும் கம்பத்தை மேலே தூக்கி, ஸ்டேஷனுக்கு உள்புறம் தள்ளினார்கள். ஒரு நிலைக்கு வந்ததும், கம்பம் கீழே வேகமாக சரிவதை, மணி மேலே நின்றவாறு பிடித்து இறக்கினான்.
கம்பம் சரியாக ஸ்டேஷனின் உள்புறம் சாய்ந்து நின்றது. அதன்வழியாக  உள்ளே இறங்கினான் மணி.
காம்பவுண்டு சுவற்றின் இந்தப்பக்கம் யாரும் வருகிறார்களா என்று நோட்டமிட்டபடி பார்த்துக் கொண்டிருந்தனர் மதி, பரத், அன்பு.
சரியாக  பத்தாவது நிமிடத்தில், ‘மியாவ்’ என்று ஒரு சத்தம் கேட்டது.
அதைத்தொடர்ந்து ஸ்டேஷனின் அந்தப்பக்கத்தில் இருந்து பிளாஸ்டிக் கவர் ஒன்று பறந்து வந்து விழுந்தது. அதை சரியாக கேட்ச் பிடித்தான் அன்பு.
அடுத்த  சில விநாடிகளில் காம்பவுண்டு சுவற்றின் மீது தோன்றினான் மணி. மீண்டும் நண்பர்களிடம் கட்டை விரலை காண்பித்துவிட்டு, உள்ளிருந்த கம்பத்தை இழுத்து வெளியே விட்டான். அது தரையில் படாதவாறு பிடித்து இறக்கினர் மற்ற மூவரும். பின்பு அதே கம்பத்தின் வழியாக சறுக்கியபடி இறக்கி வந்தான் மணி.
அன்பு அந்த பிளாஸ்டிக் கவரை தன் டவுரிசரின் பெல்ட் போட்டுக் கொள்ளும் பட்டையில் கட்டிக் கொண்டான்.
அப்போதுதான் மணியின் கையைப் பார்த்தான் பரத்.
மணியின் கையில் கம்பத்தின் கூரான பகுதிகள் குத்திக்கிழித்ததில் ரத்தம் வடிந்துக் கொண்டிருந்தது. ‘‘டேய்… என்னடா ரத்தம் வருது?’’ என்றான் பரத்.
‘‘விடுடா… வீரனுக்கு இதெல்லாம் சகஜம்’’ என்று வசனம் பேசினான் மணி.
‘‘கம்பத்தை மறுபடியும் எடுத்திட்டு போயிடுவோம்… இல்லாட்டி மோப்ப நாய்க்கிட்ட மாட்டிடுவோம்’’ என்றான் மணி.
‘‘சரி’’ என்று கூறியவாறு, பின்புறம் முன்புறம் இரண்டு பேர், பின்புறம் இரண்டு பேர் என்று அந்த கம்பத்தை தூக்கிக் கொண்டு, ஸ்டேஷனை சுற்றிக் கொண்டு குப்பத்துக்கு செல்ல ஆரம்பித்தார்கள். ஸ்டேஷன் முன்புறத்தை தாண்டும்போது, கம்பத்தின் முன்னால் இருந்த மணியும், பரத்தும் எட்டி பாரா போலீஸ்காரரை பார்த்தனர். அவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
மணி ஆறாகியிருந்தது.
பறவைகள் எல்லாம் இரைதேடி அங்கும், இங்கும் பறந்துக் கொண்டிருந்தன.
எஸ்ஐ ஞானப்பிரகாசம் புல்லட்டில் வந்து இறங்கினார்.
ஏற்கனவே முகம் கழுவி நின்றிருந்த பாரா போலீஸ்காரர் விரைப்பாக ஒரு சல்யூட் அடித்தார்.
சல்யூட் அடித்தபடி விறுவிறுவென்று ஞானப்பிரகாசம் உள்ளே சென்றார்.
சீட்டில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்த நேரத்தில்தான் பதற்றமாக வந்தார் ஏட்டு ராமலிங்கம்.
‘‘என்னய்யா? ஏன் இவ்வளவு பதற்றமா வர்றே?’’ கேட்டார் ஞானப்பிரகாசம்.
‘‘ஐயா… ஒரு தப்பு நடந்துப்போச்சு… ஸ்டேஷனுக்கு வெளியே கப்போர்டில வச்சிருந்த தேசியக்கொடி, பூ, கயிறு, எதையும் காணோம்ங்கய்யா…’’ என்றார் மூச்சிரைக்க.
‘‘என்னய்யா… சொல்லுறே… கொடியப்போய் யாருய்யா தூக்கிட்டுப் போகப்போறா….’’ ஞானப்பிரகாசமும் அதிர்ச்சியுடன் கேட்டார்.
‘‘அதுதானுங்கய்யா எனக்கும் குழப்பமா இருக்கு…. பாரா கிட்ட கேட்டுட்டேன்… யாருமே உள்ளே வரலன்னு சொல்றான். அப்புறம் எப்படி இது நடந்ததுன்னுதான் தெரியலிங்கய்யா…’’ என்றார் ஏட்டு.
இருவரும் வெளியே வந்து பார்த்தனர். கப்போர்ட்டில் இருந்த கொடி பொருட்கள் எதையும் காணவில்லை.
வாசலில் நின்றிருந்த பாராவை கூப்பிட்டார் ஞானப்பிரகாசம். ‘‘யோவ்… நல்லா யோசிச்சு…  சொல்லுய்யா… யாராவது உள்ளே வந்தாங்களா… இல்லே உள்ளே நடந்தது எதுவும் தெரியாமா நீ  தூங்கிட்டியா?’’
‘‘ஐயா… ராத்திரிப்பூரா தூங்காமா கண் விழிச்சுட்டுதாங்கய்யா இருந்தேன்… எனக்கு தெரிஞ்சு யாருமே உள்ளே வரலங்கய்யா…’’ என்றார் பாரா போலீஸ்காரர்.
‘‘என்னய்யா இது ஆச்சரியமா இருக்கு… எமனுக்கு தெரியாமா உயிர் போயிருக்கு…’’ என்றார் ஞானப்பிரகாசம்.
‘‘இன்ஸ்பெக்டர் வேற 7 மணிக்கு வந்துடுவாரேய்யா… இப்ப போய் இப்படி  ஆயிடிச்சே…’’ ஞானப்பிரகாசம் முணுமுணுத்தார்.
அவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த பாரா போலீஸ்காரர் திடீரென மூளையில் மின்னலடித்தவராக, ‘‘சார்… அதிகாலையில ஒரு அஞ்சு மணியிருக்கும்னு நினைக்கிறேன் சார்… ரொம்ப நாளைக்கு அப்புறமா அந்த குப்பத்து பசங்க பின்பக்கத்துக்கு போனாங்க… ஒருவேளை அவங்க எடுத்திட்டு போயிருப்பாங்களோ?’’ என்றார்.
‘‘வாய்யா பின்னாடி போய் பார்க்கலாம்’’ என்று ஞானப்பிரகாசம் பின்பகுதிக்கு விரைந்தார்.
அங்கு காம்பவுண்டு சுவற்றின் மீது கம்பத்தினால் விழுந்த கீறல்கள் புத்தம் புதிதாக தெரிந்தது.
‘‘ஆமாய்யா… யாரோ சுவர் ஏறிக் குதிச்சுத்தான் ஆட்டைய போட்டுட்டு போயிருக்காங்க…’’ என்றார் ஞானப்பிரகாசம்.
‘‘ஐயா… அப்போ அந்த குப்பத்து பசங்களாத்தான் இருக்கும்கய்யா… வாங்க நாம உடனே  அங்கேப்போனா… நம்ம ஸ்டேஷன் வாசல்ல விளையாடிட்டு இருப்பாங்களே… அதுல ஒருத்தனோட வீடு எனக்கு தெரியும். அவன்கிட்டபோய் கேட்டா தெரிஞ்சுடும்… அவங்களை பிடிச்சுடலாம்…’’ என்றார் ராமலிங்கம்.
அடுத்தவிநாடி புல்லட்டில் ஏறி ஞானப்பிரகாசமும், ராமலிங்கமும் விரைந்தனர். பின்னாலேயே மேலும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பைக்கில் விரைந்தனர்.
குப்பத்துக்கு உள்ளே செல்ல முடியாது என்பதால் பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே நடந்தார்கள். என்றுமில்லாமல் போலீஸ்காரர்கள் குப்பத்தில் வந்திருந்ததை பார்த்த  ஜனங்கள் மிரண்டுப்போய் சல்யூட் அடித்தபடி ஒதுங்கி சென்று கொண்டிருந்தார்கள்.
சரியாக அன்புவின் வீட்டுக்கு அவர்கள் வரவும், உள்ளே இருந்து அன்பு வெளியே வரவும் சரியாக இருந்தது.
போலீசாரை பார்த்ததும் அன்பு ஓட்டம் எடுத்தான்.
அதைப்பார்த்ததும் போலீசாரும் அவரை துரத்த ஆரம்பித்தனர்.
‘‘டேய்… நில்லுடா…  ஓடாதே… ’’ என்று ஞானப்பிரகாசமும், ராமலிங்கமும் அவனை துரத்தினார்கள்.
சந்து பொந்துகளில் நுழைந்து ஓடிய அவனை விடாமல் துரத்தினர் போலீசார்.
கடைசியில் அவன் வந்து சேர்ந்த இடம், குப்பத்தின் நடுப்பகுதியில் இருந்த அரசமரம். அங்கு திடீரென கீழே கிடந்த மண்ணை எடுத்து போலீசாரின் முகத்தில் விசிறியடித்தான் அன்பு.
அதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், கண்ணில் விழுந்த மண்ணால் முழியை கசிக்கிக்கொண்டு நின்றுவிட்டனர்.
அவர்கள் ஒருவழியாக கண்ணை துடைத்துக் கொண்டு பார்வைத்திறனை பெற்றபோது, திடீரென ‘ஜன கன மன…’’ என்று தேசியகீதம் கேட்டது. அவர்கள் தங்கள் எதிரே கண்டக்காட்சி, சாதாரண கம்பம் ஒன்றில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்த அனைவரும் தேசியக்கீதத்தை பாடிக் கொண்டிருந்தனர்.
ரத்தம் வடியும் கையுடன் மணியும், அவனது நண்பர்கள் பரத், மதி மற்றும் ஓடிவந்த அன்பு ஆகியோர் தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்தபடி நின்றிருந்தார்கள்.
ஸ்டேஷனில் வாங்கி வைத்திருந்த அனைத்து தேசியக்கொடி அட்டைகளும் அங்கிருந்தவர்கள் சட்டைகளில் காணப்பட்டது.
போலீசார் விரைப்பாக தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்தார்கள்.
தேசியகீதம் முடிந்ததும், சிறுவர்கள் நால்வரும் போலீசாரிடம் வந்தனர்.
‘‘சார்… உங்க ஸ்டேஷன்ல எத்தனையோ தடவை கொடி ஏத்துறதை பார்த்திருக்கிறோம். ஆனா… ஒருவாட்டிக்கூட எங்க குப்பத்தில தேசியக்கொடி ஏத்தினதில்ல சார்… அதனாலத்தான் ஸ்டேஷன்ல இருந்து கொடியும் மத்த எல்லாத்தையும் எடுத்திட்டு வந்து இங்க கொடி ஏத்தினோம் சார்’’ என்றான் மணி.
அவனை வாரி அணைத்துக் கொண்டார் ஞானப்பிரகாசம். அதேபோல் ராமலிங்கமும் மற்றவர்களை கட்டியணைத்தார்.
-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.



10 June 2019

ஆப்ரேஷன் சக்சஸ்… பட்…



வீட்டில் கேடிவி பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.
ஜாக்கிஷானை பார்க்க விடாமல், ரிமோட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு, கமல் நடித்த ‘டிக்… டிக்… டிக்..’’ படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்  அம்மா.
‘‘அம்மா… ஜாக்கிஷான் போடுமா… போரடிக்குது’’ என்றான் ஆகாஷ்.
‘‘டேய்… சும்மா… நொய்… நொய்ன்னாத… பேசாம படத்த பாரு…. இல்லாட்டி உன் பிரண்ட்சுங்க கூட விளையாடு. எப்ப பார்த்தாலும் நீ போடுறதான் நாங்க பார்க்கணுமா… இன்னைக்கு நான் பார்க்கிறத, நீயும் பாரு… ஒரு படத்தை பார்க்க விடுறீயா? எப்ப பாரு… ஜாக்கிஷான், ஜொக்கிஷான்னுட்டு’’ சலித்துக் கொண்டு, கமலின் அம்மா பல்பு போடுவாளா, இல்லையா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆகாஷின் அம்மா.
வேறு வழியின்றி, அம்மாவின் விருப்பப்படி கேடிவியையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.
அப்போதுதான் காலிங் பெல் அடித்தது. ஓடிச்சென்று கதவை திறந்தான்.
நண்பன் ஜெய் தான் நின்றிருந்தான். ‘‘வாடா விளையாடலாம்’’ என்றான்.
‘‘அம்மா நான் வெளியே போறேன்’’ என்று கதவை டமால் என்று சாத்திவிட்டு போனான் ஆகாஷ்.
அதற்குள் பிளாட்டின் அடிவாரத்தில், ரோசியும், அதர்வாவாவும் கூட வந்திருந்தனர்.
‘‘டேய்… யாராவது பர்கர் வாங்கி தாங்களேன்டா’’ ஆகாஷ் தான் ஆரம்பித்தான்.
‘‘புரோ… மாசக்கடைசி. என் கிட்ட காசு இல்ல’’ முதலில் சொன்னாள் ரோசி.
‘‘ஆமா… இங்கேயும் ஒரே டிரை… இந்த அப்பாக்கள் ஏன்தான் இப்படி இருக்காங்களோ தெரியல… பசங்க சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் வந்துட்டா ஒரு பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி, ஒரு டென் தவுசண்ட்ஸ் டெபாசிட் பண்ணணும் தெரியுதா… நாங்களே அதில் இருந்து எடுத்துக்குவோம்ல… எப்பவுமே இவங்க எப்பத்தருவாங்கன்னு காத்துக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு’’ சலித்துக் கொண்டான் அதர்வா.
‘‘அதேதான் புரோ… வெறும் 500 ருபீஸ் குடுக்கிறாங்க… இது ரெண்டு தடவை பீசா சாப்பிட கூட பத்தமாட்டேங்குது… நம்ம கஷ்டத்தை எப்பத்தான் இவங்க புரிஞ்சுப்பாங்களோ… கேட்டா… எங்க காலத்துலன்னு ஒரு புராணத்தை ஆரம்பிச்சுடுறாங்க’’ என்றாள் ரோசி.
‘‘ஆமா… ஆமா… எங்க டேடி குடுத்தாலும் எங்கம்மா தடுத்திடுவாங்க…’’ புலம்பினான் ஆகாஷ்.
அதை ஆமோதித்தான் ஜெய்.
‘‘கய்ஸ்… இன்னைக்கு பர்கர் சாப்டே… ஆகணும்’’ என்ன பண்ணலாம் சொல்லுங்க என்றான் ஆகாஷ்.
‘‘எங்க அண்ணன்கிட்ட ஒரு டென் ருபீஸ் கேட்டேன்… அதுக்கே அவன் திட்டிட்டு போய்ட்டான். சோ… வீட்ல இருந்து எதுவும் பெயராது’’ ஜெய் கூறினான்.
‘‘ஆமாம் கய்ஸ், இது மாசக்கடைசி. அதனால வீட்டுல கேட்கிறது, ரொம்பக் கஷ்டம். நாமளே சம்பாதிச்சாத்தான் உண்டு’’ என்றாள் ரோசி.
என்ன செய்யலாம் என்று அனைவரும் அதிதீவிரமாக யோசிக்க ஆரம்பித்தனர்.
திடீரென பல்பு எரிந்தவனாக, ‘‘கய்ஸ்… சூப்பர் ஐடியா… போன மாசம். நம்ம பிளாட் கிரவுன்ட் புளோர்ல இருந்த லைட் பியூஸ் ஆச்சே ஞாபகம் இருக்கா?’’ கேட்டான் ஆகாஷ்.
‘‘ஆமா புரோ… மேல் வீட்ல இருக்கிற செகரட்டரி அங்கிள்க்கிட்ட கூட போய் சொன்னோமே’’ ரோசி கூறினாள்.
‘‘அப்போ அவர் என்ன சொன்னார், ஞாபகம் இருக்கா?’’ என்றான் ஆகாஷ்.
‘‘புள்ளைங்களா நீங்க எல்லாம் வளர்ற பசங்க… இப்போ இருந்தே நிர்வாகத்தை கத்துக்கிடணும். அதனால பிளாட்ல இருக்கிற எட்டு வீட்டிலேயேயும் நீங்களே போய் பைசா வசூல் பண்ணி. பல்ப வாங்கி மாட்டுறீங்களான்னு சொன்னார். அதனால நாமளே ஒரு பிளாட்டுக்கு டுவெல் ருபீஸ் வசூல் பண்ணி சிஎப்எல் வாங்கி மாட்டினோம்’’ என்றான் அதர்வா.
‘‘கரெக்ட் அதை மறுபடியும் செய்யப்போறோம்’’ என்றான் ஆகாஷ்.
‘‘புரியலையே புரோ…’’ என்றான் ஜெய்.
‘‘மரமண்டை. பர்ஸ்ட் புளோர் ஜெயராமன் அங்கிள் வீட்டிலேயும், குப்புசாமி அங்கிள் வீட்டிலேயும் வேலைக்கு போறவங்க அவங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க… சோ அவங்க புளோர்ல இருக்கிற பல்பை வேணும்னு பீஸ் ஆக்குறோம். அதுக்காக எல்லார் வீட்டிலேயும் பைவ் ருபீஸ் எக்ஸ்ட்ரா வசூல் பண்றோம்’’ என்றான் ஆகாஷ்.
‘‘புரோ எய்ட் பிளாட்டுல வசூலிச்சா கூட பார்ட்டீ ருபீஸ்தான் கிடைக்கும்… ஒரு பர்கர் பிப்டி ருபீஸ் தெரியும்ல’’ என்றாள் ரோசி.
‘‘அதுக்குத்தான் ஒரு சூப்பர் பிளான் என்கிட்ட’’ என்றுக்கூறி, அருகில் இருந்த ரோசி மற்றும் ஜெய்யின் தோள் மீது கை போட்டான். அதேபோல் மற்றவர்களும் செய்ய, கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வியூகத்தை வகுப்பது போன்று ரகசியத்தை கூறினான் ஆகாஷ்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டில் இருந்து ஒரு சிஎப்எல்.லுடன் ஆஜரானான் ஆகாஷ்.
ராணுவ வீரர்கள் எதிரிகள் இடத்தில் சைகை பாஷையில் பேசிக் கொள்வதுபோல், தன்னுடைய கண்ணை இரு விரல்களை தொட்டு ரோசியை கீழே போகுமாறு கூறினான் ஆகாஷ். அதேபோல், ஜெய்க்கு மேலே போய் கண்காணிக்குமாறு கட்டளையிட்டான். கீழே இருந்தும், மேல இருந்தும் சிக்னல் கிடைக்கவே, படிக்கட்டு கைப்பிடியின் மீது ஏறி, நடைபாதை பொதுலைட்டில் பொருத்தப்பட்டிருந்த சிஎப்எல்லை எடுத்து, கீழே நின்றிருந்த அதர்விடம் கொடுத்தான்.
அவன் ஏற்கனவே ஆகாஷ் வீட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்திருந்த சிஎப்எல்லையும், ஒரு ஐம்பது பைசா நாணயத்தையும் கொடுத்தான்.
சிஎப்எல் மீது ஐம்பது பைசா நாணயத்தை வைத்து அதை அப்படியே ஹோல்டரில் பொருத்தினான் ஆகாஷ். பின் அதர்வாவிடம் வெற்றிச்சின்னத்தை காண்பித்துவிட்டு படியில் குதித்தான்.
எல்லோருக்கும் வெற்றிச் சின்னம் பரிமாறப்பட்டது.
அடுத்த சில விநாடிகளில் மேலே இருந்து ஆட்கள் வருவதாக செல்போனில் கூறினான் ஜெய்.
உஷாரடைந்த ஆகாஷூம், அதர்வாவும் தாங்கள் மற்றவர்களுக்கு தெரியாதபடி கிரவுண்ட் புளோருக்கு ஓடினார்கள்.
மாலை நேரத்தில் யார் முதலில் இறங்குகிறார்களோ, அவர்கள் பொது லைட்டை போட்டுக் கொண்டே செல்வது வழக்கம். அதன்படி, மூன்றாவது மாடியில் இருந்து இறங்கிய இளம்வாலிபன் கமல் பர்ஸ்ட் புளோர் பொது லைட்டை போட்டான். போட்ட மாத்திரத்தில் ஒரு வெளிச்சப் பொட்டு மட்டும் வந்துவிட்டு பல்பு அணைந்துவிட்டது. இதனால் மீண்டும், மீண்டும் சுவிட்ச்சை போட்டுப்பார்த்தான் கமல்.
அந்த நேரத்தில் சரியாக கமலை பார்த்தபடி நின்றிருந்தார்கள் ஆகாஷூம், அதர்வாவும்.
‘‘ஓ… புரோ… நீங்கத்தான் இப்படி அடிக்கடி சுவிட்சை போட்டு, போட்டு லைட்டை பீஸ்ஸாக்கிறதா… இந்த மாசத்தில இது நாலாவது தடவை. ஒவ்வொரு தடவையும் நாங்கத்தான் பிளாட், பிளாட்டா வசூல் பண்ணி லைட்டை வாங்கி போட்டுட்டு இருக்கிறோம். இப்படி கொஞ்சம் கூட அவேர்னஸ் இல்லாம பல்பை பீஸ்ஸாக்கிட்டீங்களே’’ என்றான் கோபத்துடன் ஆகாஷ்.
‘‘டேய்… நான் பீஸ் ஆக்லடா… லைட்ட போட்டேன் ஆப் ஆயிடிச்சு… அதனால மறுபடியும் போட்டு பார்த்துட்டு இருந்தேன். அவ்வளவுதான்’’ என்றான் அப்பாவியாக கமல்.
‘‘இல்லே… புரோ நீங்கதான் லைட்டை பீஸ்ஸாக்கிட்டீங்க… இருங்க நாங்க செகரட்டரி அங்கிள்கிட்ட போய் சொல்றோம்’’ என்று மேலே ஏற ஆரம்பித்தான் அதர்வா.
‘‘டேய்… என்னடா இப்படி அராஜகம் பண்ணுறீங்க… இருங்கடா…’’ என்று யோசித்தவாறு, தன் பர்சில் இருந்து 10 ரூபாயை எடுத்து, ‘‘டேய் சாக்லேட் வாங்கி சாப்பிடுங்க… தயவு செஞ்சு செகரட்டரி அங்கிள்கிட்ட சொல்லாதீங்கடா… ஏற்கனவே அவருக்கும் எனக்கும் ஆகாது’’ என்றான் கமல்.
‘‘அய்யய்யே… என்ன புரோ இப்படி சம்திங் எல்லாம் கொடுத்து சின்னப்பசங்கள கெடுக்க பார்க்கிறீங்க… இதெல்லாம் வேலைக்கு ஆகாது. நாங்க செகரட்டரி அங்கிள்கிட்ட சொல்லியே ஆவோம். நாங்க எல்லாம் நல்ல பசங்க தெரியுமா?’’ என்றான் ஆகாஷ்.
என்ன செய்வது என்று யோசித்த கமல், ‘‘சரிடா… சிஎப்எல் எவ்வளவுடா?’’ என்றான் கமல்.
‘‘புரோ போன தடவை நாங்க ஒன் பார்ட்டி ருபீஸூக்கு வாங்கினோம்… இப்போ வெலவாசி எல்லாம் ஏறிடிச்சுல்ல… அதனால ஒரு ஒன்பிப்டி ஆயிருக்கும்னு நினைக்கிறேன்’’ என்றான் ஆகாஷ்.
‘‘சரி… இந்தாங்க’’ என்று ஒரு 100, 50 நோட்டுக்களை பர்சில் இருந்து எடுத்துக் கொடுத்து, ‘‘செகரட்டரி அங்கிள்கிட்ட சொல்லிடாதீங்க… நீங்களே பல்ப வாங்கி போட்டுடங்க… இந்த உங்களுக்கு ஆளுக்கு 10 ருபிஸ்’’ என்று அதுக்கு தனியாக 20 ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினான்.
‘‘சரி…சரி… நீங்க தெரியாம தப்பு செஞ்சீங்கன்றதாலத்தான் உங்களை விடுறோம்… ஆனா இனிமே இப்படி எல்லாம் சின்னப்புள்ளைத்தனமா சுவிட்சை போட்டுட்டே இருக்காதீங்க… பல்பு பீஸ்ஸாயிடும். புரியுதா?’’ என்றான் ஆகாஷ்.
‘‘எல்லாம் என் தலையெழுத்துடா…’’ என்று தலையில் அடித்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றான் கமல்.
அவன் தலை மறைந்ததும், அங்கு
ஒன்றுக்கூடிய நால்வர் அணி, கையை மடக்கி, ‘‘ஹூர்ரே’’ என்று கத்தியது.
எல்லோரும் சேர்ந்து தேர்ட் புளோரில் வசிக்கும் செக்ரட்டரி வீட்டிற்கு சென்றனர். டோர் பெல் அடித்தபோது, காதில் போன் பேசியபடி எட்டி பார்த்தவரிடம், ‘‘அங்கிள் பர்ஸ்ட் புளோர் லைட் எரியல. போன தடவை மாதிரி எல்லார் வீட்டிலேயும் வசூல் பண்ணிடலாமா?’’ என்றான்.
அவர், ‘‘ஓகே. பசங்களா, நல்லா செய்யுங்க’’ என்று கூறிவிட்டு, ‘‘நீங்க வந்துடுங்க… சாப்பிட்டுக்கிட்டே பிராப்ளம் பத்தி பேசி முடிச்சுடலாம்’’ என்றார்.
எல்லோரும் ஒவ்வொரு வீடாக போய் வசூல் செய்தார்கள். பின்னர், ஒரு அரைமணி நேரம் பார்க்கில் விளையாடிவிட்டு மீண்டும் பிளாட்டுக்கு திரும்பினர். அப்போது தான் செகரட்டரி வெளியே சென்று கொண்டிருந்தார். கூடவே, டிரசரர் லேடி என்றழைக்கப்படும் சிவகாமியும், பிரசிடென்ட் ராமசாமியும் சென்று கொண்டிருந்தனர்.
எல்லோரும் சென்றுவிட்டதை உறுதி செய்துக் கொண்டவுடன், மீண்டும் சகாக்களுக்கு சைகை காட்டினான் ஆகாஷ். அவரவர் இடத்துக்கு செல்ல, பீஸ் ஆன சிஎப்எல் பல்பை எடுத்து, அதில் இருந்த 50 பைசா நாணயத்தை எடுத்து பையில் போட்டுக் கொண்டு பல்லை கீழே நின்றிருந்த அதர்வாவிடம் கொடுத்தான். அவன் ஏற்கனவே பையில் வைத்திருந்த பல்பை எடுத்து கொடுக்க, அதை ஹோல்டரில் பொருத்திவிட்டு கீழே இறங்கினான் ஆகாஷ்.
மீண்டும் ஒரு முறை எல்லோரும் ‘‘ஹூர்ரே’’ கூறிக் கொண்டார்கள்.
எல்லோரும் சேர்ந்து பக்கத்து தெருவில் இருக்கும், ‘பர்கர் ஹட்’டிற்கு சென்று, 4 பேர் அமரும் கேபினில் உட்கார்ந்து, 4 பர்கரை ஆர்டர் செய்தார்கள்.
ஜெய்தான் ஆரம்பித்தான். ‘‘புரோ, இந்த சூப்பர் ஐடியா, எப்படி உருவாச்சு?’’ என்றான்.
‘‘டிவியில கமல் படம் பார்த்திட்டு இருந்தேன்ல அதுல இருந்துதான்’’ என்றான் ஆகாஷ்.
‘‘செம புரோ…’’ என்றாள் ரோசி.
‘‘நம்ம செகரட்டரி இருக்காரே… அந்த ஓல்டு மேன். நீங்க எல்லாம் வளரணும் கய்ஸ்னு நமக்கே பாடம் சொல்றார்’’ அதர்வா கிண்டல் செய்தான்.
‘‘அந்த சொட்டையன திட்டாத புரோ… அவரும் இந்த ஐடியா ஓர்க் அவுட் ஆக ஒரு காரணம்தானே. இல்லாட்டி மினுக்கிக்கிட்டு கிடந்ததால கழட்டி வைக்கப்பட்ட பல்ப எடுத்துவந்து மாட்டி, அதை பியூசாக்கி கமல்கிட்ட காசு வாங்கினதையும், பல்பு பீஸ்னு சொல்லியே பிளாட்டுல வசூலிச்சதையும் செய்ய முடியுமா?’’ ஆகாஷ் சப்போர்ட் செய்தான்.
‘‘அந்த குந்தானி லேடி இருக்கே… அதான்பா அந்த டிரசரர் லேடி. என்னம்மா முறைக்குது. எப்பவும், அங்க விளையாடக்கூடாது, இங்க விளையாடக்கூடாதுன்னு… ஒரே கண்டிஷன். அவங்க வீட்டுலயும் ஒரு ஆப்ரேஷனை போடணும்பா…’’ என்றான் ஜெய்.
‘‘அடுத்ததடவை அந்த குந்தானி வீட்டு பல்புதான் டார்க்கெட்’’ என்று ஆகாஷ் கூறிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்த கேபினில் இருந்து ஒரு கை, அவனது காதை பிடித்து திருகியது.
‘‘ஆஆ….’ என்று கத்திக்கொண்டே பின்னால் திரும்பி பார்க்க, அடுத்த கேபினில் இருந்து வந்த கை, டிரசரர் லேடி உடையது.
அருகில் இருந்த செகரட்டரி, பிரசிடென்ட் ஆகியோரும், ஜெய், அதர்வா, ரோசியின் காதுகளை பிடித்துக் கொண்டார்கள்.
‘‘பாத்தீங்களா சார்… இந்த வயசுல இவங்க பண்ற வேலைய… பிளாட் பிரச்னையை பேச இங்க வந்தது சரியா போச்சு.. இல்லேன்னா இவங்களை பிடிச்சிருக்க முடியுமா…’இவனுங்க அப்பன்கிட்ட பேசலாம் வாங்க சார்’’ என்று கூப்பிட்டார் பிரசிடென்ட்.
இன்னமும் காசு விடுபடாத நிலையில் இருந்தான் ஆகாஷ்.
-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.

03 June 2019

கல்யாணப்பரிசு


கல்யாணப் பரிசு

‘‘தனம்… தனம்…’’ கூப்பிட்டுக் கொண்டே நுழைந்தார் சந்தானம்.
‘‘என்னங்க… இங்கதானே இருக்கேன்… ஏன் பத்து ஊருக்கு கேட்கிற மாதிரி கத்திட்டு வர்றீங்க?’’ பதில் கொடுத்தாள் தனம் எனும் தனலட்சுமி.
‘‘நம்ம பொண்ணு கல்யாணத்தினால, என் சித்தப்பா பொண்ணு மக கல்யாணத்துக்கு போக முடியலல்ல… இன்னைக்கு போய் ஒரு எட்டு போய்ட்டு கிப்டு குடுத்திட்டு வந்திடலாம். சீக்கிரம் ரெடியாயிடு’’
‘‘உங்க சொந்தக்காரங்கத்தானே… நீங்க மட்டும் போய்ட்டு வர வேண்டியதுதானே... என்னை ஏன் கூப்பிடுறீங்க?’’
‘‘ஏண்டி… எங்க சொந்தக்காரங்கன்ன நான் மட்டும் போகணுமா….? அப்போ உங்க சொந்தக்காரங்க கல்யாணம்னா நீ மட்டும் போக வேண்டியதுதானே? என்னை ஏன் போன மாசம் உங்க அத்தை பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிட்டே?, அதுவும் உடம்பு சவுரியம் இல்லாதவன கூட கூப்டு போனே? உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா, தக்காளி சட்னியா?’’
‘‘சரி, சரி வந்து தொலைக்கிறேன். ஆரம்பிச்சுடாதீங்க, உங்க புராணத்தை…’’ என்றபடியே சேலை உடுத்த உள்ளே சென்றாள் தனம்.
அதற்குள் சந்தானமும் பட்டு வேட்டி, சட்டையுடன் தயாராகி இருந்தார்.
‘‘தனம்… அவங்க நம்ம பையன் கல்யாணத்துக்கு 500 ரூபா செஞ்சிருந்தாங்க… அதனால அதவிட கூட செஞ்சாத்தான் நமக்கு மதிப்பா இருக்கும்… போறப்போ ஏதாவது ஹாட்பேக் ஒண்ணு வாங்கிட்டு போயிடலாம்’’
‘‘அதெல்லாம் ஒண்ணும் வாங்க வேண்டாம்… பொண்ணு கல்யாணத்தில வந்த பாத்திரங்கள்ல ஒரு குடம் பெயர் போடாம இருக்கு… அதை குடுத்திடலாம்’’
என்னடா ஹாட்பேக்குன்னு சொன்னா… இவ குடம் வரைக்கும் போறாளேன்னு யோசனையாக இருந்தார் சந்தானம்.
அதற்குள் பரணில் கவர் போட்டு கட்டி வைத்திருந்த குடத்துடன் வந்து சேர்ந்தாள் தனம்.
குடத்தை எடுத்து பார்த்தார் சந்தானம்.
அழகாக இருந்தது. இதை எப்படி குடுக்க இவளுக்கு மனசு வந்தது என்று நினைத்துக் கொண்டே, ஏதேச்சையாக கீழே திருப்பினார். அதைப்பார்த்த உடனேயே புரிந்துக் கொண்டார் சந்தானம்.
‘‘ஏண்டி… இது நியாயமா இருக்கா… இப்படி சொட்டை விழுந்த குடத்தை குடுத்தா… நம்ம மானம் போயிடாது?’’ கேட்டார் சந்தானம்.
‘‘அதெல்லாம் ஒண்ணும் போகாது… நான் பேசிக்கிறேன் வாங்க…’’ என்றபடி கையை பிடித்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் தனம்.
பட்டாமிராமில் இருக்கிற உறவினரின் வீட்டுக்கு சென்று சேர்ந்தபோது, மணி 12 ஆகிவிட்டது.
குசலம் விசாரித்து முடித்தபின்னர், சந்தானம் தான் ஆரம்பித்தார். ‘‘தனம் அந்த கிப்ட்டை சிவகாமிக்கு குடுத்திடு’’ என்றார்.
‘‘சரிங்க… ’’ என்று கவருடன் எழுந்த  தனம், குடத்தை சிவகாமியிடம் குடுத்தாள்.
சிவகாமி குடத்தை எடுத்து பார்க்க ஆரம்பிப்பதற்குள் தனம் ஆரம்பித்தாள்.
‘‘இன்னைக்கு ரயில்ல செம கூட்டம்கா…அடித்து பிடிச்சு வந்து சேர்ந்தோம்.  இதுல மேல வச்சிருந்த குடம் வேற கீழே விழுந்திடுச்சு… என்ன ஆயிருக்குன்னு தெரியல…  பிரிச்சு பாருங்கக்கா…’’ என்று அப்பாவியாக முகத்தை  வைத்துக் கொண்டாள் தனம்.
சிவகாமி குடத்தை பிரித்து பார்த்து, கீழே  இருந்த சொட்டையைப் பார்த்தாள். ‘‘ஆமா தனம் நீ சொன்ன மாதிரி கீழே விழுந்ததில… ஒரு சின்ன சொட்டை விழுந்திருக்கு… பரவாயில்ல விடு.  இருங்க சாப்பாட்ட தயார் பண்ணிடுறேன்… சாப்பிட்டு போகலாம்’’ என்றாள்.
‘‘இல்லக்க… நாங்க இவரோட ஆபிஸ் பிரண்ட் வீட்டுக்கும் வர்றதா சொல்லியிருந்தோம். அதனால அவங்க செஞ்சு வச்சிருப்பாங்க… இது நம்ம வீடுதானே… எப்பவேணா வந்து சாப்பிடலாம்…   வர்றோம்கா’’ என்றபடி கிளம்பினாள்.
சந்தானமும் அவர்களிடம் விடை பெற்றுக்  கொண்டு கிளம்பினார்.
வீட்டை விட்டு ரயில்வே ஸ்டேஷன் வந்த பிறகு, தனம்  ஆரம்பித்தாள்.
‘‘என்னங்க…  இப்போ வீட்டுக்குப்போய் என்ன பண்ணப்போறோம். அப்படியே திருத்தணிக்கு போய்ட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்’’ என்றாள்.
‘‘சரி… கிளம்பு’’ என்றார் சந்தானம்.
திருத்தணி  தரிசனத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு  வரும்போது இரவு 8 மணி ஆகிவிட்டது.
வீட்டு வாசலில் யாரோ  நிற்பதுபோல் இருந்தது.
‘‘தனம்… அது யாரு… வாசல்ல’’ என்றபடி கண்ணாடியை  தூக்கிவிட்டுக் கொண்டார் சந்தானம்.
‘‘அது உங்க அண்ணாநகர் பெரியப்பா மகன்’’ என்றபடி வந்திருந்த உறவினர்களிடம் விசாரித்துக் கொண்டே  பூட்டை திறந்து வீட்டின் உள்ளே கூட்டி சென்றாள்.
‘‘என்ன ராமசாமி, பார்த்து ரொம்ப நாளாச்சு...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் சந்தானம்.
வந்திருந்த ராமசாமி, தனது மனைவியிடம், ‘‘ஏண்டி கையிலேயே வச்சிருந்தா எப்படி? அந்த கிப்ட்ட எடுத்து அண்ணிக்கிட்ட குடு…’’ என்றார்.
அவர்கள் சரவணா ஸ்டோர்சின் பெயரில் கவரில் வைத்து எதையோ கொண்டு வந்திருந்தார்கள். ராமசாமியின் மனைவி, அதில் இருந்து எடுத்தது, அதே சொட்டை விழுந்த குடம்.
ராமசாமியின் மனைவிதான் ஆரம்பித்தார். ‘‘இன்னைக்கு ரயில்ல செம கூட்டம் அண்ணி… மயிலாப்பூர் வர்றதுக்குள்ள போதும்… போதும்னு ஆயிடிச்சு.. இதுல குடம் வேற ரயில்ல மேல இருந்து கீழே விழுந்திடுச்சு… எங்க என்ன ஆயிருக்கோ தெரியல… பார்த்துக்கோங்க அண்ணி’’ என்றாள் கவலையுடன்.
‘‘சிவகாமி சாயங்காலம் வீட்டுக்கு வந்திருந்தா… எங்க கிரகப்பிரவேஷத்துக்கு அவ வரல இல்ல… அவகிட்ட பேசிட்டு கிளம்புறதுக்குல்ல லேட் ஆயிடிச்சு….’’ என்று ராமசாமியும் கூட ஒத்து ஊத ஆரம்பித்தார்.
தனத்தின் மனது அக்னிக் குஞ்சாய் மாறிக் கொண்டிருந்தது.
-        ஜே.எஸ்.கே.பாலகுமார்.