அன்பு நண்பர்களே இங்கே என் கதைகள், கட்டுைகளை படித்தபின் உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்தால் மனம் மகிழ்வேன். நன்றி நண்பர்களே!
14 June 2020
பிரியாணி
12 June 2020
தேக்கு மேஜை
தேக்கு மேஜை
-
ஜே.எஸ்.கே.பாலகுமார்.
‘‘கெழத்துக்கு இதே வேலையா போச்சு… எல்லா பழசையும் வச்சுக்கிட்டு அறழும். இடம் அடைக்குதுன்னு, ரூம்ல கிடக்கிற மேஜையை விக்கலாம்னா… அது மாமனார் பயன்படுத்தினது… உசுருமாதிரின்னு ஏதாவது சொல்லி தடுக்குது… இதுக எல்லாம் இன்னும் எதுக்காக உயிரோட இருந்து, எங்க உசுர வாங்குதுகளோ…’’ வார்த்தைகளில் நெருப்பள்ளிக் கொட்டினாள் ரோசி.
கேட்டுக் கொண்டிருந்த கணவன் ஜோசப்,
‘‘மெதுவா பேசுடீ… அம்மாவுக்கு கேட்டுட போகுது…’’ என்று மெதுவாக பேசினான்.
‘‘ஆமா… கேட்டுட்டாலும் அப்படியே…
நாண்டுக்கிட்டு செத்துடப் போறாங்க… போய்யா… நீயும்… உன் நொம்மாவும்… இதப்பாரு… இன்னும்
ரெண்டு மூணு நாள் தான் பார்ப்பேன். நீ என்ன பேசுவியோ, சமாதானம் பண்ணுவியோ எனக்கு தெரியாது.
ரூம்ல அடைஞ்சு கெடக்கிற அந்த ஐந்தடி மரமேஜையை உடனடியா வித்துடு. இல்லாட்டி, பழைய சாமான்காரன்கிட்ட
கூப்பிட்டு சும்மாவே குடுத்திடுவேன்…’’ என்று கூட்டிக்கொண்டிருந்த விளக்குமாற்றை இடதுகையால்
தட்டிக்கொண்டே முறைத்தாள் ரோசி.
அவளைப்பார்த்து தலையில் அடித்துக்
கொண்டான் ஜோசப்.
உள்ளே உட்கார்ந்திருந்த மேரிக்கு,
மருமகளின் பேச்சும், அவளை அடக்க முயலும் மகனின் பேச்சும் கேட்காமல் இல்லை.
தேக்கு மேஜை அருகே உட்கார்ந்திருந்த
மேரி, மெதுவாக அதை தொட்டுப்பார்த்தாள். பழைய நினைவுகள் ஏனோ நிழாலடின.
‘‘மேரி… ’’ என்று கணவர் மைக்கேல்
கத்தும் சத்தும்கேட்டு ஓடோடி வந்தாள்.
‘‘இந்த மேஜையில யார் பிளிச்சின்
பாக்கெட்டை வச்சது?’’ என்று மீண்டும் கத்தினார்.
‘‘நான்தாங்க…’’ என்று மென்று விழுங்கினாள்
மேரி.
‘‘அறிவிருக்கா உனக்கு… இது என்
உசுரு மாதிரி… இதுல போய் பிளிச்சின் பாக்கெட்டை வச்சிருக்கே… எங்க வீட்டுல எழுதுறதுக்கு
ஒரு டேபிள் கூட கிடையாது. அதனால சின்ன வயசில இருந்தே வைராக்கியமா இருந்து முதல் மாச
சம்பளத்தில ஆசை, ஆசையா செஞ்சு வாங்கின மேஜை இது. அதை கவுரப்படுத்த முடியலேன்னா கூட
பரவாயில்ல. இந்த மாதிரி பிளிச்சின் பாக்கெட், பாத்ரூம் கழுவுற பிரஸ்னு வச்சு, என் டேபிளோட
மரியாதைய கெடுக்காதே… திரும்பவும் சொல்றேன், அது என் உசுரு மாதிரி. புரியுதா…?’’ என்று
கத்தினார்.
புரிந்தது என்பதுபோல் தலையை ஆட்டினாள்
மேரி.
அதில் இருந்தே மேரிக்கும், அந்த
டேபிள் மரியாதைக்குரிய ஒரு விஷயமாகி போயிருந்தது. கணவர் வெளியே போயிருக்கும் நேரத்தில்
துடைத்து சுத்தப்படுத்தி வைப்பாள்.
பத்திரிகையாளனாக வேலைப்பார்த்த
அவளது கணவர், அந்த டேபிள்தான் கதை, கட்டுரைகளை எழுதுவார். அவர் இருந்தவரையில் அந்த
டேபிளுக்கும் மிக கவுரவம் இருந்தது. அதன்பின்னர் மரியாதைக்குரிய அலங்காரப் பொருளாக
மாறினாலும், மருமகள் வந்த பின்னர் தினமும் அதற்கு அர்ச்சனை விழுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.
ஐந்தடி நீளம், மூன்றடி அகலத்தில்
பிரம்மாண்டமான டேபிள் அது. அறையில் அது இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது என்னவோ உண்மைதான்.
ஆனால், கணவர் உயிராய் மதித்த ஒரு பொருள், மெல்ல, மெல்ல தன் உயிரிலும் கலந்துவிட்ட ஒரு
பொருளை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுத்தர மேரிக்கு முடியவில்லை.
தினமும் ஏசு படத்துக்கு முன்பு
அமர்ந்து, ‘‘இவர்கள் செய்யும் பாவங்களை மன்னித்துவிடும் எம் தந்தையே. விரைவில் உங்கள்
காலடியில் எனக்கு இடம் தாருங்கள்’’ என்று மனமுருக வேண்டுவாள்.
அன்று மருமகளின் பேச்சில் ஆத்திரம்
எல்லை மீறியிருந்ததை மேரி கவனிக்க தவறவில்லை. இனி இந்த மேஜைக்கு அவள் எப்படியும் இடம்
தரமாட்டாள் என்று புரிந்து போனது.
ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய்
எழுந்தாள். கணவரின் கதைகளுக்காக வரும் ராயல்டி தொகைதான் அவ்வப்போது அவளது செலவுக்கு
உதவிக் கொண்டிருந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள். வழக்கமாக இந்த நேரத்தில்
அவள் சர்ச்சுக்கு செல்வது வழக்கம். சர்ச்சுக்கு சென்றுவிட்டு, அப்படியே இமானுவேல் ஆசாரியை
பார்த்துவிட்டு வந்தாள்.
அவள் சொல்லி வைத்ததுபோல், அன்று
மாலையே இமானுவேல் இரண்டு ஆட்களுடன் வந்தார்.
‘‘அம்மா… கட்டாயம் எடுத்துட்டுத்தான்
போகணுமா?’’ என்றார்.
‘‘அய்யாவுக்காக நானே ஆசையா பண்ணிக்குடுத்ததும்மா…
அவருக்கும் எனக்கும் ஒரு ரெண்டு, மூணு வயசுதான் வித்தியாசம். அவர் எழுதுறதுக்குன்னு
ஆசையா வந்து கேட்டப்போ… அவருக்காகவே ஆணியே அடிக்காம பண்ணிக்குடுத்த மேஜைம்மா அது’’
என்றார் இமானுவேல்.
கண்ணில் வடியும் கண்ணீருடன், மேஜையை
நோக்கி கைக்காட்டி எடுத்துப்போகுமாறு சைகை காட்டினாள் மேரி.
பார்த்துக் கொண்டிருந்த ரோசிக்கு
சந்தோஷமாக இருந்தது. ‘‘கெழவியே ஒரு வழியா ஆசாரிக்கிட்ட வித்துடுச்சுபோல… எப்படியோ
ஒழிஞ்சா சரி’’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
பேரன் பிரான்சிஸ்தான் அழுதான்.
‘‘அம்மா… நான் ஹோம்ஒர்க் செய்யணும்னா… அதுல தான உட்கார்ந்து செய்வேன்… அதைப்போய் எடுத்துட்டு
போறாங்களேம்மா…’’ என்று கத்தினான்.
ஆனால், அவனை முதுகில் அடித்து உள்ளே
கூட்டிக் கொண்டு போனாள் ரோசி.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.
பிரார்த்தனைக்கு குடும்பத்தோடு
அதிகாலையில் கிளம்புவது வழக்கம். எல்லோரும் தயாராக இருக்க, அம்மாவை காணாத நிலையில்,
ஜோசப் அம்மாவின் அறைக்கு சென்றான். அங்கு ஏசுவின் படத்துக்கு முன்பு ஜெபமாலையுடன் தூங்கிக்
கொண்டிருந்தாள் மேரி.
‘‘அம்மா…’’ என்று தோள்பட்டையில்
தட்டினான்.
ஆனால், அவள் தலை சாய்ந்து தொங்கியது
கண்டதும், பதறிவிட்டான் ஜோசப். டாக்டரை அழைத்து சோதித்துபார்த்தான். எல்லாம் முடிந்துவிட்டிருந்தது.
இரவு முழுவதும் ஜெபம் செய்துக் கொண்டிருந்த
நிலையிலேயே தாயின் உயிர் பிரிந்துவிட்டது தெரியவந்தது.
சொந்தபந்தங்கள் எல்லாம் வந்து பார்த்தாகிவிட்டது.
இதோ எல்லாம் ஆகிவிட்டது.
குழிக்குள் மேரியின் உடல் அடங்கிய
பெட்டி இறக்கப்படுவதற்கு முன்பு புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மா எப்போதும் ஆசையாக
வைத்திருக்கும் கையடக்க பைபிளையும், அவளது ஜெபமாலையையும் தாயின் உடலின் மீது வைத்தான்
ஜோசப்.மூடி மூடப்பட்டது.
அதன் மேலே, ‘‘அம்மாா, அப்பாா’’ என்று குழந்தையின் கையால் செதுக்கப்பட்ட எழுத்துக்களும், கோட்டோவியமும்
இருந்தது.
அது சிறு வயதில் தன் கையால் காம்பஸ்
கூரால், வீட்டில் இருந்த அப்பாவின் மேஜையில் தான் எழுதிய எழுதுக்கள்.
அருகில் இருந்த இமானுவேல் தலையில்
அடித்துக்கொண்டு அழுதுக் கொண்டிருந்தார்.
ஜோசப்பின் கதறல் விண்ணை பிளந்துக்
கொண்டிருந்தது.
-
ஜே.எஸ்.கே.பாலகுமார்.
கல்யாணம்... கச்சேரி...
கல்யாணம்… கச்சேரி…
-
ஜே.எஸ்.கே.பாலகுமார்.
மகள் கலாவதி கல்யாணம் இவ்வளவு சீக்கிரம்
அமைந்துவிடும் என்று ராகவனே எதிர்பார்க்கவில்லை.
ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும்,
இன்னொரு பக்கம் பெரும் பாராங்கல்லை எப்படி தூக்கி சுமக்கப்போகிறோம் என்று அயர்ச்சியாகவும்
இருந்தது.
காரணம் இல்லாமல் இல்லை. ராகவன்
தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். மாதம் 22 ஆயிரம் ரூபாய்
வரும். இதில் வாங்கிய முன்பணத்துக்கான பிடித்தம்போக கையில் நிற்பது வெறும் ரூ.19 ஆயிரம்
மட்டும்தான்.
இதில்தான் வீட்டு வாடகையில் இருந்து
காபி செலவு வரையில் எல்லாவற்றையும் பார்த்துக்
கொள்ள வேண்டும். மனைவி சிவகாமி கணவனின் கஷ்டத்தை அறிந்தவள். அவளும் வடாகம், இட்லிப்பொடி,
சாம்பார் பொடி, ரசப்பொடி என்று அக்கம், பக்கத்தில் விற்று வீட்டுச் செலவில் சற்று முட்டு
கொடுத்து வந்தாள்.
மகள் கலாவதி இப்போதுதான் படிப்பை
முடித்து 2 மாதமாக வேலைக்கு போக ஆரம்பித்துள்ளாள். இனி கஷ்டம் கொஞ்சம் தீரும் என்று
மனதின் மூலையில் ஒரு நப்பாசை பிறந்த நிலையில்தான், தூரத்து மாமன் முறை உறவான சீனிவாசன்
மூலம், நல்ல வரன் அமைந்தது.
பையன் வீட்டாருக்கு கலாவதியை மிகவும்
பிடித்துவிட்டது. அதுவும் சம்பாதிக்கும் மருமகள் வேறு. பெரிய அளவில் எதிர்பார்க்காவிட்டாலும்
கூட 30 பவுன், 2 லட்சம் ரொக்கம், பாத்திரம் பண்டம் கேட்டிருந்தார்கள்.
கல்யாணச் செலவுக்கு மட்டும் எப்படியும்
3 லட்சம் ஆகிவிடும். மண்டபத்துக்கே இப்போது 50 ஆயிரம் கேட்கிறார்களே. இரண்டு நாள் என்றால்,
அதற்கே ஒரு லட்சம் எடுத்து வைக்க வேண்டும். அதுதவிர, அலங்காரச் செலவு, அய்யர், போட்டோ,
வீடியோ, ஜவுளி, விருந்து என்று குறைந்தது 2 லட்சம் ஆகிவிடும்.
நகை என்று பார்த்தால்… ஒரு 20 பவுன்
சேர்த்திருந்தார். இன்னும் 10 பவுன் வாங்க வேண்டும். அதுதவிர ரொக்கத்துக்கு ஏற்பாடு
என்று எப்படி பார்ததாலும் 8 லட்சம் தேவைப்பட்டது.
நடுத்தட்டு மக்களுக்கு கவுரம்தான்
பெரிய பிரச்னை. இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லி கோயிலில் கல்யாணத்தை வைத்துவிடலாம்.
இருக்கிறவர்கள் ஒருவாரத்துக்கு மண்டபத்தை புக் பண்ணி ஜமாய்ப்பார்கள்.
ஆனால், நடுத்தட்டு மக்கள். கவுரத்துக்காகவே
குறைந்தபட்சம் ஒரு நடுத்தர மண்டபத்தையாவது புக் பண்ண வேண்டும். ரெண்டு சுவீட்டோடு விருந்து
கொடுத்தாக வேண்டும். அதுதவிர ரிட்டர்ன் கிப்ட் என்று புதிதாக தாம்பூல பையுடன் ஒரு சின்ன
பரிசுப் பொருளையாவது வைத்து தரவேண்டும். இல்லாவிட்டால், நொடிந்துவிட்டவர்கள் கணக்கில்
ஊர் முழுக்கற பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
ஏற்கனவே முந்தாநாள் சம்பந்தியம்மா,
‘‘விருந்து நன்றாக இருக்க வேண்டும். மண்டபம் கொஞ்சம் பெருசாக இருக்க வேண்டும், ஆர்கெஸ்ட்ரா
கூட வைக்கலாமே…’’ என்று பட்டியல் நீட்டிக் கொண்டிருந்தேபோதே, மனது பக், பக் என்றது.
எல்லாவற்றையும் பட்டியலில் போட்டு
பார்த்ததில் சரியாக 8 லட்சத்து 45 ஆயிரம் தேவைப்பட்டது.
ஆபிசில் ஹெட் கிளார்க்கிடம் சொல்லி,
பிஎப் பணம் 3.5 லட்சத்தையும் மொத்தமாக மகள் கல்யாணத்துக்கு என்று கேட்டு விண்ணப்பித்துவிட்டார்.
அந்த மனிதர், அவரது பால்ய நண்பர் என்பதால், பிஎப் ஆபிசில் சொல்லி பணம் உடனே வர தான்
ஏற்பாடு செய்வதாக கூறினார்.
வங்கியில் சென்று பெர்ஷனல் லோன்
கேட்டுப் பார்த்தார்.
அவர்கள் இவரது வயதை கேட்டபோது,
58 என்ற சொன்னவுடனேயே கைவிரித்துவிட்டார்கள். இன்னும் ரெண்டு ஆண்டில் ரிட்டயர் ஆகப்போகிறவரை
நம்பி யார் கடன் கொடுப்பார்கள்?
அன்று வேலை முடிந்து வீட்டில் தளர்வாக
வந்து அமர்ந்தார்.
சிவகாமி அவரை பார்த்துவிட்டு, அடுப்படிக்கு
சென்று காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள். ஆற்றி அன்னத்தில் படாமல் குடித்தவருக்கு,
அன்று காபி கொஞ்சம் கசப்பதாக தோன்றியது.
‘‘என்ன சிவகாமி… காபி கசக்குது
சீனி போடலியா?’’ என்றார்.
‘‘இல்லீங்க… ரேஷன் கடையில சொல்லி,
இந்த மாச 5 கிலோ சர்க்கரையையும், அடுத்த மாச 5 கிலோ சர்க்கரையையும் சேர்த்து வாங்கிக்கிறதா
ஏற்பாடு பண்ணியிருக்கேன். வெளியே 20 ரூபா இல்ல விக்குது. கல்யாணத்துக்கு 10 கிலோ சர்க்கரை
தேவைப்படுங்க. வீட்டுல இருக்கிற சர்க்கரைய இந்த மாசத்தில இன்னும் நாலு நாள் ஓட்டணும்ல…
அதனாலத்தான் கொஞ்சமாக போட்டேன். கொஞ்சம் சமாளிச்சுங்கோங்க…’’ என்றாள் சிவகாமி.
மனைவியின் சிக்கனம் வியக்க வைத்தது
ராகவனுக்கு.
சிவகாமியிடம் பிஎப் பணம் ரூ.3.5 லட்சத்தை எடுக்க விண்ணப்பித்துவிட்டதை
கூறினார்.
‘‘அப்படிப்பார்த்தாலும் நம்ம பட்ஜெட்
படி இன்னும் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படுமேங்க… என்னப் பண்ணப்போறோம்?’’ என்று கேட்டாள்
சிவகாமி.
‘‘பார்ப்போம்…’’ என்று ஒரே வார்த்தையில்
முடித்தார் ராகவன்.
‘‘நான் போட்டு வச்சிருக்கிற ஏலச்சிட்டில்
இருந்து ஒரு 25 ஆயிரம் ரூபா எடுத்துக்கலாம்ங்க…’’ என்றாள் சிவகாமி.
யோசனையில் இருந்த ராகவன், ‘‘ம்…’’
என்றார்.
‘‘இந்த குழம்புப் பொடி, சம்பார்
பொடி எல்லாம் வெளியே வாங்க வேணாம். நானே செஞ்சுடுவேன்… வழக்கமா நான் வாங்குற ரமேஷ்
ஸ்டோர்லேயே அதை புக் போட்டு வாங்கிடுறேன். அதுல ஒரு அஞ்சாயிரம் மிச்சமாகும்’’ என்றாள்
சிவகாமி.
மீண்டும் ‘‘ம்…’’ கொட்டினார் ராகவன்.
‘‘நம்ம பங்கஜம் மாமி வீட்டுக்காரர்,
டிநகர்ல இருக்கிற ராஜா கல்யாண மண்டபத்தில மேனேஜரா இருக்கிறாராம். மாமிக்கிட்ட நான்
என் நிலைமையை சொல்லி ஏதாவது ஹெல்ப் பண்ணுங்கண்ணு கேட்டேன். ரெண்டு நாளா மண்டபத்தை புக்
பண்றதால ஒரு 15 ரூபா டிஸ்கவுன்ட் வாங்கித்தர்றேன்னு அவங்க வீட்டுக்காரர் சொன்னாராம்…
அதனால அதிலேயேயும் நமக்கு ஒரு 15 ஆயிரம் ரூபா மிச்சப்படுத்தலாம். அப்புறம் இந்த பூவுக்கும்
ஏற்பாடு பண்ணிட்டேன். மொத்தமா நம்ம பட்ஜெட்ல என்னால ஒரு ஐம்பதாயிரம் ரூபாய கம்மி பண்ண
முடியுங்க…’’ என்றாள் சிவகாமி.
கேட்டுக் கொண்டிருந்த ராகவனுக்கு
ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் இருந்தே ஒரு பொம்மனாட்டி 50 ரூபாய சேமிச்சு தர்றேன்னு
சொல்றாளேன்னு பெருமையாகவும் இருந்தது.
‘‘சரி சிவகாமி… விடிகாலையில கிளம்பணும்…
நம்ம ஊருக்கு போய்ட்டு வர்றேன்…’’ என்றார் ராகவன்.
‘‘இப்ப எதுக்குங்க ஊருக்கு போறீங்க?’’
‘‘எல்லாம் ஒரு காரணமாத்தான். போய்ட்டு
வந்து சொல்றேன்’’ என்றார் ராகவன்.
மறுநாள் காலையிலேயே வண்டி ஏறி ஜோலார்பேட்டைக்கு
வந்துவிட்டார்.
தன் பெரியப்பா மகன் ராமலிங்கம்
வீட்டை நோக்கி நடைப்போட ஆரம்பித்தார்.
அந்த காலத்தில் பெரியவர்கள் சூதுவாது
இன்றி வாங்கிப்போட்ட இடம் இப்போது பாகப் பிரிவினையில் யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல்
கிடக்கிறது. இதில் தன் மீது வழக்கு போட்டிருக்கும் ராமலிங்கத்தின் வீட்டுக்குத்தான்
சென்றுக் கொண்டிருந்தார்.
வீட்டு வாசலில் ராகவன் வந்து நிற்பதை
பார்த்த, ராமலிங்கத்துக்கு அவரை வா என்று கூப்பிடுவதா, வேண்டாமா என்று குழப்பமே ஏற்பட்டுவிட்டது.
வயது அடிப்படையில் இருவரும் சமம் என்றாலும், எப்போதும் மரியாதை குறைவாக பேசியது கிடையாது.
வாசலில் நின்றிருந்த ராகவன், தன்னைத்தான்
பார்க்க வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்ட
ராமலிங்கம், ‘‘வாங்க’’ என்று பொதுவாக அழைத்தார்.
ராமலிங்கத்துக்கு அருகே காலியாக
கிடந்த மோடாவில் அமர்ந்தார் ராகவன்.
இருவருக்கும் இடையே நேரம், ஒரு
சில நிமிடங்கள் மவுனமாக கரைந்தது.
‘‘நல்லா இருக்கீங்களா?’’ என்று
ராகவன் கேட்க, அதே நேரத்தில், ராமலிங்கமும் அதே கேள்வியை அவரிடம் கேட்டார்.
‘‘நான் இருக்கேன்… வீட்டுல எல்லாரும்
நல்லா இருக்காங்களா?’’ என்றார் ராகவன்.
‘‘ம்… எல்லாரும் நல்லா இருக்காங்க…
அங்க ஊருல எல்லாரும் சவுரியமா?’’ என்றார் ராமலிங்கம்.
அதற்குள் வீட்டுக்கு உள்ளே இருந்து
ராமலிங்கத்தின் மனைவி, பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்து, ராகவனை பார்த்ததும், ‘‘வணக்கம்
மாமா…’’ என்றாள்.
‘‘வணக்கம்மா…’’ என்றார் ராகவன்.
அவர் உள்ளே சென்ற சில நொடிகளில்
மீண்டும் மவுனம் அங்கு காய்ந்தது.
திடீரென ராகவன், ராமலிங்கத்தின்
காலில் விழுந்தார்.
‘‘ராமலிங்கம்… எனக்கு வேறு வழி
தெரியலை…. என்னை காப்பாத்துப்பா’’ என்று கதற ஆரம்பித்தார்.
‘‘ராகவன் என்ன இது… எந்திரிங்க…’’
என்று தோள்பட்டையை தூக்கி எழுப்பினார்.
தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து
கண்ணை துடைத்துக் கொண்டார் ராகவன்.
தன் குடும்ப ரத்தம் கதறுவதை பார்த்து
பொறுக்காமல், ‘‘என்ன ராகவன் என்ன பிரச்னை?’’ என்று ஆறுதலாக கேட்டார் ராமலிங்கம்.
‘‘பொண்ணுக்கு திடீர்னு கல்யாணம்
நிச்சயமாயிடிச்சு… ஆன கையில பெருசா ஒண்ணும் இல்ல… என்கிட்ட இருக்கிற ஒரே ஆதாரம் என்
இடம்தான். அதுவும் கேஸ்ல இருக்கிறதால ஒண்ணும் பண்ண முடியாம இருக்கு… அந்த இடத்தை நீங்களே
கூட எடுத்துக்கோங்க… எனக்கு பணம் ஏற்பாடு பண்ணிக்குடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்…’’
என்றார் மெல்லிய குரலில்.
‘‘வயசு முறுக்கில போட்ட கேஸ்பா
அது… இப்போ எனக்கும் வயசாயிடிச்சு… என் மக கல்யாணத்தில நான் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும்.
என்ன எனக்கு ரெண்டு பசங்க… அவங்க நல்லா சம்பாதிக்கிறதால… எனக்கு பணம் பிரச்னையா இருக்கல…
ஆனா, அது உரிய நேரத்தில வந்து சேர்றதில தான், மனக்கஷ்டம் ஆயிடிச்சு… எனக்கே இந்த நிலைமைனா…
நிச்சயம் நீங்க என்ன பாடு படுவீங்கன்னு என்னால நல்லாவே உணர முடியுது… கவலைப்படாதீங்க…
அந்த நிலத்தை நானே எடுத்துக்கிறேன்… இன்னைக்கு ரேட்டுக்கு உங்க நிலம் மட்டும் 3 லட்சத்துக்கு
போகும்…’’ என்று நிறுத்திய ராமலிங்கம், ‘‘இதே வர்றேன்’’ என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.
அதற்குள் ராமலிங்கத்தின் மனைவி,
மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.
வெயிலில் நடந்து வந்த களைப்புக்கு
மோர், தொண்டைக்கு இதமாக இருந்தது.
உள்ளே இருந்து வந்த ராமலிங்கம்,
‘‘இந்தாங்க… என்னால முடிஞ்ச உதவியா ஒரு லட்சம் சேர்த்து 4 லட்சமா குடுக்கிறேன்’’ என்று
இரண்டாயிரம் ரூபாய் கட்டு இரண்டை நீட்டினார் ராமலிங்கம்.
மீண்டும் கதறிவிட்ட ராகவன், அவரது
காலில் விழப்போனார்.
‘‘அட என்னப்பா… இது கால்ல எல்லாம்
விழுந்துட்டு, நல்லபடியா கல்யாணத்த நடத்து…
எங்களுக்கும் பத்திரிகை வை நாங்களும் குடும்பத்தோட வர்றோம்… இத்தோட நம்ம பகையும்
ஒழியட்டும்’’ என்றார் ராமலிங்கம்.
கையெடுத்து கும்பிட்டுவிட்டு, பணத்தை
பெற்றுக் கொண்டு கிளம்பினார்.
ராமலிங்கம் எவ்வளவோ சாப்பிட வற்புறுத்தியும்,
கல்யாண வேலை இருப்பதாகக் கூறி சென்னைக்கு கிளம்பினார் ராகவன்.
நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன.
ஒரு வழியாக பிஎப் பணம் வந்து சேர்ந்திருந்தது.
சிவகாமி சொன்னபடி, பங்கஜம் மாமியின்
கணவரின் உதவியுடன், கொஞ்சம் பெயர் வாங்கியிருந்த ராஜா கல்யாண மண்டபத்தை புக் செய்துவிட்டார்.
இதோ இன்னும் ரெண்டு நாளில் கல்யாணம்.
முடிந்த வரையில் பணம் பிரட்டியும்
கூட, கடைசி நேர செலவுகள் சற்று அதிகரிக்கத்தானே செய்யும்.
என்ன செய்வது என்று தெரியாமல் அறையில்
அங்கும், இங்கும் நடந்து கொண்டிருந்தார் ராகவன்.
கணவரை பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி,
உள்ளறைக்கு சென்றுவிட்டு, சில நிமிடங்களில் திரும்பி வந்தாள்.
வந்தவள் கணவனிடம் தன் தாலியை எடுத்து
நீட்டினாள்.
‘‘என்னது…?’’ என்று புரியாமல் விழித்தார்
ராகவன்.
‘‘நீங்க பணத்துக்கு படுற கஷ்டம்
எனக்கும் தெரியுங்க… இந்த தாலிச்சரடு நாலு பவுன்… எங்கம்மா எனக்கு செஞ்சு போட்டது…
இதை வித்தா இன்னைக்கு காசுல எப்படியும் ஒரு லட்சம் தேரும்… பேசாம வித்துட்டு வந்துடுங்க…
நமக்கு பின்னாடி எல்லாம் நம்ம பொண்ணுக்குத்தானேங்க… இது வயசான என் கழுத்தில இருக்கிறதை
காட்டிலும், அவ கல்யாணத்துக்கு உதவினா எனக்கு சந்தோஷம் தாங்க…’’ என்றாள் சிவகாமி.
அது சந்தோஷமா… சிவகாமியின் மீதான
பாசமா என்று தெரியவில்லை. டக்கென்று சிவகாமியை கட்டிப்பிடித்துக் கொண்டார் ராகவன்.
கல்யாண ஜாம், ஜாமென்று நடந்தது.
‘‘ராகவன் கல்யாணத்தை ஜமாய்ச்சுப்புட்டீங்க…
சபாஷ்’’ என்று வந்து அமர்ந்தார் ராமலிங்கம்.
‘‘எல்லாம் நீங்க பண்ண உதவிதாங்க…
அன்னைக்கு பெருந்தன்மையா உடனடியா வழக்கை வாபஸ் வாங்கிக்கிறதுக்கும், இடத்தை நீங்களே
வாங்கிக்கிறதுக்கும் ஒப்புக்கிட்டு பணம் குடுக்காம இருந்திருந்தா… இந்நேரம் என்னால
நினைச்சுக்கூட பார்க்க முடியல…’’ என்று தழுதழுத்தார் ராகவன்.
‘‘ஆ… ஊன்னா… மறுபடியும், மறுபடியும்
அதை ஆரம்பிச்சுடுவியே… அத விடுப்பா… நான் சொல்ல வந்தது வேற…’’ என்று ராமலிங்கம்.
‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டார்
ராகவன்.
‘‘உங்களோட இடம் நாலு லட்சம் ரூபாய்க்குதான்
போகுது… நான் ஒரு லட்சம் குறைச்சு சொல்லி, ஒரு லட்சத்தை சேர்த்து தர்ற மாதிரி 4 லட்சத்தை
குடுத்தேன்…’’ என்றார் ராமலிங்கம்.
‘‘எப்படியோ… நீங்க கரெக்ட்டாதானே
குடுத்திருக்கீங்க… அதுவும் சரியான நேரத்தில…’’ என்றார் ராகவன்.
‘‘அதில்லப்பா… கல்யாணத்தில எவ்வளவு
காசிருந்தாலும் கரைஞ்சிடும். அது ஏழையில இருந்து பணக்காரன் வரைக்கும் எல்லோருக்கும்
நடக்கிற விஷயம்தான். அதனாலத்தான் என்னோட ஒரு லட்சத்தை கல்யாணத்துக்கு அப்புறமா குடுக்கலாம்னு
நினைச்சிட்டு, உங்ககிட்ட மாத்தி பேசினேன். இந்தாங்க… கல்யாணத்துக்கு என் மொய்யா நினைச்சிக்கிடுங்க…’’
என்று ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார் ராமலிங்கம்.
ராகவனுக்கு கண்ணீர் விடுவதை தவிர
வேறு எதுவும் தெரியவில்லை.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.