05 March 2020

தவிச்ச வாய்க்கு....

‘என்னங்க இன்னைக்கும் நீங்க கலெக்டர் ஆபிசுக்கு போய்த்தான் ஆகணுமா?’’ தள்ளாத வயதில் படுக்கையில் இருந்து எழ முடியாமல் இருந்த சிவகாமி, கணவன் ராமசாமியிடம் கேட்டாள்.‘‘ஆமா… சிவகாமி, சுதந்திர போராட்டத்தில நாம கூட்டம், ஆர்ப்பாட்டம், சிறைன்னே காலத்தை கழிச்சுட்டோம்… நம்மள காப்பாத்த என் பிள்ளைக் குட்டிங்களா இருக்கு. அரசாங்கம் நம்மள மாதிரி தியாகிங்க சிகிச்சைக்காக பணம் கொடுக்குதாம். அது கிடைச்சுட்டா… உனக்கு நல்லபடியா ஆப்ரேஷன் முடிச்சிடலாம். இன்னைக்கு வா, நாளைக்கு வான்னு அந்த கிளார்க் தம்பீ சொல்லுது… அவங்க எதையோ எதிர்பார்க்கிறாங்க போல… என்ன பண்றது கண்ணம்மா… என்கிட்டதான் பணம் இல்லையே…’’ நொந்துக் கொண்டார் ராமசாமி.‘‘என் சாமீ… உங்களுக்கு அலைஞ்சு, திரியுற வயசா… விடுங்க… இந்த கட்டை அப்படியே போயிடும். தூக்கிப்போட்டு போங்க… எனக்காக எல்லாம் அலைய வேண்டாம். என் பக்கத்திலேயே இருங்க சாமீ. அதுபோதும்’’ படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாவிட்டாலும், கணவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் சிவகாமி.‘‘கண்ணம்மா இப்படியெல்லாம் பேசக்கூடாது. நீ போயிட்டா… எனக்கு யார் இருக்கா சொல்லு?. இந்த கிழவனை அநாதையா விட்டுட்டு போகணும்னு உனக்கு எவ்வளவு நாளா ஆசை?’’ கேட்டார் ராமசாமி.‘‘அதில்ல சாமீ… எனக்காக நீங்க படுற கஷ்டத்தை பார்க்க முடியல… அந்த கருத்த மாடன் என் வயித்தில ஒரு புழு, பூச்சியையும் குடுக்காம உட்டுட்டான். நமக்குன்னு ஒரு பிள்ளை இருந்திருந்தா… இந்த நிலைமை நமக்கு வந்திருக்குமா?’’ கண்ணீர் வடித்தாள் சிவகாமி.‘‘அட என் செல்லம்… பிள்ளை இருந்தா மட்டும் என்ன செய்திட முடியும். அரசாங்க உத்தியோகத்தில இருக்கிற ஆளுங்க… வயசானவங்களோட நிலைமை புரிஞ்சுக்கிறாத வரை யாருமே எதையுமே செய்திட முடியாது. அது சரி விடு… உனக்கு சாப்பாடு ஆக்கி வச்சிருக்கேன். பசிச்சா மோர் ஊத்தி சாப்பிடுமா… நான் அந்த ஆபீசர போய் ஒருவாட்டி பார்த்துட்டு வந்துடுறேன்’’ என்று மனைவியின் கட்டிலில் இருந்து எழுந்தார்.தள்ளாத வயதில், தனலாய் கொதிக்கும் வெயிலி்ல் கணவன் கிளம்பிச் சென்றதை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் சிவகாமி.கலெக்டர் அலுவலகம், எப்போதும் போல் பரபரப்பாக இருந்தது. மனு கொடுப்பவர்கள் அந்தபக்கமும், இந்த பக்கமும் ஆளாய் பறந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மனு எழுதிக் கொடுக்கவென்று ஒரு நாலு பேர் சின்ன டெஸ்க்கை வைத்து எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்த காலத்திலும் கூட அரசாங்க அதிகாரிகளின் பேச்சை தட்டாமல் சிலர் டைப் செய்வதற்காக, எழுத்தர்களின் முன்பு காத்திருந்தனர்.இரண்டு மாடி ஏறி, தியாகிகள் ஓய்வூதியத்துறை என்று எழுதப்பட்டிருந்த அறைக்கு நுழைந்தார்.பேன் சுற்றுகிறதா, இல்லை நாலா பக்கமும் சுற்றி பார்க்கிறதா என்று தெரியாத வகையில், லொட, லொட என்ற சத்தத்துடன் சுற்றிக் கொண்டிருந்தது.50 வயதை எட்டிய, பெரிய மீசையுடன் கூடிய அதே கிளார்க் தன்னுடைய இருக்கையில் பைல் ஒன்றை வைத்துக் கொண்டு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்.அவர் முன்பு போய் நின்றார் ராமசாமி.‘‘வாங்கய்யா… நான் சொன்ன மாதிரி நீங்க சிறையில இருந்து விடுலையாகிறப்போ குடுக்கிற லெட்டரை கொண்டு வந்திட்டீங்களா?’’ கேட்டார் கிளார்க்.‘‘ஐயா… நான் சிறைக்கு போய் 70 வருஷத்துக்கு முன்னாடி. இப்போ போய் அந்த கடுதாசியை கேட்டா நான் எப்படிங்கய்யா குடுக்க முடியும்…’’ மெல்லிய குரலில் கூறினார் ராமசாமி.‘‘அப்போ நாங்க கேட்கிறத குடுத்துட்டு, வேலைய முடியும்…’’ என்று பட்டென்று கூறினார் கிளார்க் ராகவன்.‘‘ஐயா… இந்த தள்ளாத வயசில தியாகிங்க பென்ஷன்லதான் என் வாழ்க்கையே ஓடுது… இப்போ என் பொஞ்சாதி படுத்த படுக்கையா இருக்கா… அவ வயத்தில பெரிய கட்டி இருக்காம். அதை ஆப்ரேஷன் பண்ணி எடுக்கலேன்னா… உசுரு போய்டும்னு டாக்டர்ங்க சொல்றாங்கய்யா… அவ மருந்து,மாத்திரைக்கே பல நாள் காசில்லாமல் அலையுறேன்… என்கிட்ட இருந்தா நிச்சயமா உங்களுக்கு குடுத்திடுவேன்… என் கிட்ட எதுவும் இல்லேங்கய்யா… தயவு செஞ்சு… இந்த சிகிச்சைக்காக செலவை கிடைக்க வச்சீங்கன்னா… உங்க குடும்பம் நல்லா இருக்கும்கய்யா…’’ கண்ணில் சட்டென்று எட்டிப்பார்த்த கண்ணீருடன் கைக்கூப்பி கெஞ்சினார் ராமசாமி.வரிகொடா இயக்க ஆர்ப்பாட்டத்தில் வெள்ளையன் நடத்திய தடியடியின்போது கூட தலையையோ, உடலையோ சாய்க்காமல் கம்பீரமாக நின்ற காட்சிகள், ராமசாமியின் உள்ளத்தில் நிழலாடியது.‘‘இந்த பாரு பெரிசு… எனக்கும் குடும்பம், குட்டி இருக்குல்ல… அரசாங்கம் குடுக்கிற சம்பளம் எந்த மூலைக்குய்யா பத்தும்? நானும் ஆடம்பரமா வாழ வேணாமா? உன்னை மாதிரி நாலு பேர் சொன்னா… நான் எங்கே போறது? இந்த பதவிக்கு வர்றதுக்காக சொலையா மூணு லட்சம் ரூபா குடுத்திட்டு வந்திருக்கேன்… சும்மா சோகப்பாட்டு பாடிட்டு திரியாத… மாசா, மாசம் சும்மா கிடைக்கிற பணத்தில கொஞ்சம் குடுய்யான்னா… தினமும் வந்து பஞ்சப்பாட்டு பாடிட்டு இருக்கே… போ பெருசு… பிராணன வாங்காத… முடிஞ்சா பணத்தோட வா… இல்லாட்டி இந்தப்பக்கமே வராத’’ என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியே விரட்டினார் ராகவன்.கண்ணில் வழிந்த கண்ணீரை தோளில் கிடந்த துண்டால் துடைத்தபடி அங்கிருந்து வெளியேறி வந்தார் ராமசாமி.வாசலில் நின்றிருந்த பியூன் கேட்டான். ‘‘ஏன்யா… பெருசு… நீயும், உன் ரெண்டு பேருமே தியாகிங்க தானே… அப்புறம் நல்லா பென்ஷன் கிடைக்குமேய்யா…?’’‘‘இல்ல தம்பீ… என் பொஞ்சாதிக்கு பென்ஷன் வாங்கல… வீட்டுல ஒருத்தருக்கு போதும்னு எனக்கு மட்டும்தான் எழுதிக்கொடுத்தோம்’’ என்றார் ராமசாமி.‘‘என்னா… பெருசு… பொழைக்கத் தெரியாத ஆள இருக்கே… இந்த ஆள் வேற பணத்தை வாங்காம, பேனா மூடிய கூட திறக்க மாட்டானே… போயி ஏதாவது பணத்துக்கு வழி பண்ணு பெருசு… பார்த்தா… பாவமாத்தான் இருக்கு’’ என்று தலையில் அடித்து கொண்டார் பியூன்.கலெக்டர் அலுவலகத்தின் இரண்டு மாடி  இறங்கி வந்ததில், மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது ராமசாமிக்கு. பையில் பார்த்தார், வரும் போது டிக்கெட் எடுத்த 10 ரூபாய் போக, ஒரு இருபது ரூபாய் நோட்டு மிச்சம் இருந்தது. குளிர்பானம் கூட வாங்கி குடிக்க முடியாது. அப்படியே மெதுவாக நடந்து ரோட்டுக்கு வந்தார். அங்கு தன்னைப்போல சில பெரியவர்கள் மட்டும் இருந்தார்கள்.எல்லோரும் பஸ்சுக்காக காத்திருந்தார்கள்.அப்போது, ராகவனும் பஸ் ஸ்டாண்டை நோக்கி வருவது தெரிந்தது.அவரது நடையில் கொஞ்சம் அவசரம் தெரிந்தது.அவரை ராமசாமி பார்த்து கொண்டிருந்தபோதே, சடாரென்று கீழே விழுந்தார்.பஸ் ஸ்டாண்டில் இருந்த தன் வயதையொத்த பெரியவர்களுடன், ராமசாமியும் அவரை நோக்கி சென்றனர்.கீழே விழுந்த ராகவன் தண்ணீ, தண்ணீ… என்று முனகிக் கொண்டிருந்தார்.அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஒரு பெரியவர், ‘‘ராட்சசன் இவனா… பணம் குடுத்தாத்தான் கையெழுத்தே போடுவேன்னு சொன்னவன். இவனுக்கு எல்லாம் தண்ணீ குடுக்கிற விட விஷத்தை வாயில ஊத்தி அப்படியே அனுப்பிடணும்… உனக்கு எல்லாம் கடவுள் நல்லாத்தான் தண்டனையா குடுக்கிறான்’’ என்று கூறியபடி சடாரென்று அங்கிருந்து கிளம்பினார்.மற்றொரு பெரியர், அவர் ஏற்கனவே ராமசாமிக்கு முன்னதாக வரிசையில் நின்றிருந்தவர். ‘‘அவரு சொல்றதும் சரிதான்… இவன் எல்லாம் இப்படியே விக்கி, விக்கி சாகட்டும்… வாங்க பெரியவரே அவன் கிடக்கட்டும்’’ என்று துண்டால் விசிறிக் கொண்டிருந்த ராமசாமியை இழுத்தார்.அவரது கையில் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டவர், எங்கிருந்து அவ்வளவு பலம் வந்தது என்று தெரியாமல் அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு ஓடி, ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வந்து, அநாதையாக கிடந்த ராகவனின் கழுத்தை மடியில் வைத்து குடிக்க வைத்தார்.சரியான வெயிலில் தண்ணீர்ச்சத்து இல்லாமல் மயங்கி விழுந்த ராகவன் மெல்ல எழுந்து உட்கார்ந்தார்.பெரியவர்கள் பேசிய பேச்சு இன்னமும் அவரது மூளையில் நங்கு, நங்கு என்று எதிரொலித்துக் கொண்டிருந்தது.ராமசாமியை பார்த்து கையெடுத்து கும்பிட்டார் ராகவன். அதைத்தவிர அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.முதுகில் தட்டிவிட்டு, வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார் ராமசாமி.ராமசாமியின் மனைவி சிகிச்சை செலவுக்காக அவர் விண்ணப்பித்திருந்த மனுவில் கையெழுத்துப்போட மீண்டும் தனது அலுவலகத்துக்கு எழுந்து நடக்க ஆரம்பித்தார் ராகவன்.-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.
x

No comments:

Post a Comment

Thanks